Wednesday, August 29, 2007

ஒரு கவிஞன் ஒரு கவிதை

நம்ம நடேசு இருக்கான் பாருங்க நடேசு, அவனே தாங்க, அவனும் வெகு காலமா இந்த கவிதை கிவிதை எல்லாம் எழுதிட்டு தான் இருக்கான், என்ன ஒரு பயலும் அதை கவிதைன்னு ஒத்துகிடறதில்ல.. அவன் அதுக்கெல்லாம் சளைச்சுகிறதே இல்லை. 'நாலு பேரு நாலும் சொல்லுவாங்க, அதுக்காக நம்ம நம்ம கடமைய கை விட்றமுடியுமா என்ன?'ன்னு சொல்லிட்டு எழுதி தள்ளிகிட்டே தான் இருக்கான். இன்னைக்கு நேத்து ஆரம்பிச்சதுங்களா அது, பத்தாப்பு படிக்கும்போதும் அமராவதி ஸ்கவுட்கேம்ப்'ல மூணு நாளும் பார்க்கும் போதெல்லாம் இவன பார்த்த்து சிரிச்ச அவிலா'ப்ரின்ஸ்மேரி, நாலவது நாள் கேம்ப் முடிஞ்சு அவுங்கவுங்க ஸ்கூல்பஸ்ல ஏறும் போது இவன்கிட்ட ஒரு 'சீ..யூ' கூட சொல்லிக்காம போனாளே, அன்னைக்கு தான் அதுவரைக்கும் கோணக்கால் நடேசனா சுத்திட்டு இருந்தவன் 'நடேச கவிஞனார்'ன்னு ஆனது, அந்த கொடுமை இன்னைக்கு வரைக்கும் தொடருது.

ஒரு 'சீ.. யூ' கூட கிடைக்கலையேன்னு மனசு வருத்தப்பட்டு எழுத ஆரம்பிச்சது, அது பாட்டுக்கு காலத்துக்கு தகுந்தாப்புல விதவிதமா மாறிட்டு தாங்க இருந்துச்சு, மூணு வரியுல எழுதினா ஹைக்கூ, மடிச்சு போட்ட உரைநடையா இருந்தா புதுக்கவிதை, செவப்பு சாயத்துல அடிபட்ட மக்களுக்காக, பிரிவு வலியுல, சமுக கோவத்துல'ன்னு பல விதமா எழுதிதள்ளிட்டடே தான் இருக்கான். ஆனா பாருங்க எழுதினது அத்தனையும் எல்லாருக்கும் வாசிக்க விடறதில்லை.. எதுக்கு வம்புன்னு தான். மனுசங்க எல்லா நேரத்துலயும் அஹிம்சைய கடைபுடிக்கறதில்லையே, பல நேரத்துல கவிதைக்கு விமர்சணமா அடி உதை கிடைக்க ஆரம்பிச்சதும், அவனுக்குன்னு தனியா ஒரு நோட்ட போட்டு வச்சுக்க ஆரம்பிச்சுட்டான்.எங்க கூட்டத்துல என்னதான் அவன லூசு நடேசுன்னு கூப்பிட்டாலும் இந்த வகையில நடேசு புத்திசாலி தான்.

சில நேரத்துல அவன் எழுதிற கவிதை அவனுக்கே புடிச்சு போச்சுன்னாவோ, இல்ல அவனுக்கு அடுத்த தடுப்புல உக்காந்திருக்கற சின்ன புள்ளைக்கு புடிச்சிருந்தாலோ, பொதுவா அப்ரைசல் கிட்ட வர்ற காலத்துல இவன் கிறுக்கிறது அந்த புள்ளைக்கு புடிக்க ஆரம்பிச்சுரும். அந்த மாதிரி நேரத்துல தான் நமக்கு கோடும் கட்டமும் சரி இல்லாம போறது. அப்படி புடிச்சு போன கவிதை எல்லாம் நம்ம மெயில் பாக்ஸ்ல வந்து நிறையும். அப்படித்தான் போன வாரம் ஒரு கவிதை வந்துச்சு, எனக்கே அது ரொம்ப புடிச்சிருந்துன்னா பாருங்களேன். :) சிவப்போ, வலியோ, கோவமோ இல்லாம ஒரு சிற்றின்ப கவிதை (எது சிற்றின்பம், எது பேரிண்பம்'ன்னு ஒரு குளருபடி இருக்குதுதான்.. இப்போதைக்கு நடைமுறையில இருக்கிற கருத்த எடுத்துக்குவோம்) உருகி உருகி ஒரு காதல் கவிதை, ஒரு காதலன் தன் காதலிக்காக தன் காதலை சொல்ல எழுதின மாதிரின்னு வச்சுக்கோங்களேன். காலம்போன காலத்துல நடேசனுக்கு எதுக்கு காதல் கவிதைன்னு மனசு கேட்டாளும்.. கவிதை சுமாரா நல்லா தான் இருந்துச்சுங்க.



இந்த மெயில் அனுப்பிற விசயத்துல நடேசு பாகுபாடெல்லாம் காட்டுறதில்லைங்க.. தெரிஞ்சவன், தெரியாதவன், ரெண்டு நிமிச சந்திப்புல மெயில் ஐடி குடுத்தவன், ஃரிபரன்ஸ்சுக்காக மெயில் அனுப்பிச்சவன், இப்படி ஒரு வகைதொகையே இல்லாம எல்லாருக்கும் அடிச்சு விடுறது தான் அவன் வழக்கம்.. வழக்கபடி அந்த காதல் கவிதையும் அனுப்பிச்சு வச்சான். அங்க தான் அவனுக்கு கோடும் கட்டமும் சரி இல்லாம போச்சு. ஊரு உலகம் பூராவும் அனுப்பிச்சவன், அப்படியே சுமதி'க்கும் அனுப்பிச்சு வச்சிருக்கான். சுமதி யாருன்னு கேக்கரீங்களா, சொல்லுவனில்ல.. இவ்வளவு சொன்னவன் அதை சொல்ல மாட்டனா? சுமதி'ய நானும் அவனும் தான் போன வாரம் சந்திச்சோம், வழக்கம் போல வார இறுதிக்கு ஊரு பக்கம் போகும் போது ரயில் பயணத்துல எங்க கூட ஒரு கூபே'வில வந்த புள்ளை. இங்க தான் புதுசா ஆணிபுடுங்கிற வேலையில இருக்காம்.. விடிய விடிய நடேசு கூட பேசிக்கிட்டே தான் வந்துச்சு, நமக்கு இந்த விசயமெல்லாம் அவ்வளவு விவரம் பத்தாததால, நான் பாட்டுக்கு மேல் பர்த்துல ஏறி சால்வைய போத்தி கனவுல இறங்கிட்டேன்.

இவன் பாட்டுக்கு bccல போட்டு எல்லாருக்கும் கவிதைய அனுப்பி வைக்க, அந்த புள்ளைக்கும் அது போயிருக்கு. எப்பவும் போல இல்லாம கவிதை வேற கொஞ்சம் சுமாரா இருக்க, அதுல புள்ளை லேசா ஜெர்க் ஆயிருச்சு போல இருக்கு. மறுநாள் பதட்டமா நடேசு கிட்ட இருந்து ஃபோன் வருது 'மாப்ள சுமதி கிட்ட இருந்து ஒரு மெயில், உனக்கு ஃபார்வர்ட் செஞ்சிருக்கேன் கொஞ்சம் பாரு'ன்னு.. என்னடா இது ஒரு சிட்டு கிட்ட இருந்து வந்த மெயில நமக்கு ஏன் அனுப்பியிருக்கான்னு ஒரு குழப்பம் வந்தாலும், பொதுவாவே நமக்கு இருக்கிற கிசுகிசு படிக்கிற ஆர்வத்துல நான் ஆணிய பாதியில விட்டுட்டு மெயில் பக்கம் போனேன். ம்ம்.. நடேசு பதட்டமா இருந்த காரணம் நமக்கும் புரிஞ்சுது.. இவன் ஊருக்கே அனுப்பின கவிதைய தனக்கு தான் அனுப்பியிருக்கான்னு நினைச்சிருச்சு போல அந்த புள்ளை, கவிதையில இவன் சொன்ன காதல் தன் கிட்ட தான்னு நினைச்சு அங்க இருந்து ஒரு பதில் 'எனக்கும் ஓகே, நீங்க ஃபார்மலா உங்க வீட்டு பெரியவங்க மூலமா வந்து எங்க வீட்டுல பேசுங்க'ன்னு நடு நடுவால மானே தேனே எல்லாம் போட்டு, எனக்கு சிரிக்கிறதா அழுவறதான்னு தெரியல.. இப்பத்தான் முப்பதா தாண்டற கோப்புல நடேசுக்கு நல்ல இடமா ஒன்னு வந்திருக்கு, தேதி கூட முடிவாகி மணடபத்துக்கு அட்வான்ஸ்சும் குடுத்திருக்கு, இந்த நேரத்துல இப்படி ஒரு கலாட்டா. :)

சரி ஆயிரம் இருந்தாலும் நம்ம நண்பன் நடேசன் அவனுக்கு உதவாட்டி எப்படின்னு அவன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அந்த புள்ளைக்கு ஒரு நீளமான மெயில் தட்டினேன்.. இப்படி இப்படி நடேசு இந்த மாதிரி கவிதை கிறுக்கெல்லாம் ரொம்ப காலமா இருக்குது.. நீ தான் தப்பா நினைச்சுட போல இருக்கு அப்படி இப்படின்னு வழக்கம் போல நீட்டு முழக்கி விவரமா எழுதி அனுப்பிச்சேன்.

அனுப்புன மறுநாள் சுமதி கிட்ட இருந்து பதில் வந்திருச்சு.. நம்ம நடேசு பய கிட்ட எல்லாம் சரி ஆயிருச்சு, குழம்பாம வேலைய பாருன்னு சொல்லிட்டேன். அவன் தான் சும்மா எப்படி? என்ன?ன்னு விவரம் கேட்டுக்கிட்டே இருக்கறான்.. நான் சொல்லவே இல்லை.. அவனுக்கு வருத்தம் தான்.. இருந்தாலும் அதுக்காக அதை எப்படிங்க அவன் கிட்ட சொல்றது.. நீங்களே சொல்லுங்க.

அந்த புள்ளை குடுத்த பதிலோட சாரம்சம் இது தான் "இந்த கவிதை எழுதிற நாய்கள எல்லாம் சுட்டு கொல்லனும், சும்மா வார்த்தைக்கு வார்த்தை பொய்ய எழுதி தள்ளராங்க.. இனிமேல் செத்தாலும் ஒரு கவிஞன் கூட நட்பு வச்சிக்க மாட்டேன்" அப்படி இப்படின்னு ஒரு முழ நீளத்துக்கு கவிஞர்களையும் கவிதைகளையும் திட்டு திட்டுன்னு திட்டி. இதைய போயி அவன் கிட்ட சொல்லனுமா என்ன..?


நன்றி : கலீல்ஜிப்ரன் :)
pic : http://www.joycegordongallery.com/

--
#243

Tuesday, August 28, 2007

Stressbuster

பெட்ரமாக்ஸ்சே தான் வேணுமா? இந்த பந்தமெல்லாம் புடிச்சுக்க குடாதா?



------------------------

கழுத மேய்க்கிற பையனுக்கு இவ்வளவு அறிவான்னு, அவனுகளுக்கு பொறாமைடா..

அக்காங்ண்ணே..!!






--
#243

Monday, August 13, 2007

ர்ரிப்பீட்டு

கடைசியா அஞ்சு வருஷம் முன்னாடி ஒரு தை மாசத்து நிறைஞ்ச முகூர்த்த நாள்ல, வடக்கத்திக்காரங்க பாணியில கட்டுன ஒரு பஞ்சுமுட்டாய் கலர் பட்டுபுடவையில, லார்ட்ஸ் ஹாஸ்பிடல் சர்ஜன் 'ரஞ்சித்'கூட ஜோடியா நம்மூர் வழக்கப்படி 'வரவேற்ப்பு'க்கு நின்னப்ப பார்த்தது, அதுக்கப்புறம் இப்பத்தாங்க, நேத்து சகா ஒருத்தன வண்டி ஏத்திவிட போனப்ப எத்தேசையா சுமி'ய பார்த்தேன். கொஞ்சம் பூசினாப்புல ஆயிட்டா.




'ஹேய்..எப்படிப்பா இருக்கே?' இன்னும் கண்ணுல அதே சிரிப்பு..
'ரஞ்ச், இது ராஜ், என் ஸ்கூல்மேட், நம்ம மேரேஜ்ல மீட் பண்ணினது, டு யூ ரிமம்பர்?'.. டாக்டர் அப்ப மாதிரியே ட்ரிம்மா இருக்காரு.முன்னந்தலை தான் கொஞ்சம் ஏறியிருக்கு. கல்யாணத்தன்னைக்கு ஒரு பூங்கொத்து குடுத்து சம்பிரதாயமா பேசுனது, அதுவும் ஆறு வருஷம் முன்னாடி, பாவம் அவருக்கு எப்படி ஞாபகம் இருக்கும்.. இருந்தாலும் 'யா!யா!..ஹவ் டு யு டூ?'ன்னு ஒரு ஆச்சிரிய புன்னகையோட கைகுடுத்தாரு.

ஒரு மாச லீவுல வந்திருக்காங்களாம், சொந்தக்காரங்க வீட்டுக்கு எல்லாம் போயிட்டு, அப்படியே கொஞ்சம் ஊர்சுத்தல், இப்ப ரஞ்ச்'க்கு எதொ கான்ஃப்ரன்ஸ் அட்டன்ட் பண்ணனுமாம், அதுனால சுமி'மட்டும் சென்னையில இன்-லா வீட்டுக்கு போறதுனால ட்ராப் பண்ண வந்திருக்காராம்..
சுமி சொன்னத சுருக்கி குடுத்திருக்கேன், சரியான வாயாடி.. ஸ்கூல் படிக்கும் போது சுமி, மரக்கடை செட்டியார் பொண்ணு பொன்னரசி, நான், அப்புறம் துரை எல்லாரும் ஒரே பெஞ்ச். (ஃபார் யுவர் இன்போ : நாங்க படிச்சப்போ எங்க ஸ்கூல்ல நாலாவது வரைக்கும் தான் கோ-எட்) பக்கத்துல உக்காந்துட்டு, பெஞ்ச், டேபிள் எல்லாம் பென்சில்ல கோடு போட்டு, இதை தாண்டி உன் நோட்டு, பென்சில்பாக்ஸ் எதுவும் வரக்கூடாதுன்னு என்னையும் துரையனையும் ஒரு வழி பண்ணிருவா.. மிஸ் கிட்ட சொன்னாலும் கடைசியில எங்களுக்கு தான் திட்டு விழும், சில நேரங்கள்ல அடியும்.. ஏன்னா இவ வாய் சாமார்த்தியம் அப்படி, அது போக நம்ம துரையன் ட்ராக் ரெக்கார்ட் அப்படி..(நான் குட்பாய்!)

நாலாவதோட ஸ்கூல் மாறி போயிட்டாலும், அடுத்த வீதியில தான் சுமி'யும் இருந்தாங்கிறதுனால அந்த நட்பு மட்டும் தொடர்ந்துகிட்டே இருந்துச்சு.. நமக்கு சும்மா புஸ்தகத்தை பார்த்தாலே எதோ பேயடிச்ச மாதிரி ஆயிடும், தினமும் 'இப்படியே போனா நீ சினிமா கொட்டாயில முறுக்கு விக்கத்தான் போக போற'ன்னு தினமும் வீட்டுல சாபம் குடுப்பாங்க.. நமக்கு மனசுகுள்ள ஒரே சந்தோஷம், அப்படி போன தினமும் சினிமா பார்க்கலாமேன்னு, அதுனால நம்ம வீட்டாளுக எல்லாம் சேர்ந்து ஒரு முடிவு பண்ணி நான், சிவா, ஸ்ரீ, மங்கை அப்படின்னு ஒரு கூட்டத்தை உருவாக்கி பத்தாவது படிக்கும் போது எல்லாம் சுமி வீட்டுல தான் க்ரூப் ஸ்டடி..
எல்லாரும் ஒழுங்கா படிக்க, நான் மட்டும் மும்முரமா புஸ்தகத்தோட பின்னட்டையில படம் வரைஞ்சுகிட்டு இருப்பேன், சுமி' பயங்கிற தொணதொணப்பு, எதாவது பேசிகிட்டே இருப்பா. 'நான் இன்னைக்கு கருப்பு பென்சில் வாங்கினேன், கருப்பு பேனா வாங்கினேன், கருப்பு டாப்ஸ் வாங்க போறேன்னு, ஒரே கருப்பு புராணமா இருக்கும்..அவளுக்கு கருப்பு ரொம்ப புடிக்க ஆரம்பிச்சிருக்காம், 'ஐ ஹாவ் ஸ்டார்டர்ட் லவ்விங் ப்ளாக்'ன்னு அவ சொல்லும் போதே அவ்ளோ சந்தோஷம் தெரியும் அவ கண்ணுல.. கருப்பா ஒருத்தன தான் கட்டிக்குவேன்னு வேற சொல்லுவா..

நமக்கு வீட்டுல் உக்காந்து வரைஞ்சாத்தான் எங்க அம்மா 'படிக்கறத வுட்டுபோட்டு என்னடா எப்பப்பாரு கிறுக்கிட்டே கிடக்கற'ன்னு தொணதொனக்க ஆரம்பிச்சிருவாங்கன்னு இங்க வந்தா, இவ வேறன்னு ஒரே எரிச்சலா இருக்கும்.. இதுக்கு நடுவால மத்தவங்க வேற பயங்கிர படிப்பாளிக நம்மள இவகிட்ட விட்டுட்டு புஸ்தகத்துகுள்ளார தலைய விட்டாங்கன்னா அவ்ளோ தான், சுமி'யோட அம்மா காம்ப்ளான் கொண்டு வந்தாத்தான் புஸ்தகத்துகுள்ளார இருந்து தலைய எடுக்குங்க.. அன்னைக்கு புஸ்தகத்துகுள்ளார தலைய விட்டது, இன்னைக்கும் கம்ப்யூட்டருக்குள்ளார தலையவிட்டுட்டு கிட்க்கறாங்க.. ஒரு வித்தியாசமும் இல்ல..

அப்படி இருந்த நாங்க இந்த அஞ்சு வருஷமா மட்டுமில்லீங்க, அதுக்கு முன்னாலயும் ஒரு நாலு வருஷம் எந்த தொடர்புமில்லாம தான் இருந்தோம்.. அதுக்கு காரணம் 'சந்துரு', அவனும் எங்க செட்' தான். அவனுக்கு சுமி' மேல 'தெய்வீக' காதல், அப்படித்தான் எங்கிட்ட சொன்னான்!.. நான் இன்னொன்னு சொல்லலையே, சுமி' எங்க ஏரியாவும ரொம்ப பிரபலமான் 'பிகர்', தெரு முக்குல ஒரு கூட்டமே அவ தரிசனத்துக்கு நிக்கும், ஆனா நம்ம தான் பள்ளிகூடம் தாண்டுற வரைக்கும் பச்சபுள்ளையாவே இருந்துட்டமா, அதுனால அந்த தெரு முக்குல நிக்கிற சமாச்சாரத்துல எல்லாம் நான் (அப்போ!) கலந்துகிட்டதில்லைங்க..
(அவங்களும் நம்மள சேத்திக்கலைங்கிறது வேற விஷயம்)

அந்த கூட்டத்துல முக்கியமான் ஆள் இந்த சந்துரு'. நம்மகிட்ட வந்து 'மாப்ளே, நீ தான்எப்படியாவது ஹெல்ப் பண்ணனும்'ன்னு சொல்ல, அதுவரைக்கும் நம்மள ஒரு பொருட்டா கூட சீன்டாத பசங்க, நம்மள வந்து மாப்ளே'ங்கிறானுகன்னு ஒரு மிதப்பாகி நானும் பெருமையா அவன்கிட்ட இருந்து 'லவ்லெட்டர்' வாங்கி போஸ்ட்மேன் வேலை பார்த்தேன், அப்படியே இதை சாக்கா வச்சு, அவனுக கூட்டத்துல கலந்துடனும், நாமளும் அப்படியே ஒரு ஜமாவா தெருமுக்குல நிக்கனும்னு ஒரு நப்பாசை. எவ்ளோ நாள் தான் குட்பாய்'யாவே இருக்கிறது.. !

நம்மள எதோ அல்லக்கை வேலைக்கு அவனுக பயன்படுத்திருக்கானுகங்கிறதெல்லாம் பிற்காலத்துல தான் நமக்கு தெரிஞ்சுது.. அப்படி ஒரு கேடுகெட்ட போஸ்ட்மேன் வேலை பார்த்ததுல தான் சுமி'க்கு பயங்கிற கோபம், என்னை கிட்டத்தட்ட சட்டைய புடிச்சு ஒரு உலுக்கு உலுக்கிட்டா,எப்படிடா நீ இதை செய்யலாம், உன் மூஞ்சியிலயே இனிமேல் முழிக்க மாட்டேன்னு அழுது சத்தம் போட்டுட்டு போயிட்டா...எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு, ச்சே அந்த பெரிய பசங்க கூட்டத்துல சேர ஒரு சான்ஸ் கிடைச்சுது. இவ இப்படி அதை கெடுத்துட்டாலேன்னு.. நல்ல வேளை வீட்டுல யாரு கிட்டயும் சொல்லாம விட்டாளேன்னு ஒரு சந்தோஷம்..

அப்புறம் அப்படியே கொஞ்ச நாள்ல அவுங்க வீட்டுல வேற பக்கம் வீடுகட்டி அங்க குடி போயிட்டாங்க, நாமளும் அப்புறம் +2 பிசி, வெளியூர்ல காலேஜ்ன்னு அப்படியே வேற மாதிரி போயிட்டோம். அப்புறம் அவ கல்யாணத்துக்கு எங்கய்யன் எங்கயோ வேற வேலையா போனதுனால எங்கம்மாவுக்கு சாரதியா போயி, ரிசப்ஷன்ல வாழ்த்து சொல்லிட்டு வந்ததோட சரி.. அதுக்கப்புறம் நேத்து தான் பார்க்கிறேன்...

'வண்டி வேற ஒரு மணிநேரம் லேட்டு, ரஞ்சித்துக்கு எதோ அப்பாயின்ட்மென்ட் இருக்காம், ஒரே போர்ப்பா'ங்க, நான் 'ஃப்ரி தான், நான் இருக்கேன், வண்டி கிளம்பர வரைக்கும்னு' சொல்லி ரஞ்சித்த அனுபிச்சுட்டு நாங்க ரெண்டு பேரும் காபிஷாப்ல உக்காந்து பேசிட்டிருந்தோம்..
மலரும் நினைவுகள் எல்லாம் பேசிட்டு இருந்தோம், அப்போத்தான் சுமி கேட்டா, 'கல்யாணம் எப்படா?'. வர வர யாரை பார்த்தாலும் இதே கேள்விய தான் கேக்குறாங்க, நானும் வழக்கம் போல சிரிச்சுகிட்டே 'பண்ணிக்கலாம்னு' வழக்கம் போல சொன்னேன்.. 'யாராவது பார்த்து வச்சிருக்கியா?' இது அடுத்த கேள்வி.. நான் பதில் சொல்றதுக்கு முன்னாடி அவளே 'உன்கிட்ட போயி இதை கேக்குறேன் பாரு , நீ எங்க போயி...'
'ஏன் அப்படி, என்னை பார்த்தா அவ்ளோ இளக்காரமா இருக்கா என்ன?'
'பின்ன என்ன, உனக்கு என்னைக்கு அதெல்லாம் புரிஞ்சிருக்கு.. சரி அதை விடு.. சிவா,எப்படி இருக்கான்'ன்னு அப்படியே பேச்ச மாத்திட்டா... நானும் கண்டுக்கல.. அப்புறம் ஒரு மணி நேரம் லேட்டுன்ன வண்டி ஒன்னரை மணி நேரம் கழிச்சு கிளம்ப தயாராக, (என்னைக்காவது ஏர்-டெக்கான் நேரத்துக்கு கிளம்புமா.. ஒரு போட்டியே வைக்கலாம் போல அதுக்கு) நாங்க பரஸ்பரம் போன் நம்பர், ஈமெயில் ஐடி எல்லாம் குறிச்சுகிட்டோம்.

போகும் போது கடைசியா 'நீ அப்ப மாதிரி கருப்பு இல்லடா, இப்ப பார்க்க கொஞ்சம் கலராயிட்ட'ன்னு சிரிச்சுகிட்டே கிளம்புனா.. 'ம்ம்.. அப்படியா'ன்னு பக்கத்துல இருந்த கண்ணாடியில பெருமையா பார்த்துகிட்டேன்.. 'அநியாயத்துக்கு பழமா இருக்காதடா, growup man! ஆல் தி பெஸ்ட்'ன்னு சொல்லிட்டு டாடா காமிச்சுட்டு போயிட்டா..



திரும்பி வர்ற வழியெல்லாம் யோசிச்சுகிட்டே வந்தேன்.. 'growup man'?.. நம்மள பார்த்து எதுக்கு அப்படி சொன்னா?? நல்லா வளர்ந்து மலமாடு மாதிரித்தான இருக்கோம்... ம்ம்.. அப்படியே யோசிக்கிட்டே போயி சிக்னல்ல வண்டிய நிறுத்துனேன். இந்த 200 செகன்ட் சிக்னல்ல நிக்கிறது மாதிரி ஒரு கொடுமையே இல்லீங்க.. எப்எம்'ல எதோ இங்க்லீஸ் பாட்டு.. ஆயிரம் இருந்தாலும் நம்மூரு ரெயின்போ மாதிரி வராதுன்னு மனசுகுள்ள சொல்ல சொல்ல.. டக்குன்னு
அவ சொன்னது ஞாபகம் வந்துச்சுங்க 'நீ அப்ப மாதிரி கருப்பு இல்லடா, கொஞ்சம் கலராயிட்ட'..

நமக்கு எல்லாமே லேட்டாத்தான் புரியுது.. இன்னும்..!!



(ஏற்க்கனவே எழுதினது தான்.. ஏன் இங்க மறுபடியும்னு கேட்டீங்கன்னா.. இதுக்கு பேரு தான் நினைவுகுப்பைகள கிளருறது :) )

pic :http://www.martinejardin.com/:


---
#241

Tuesday, August 7, 2007

சொகம்!

ஊருக்கு தெக்கால நெருக்கிட்டு நிக்கிற தென்னந்தோப்புகள தாண்டி, பருவகாலத்துல மட்டும் செவையேன்னு செம்மண்ணு தண்ணி ஓடுற சூலக்கல் ஓடக்கரைக்கு பக்கமா, கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் ஆள்ஆரவம் எதுவுமேயில்லாம வத்தலும் தொத்தலுமா விரிஞ்சு கிடக்கற சோளக்காட்டுக்கு நடுவால, பெரிய சந்தையில தக்காளி கூடை இறக்க போனப்போ ஒட்டஞ்சத்திர துலுக்கன் கிட்ட விடாப்பிடியா பேரம் பேசி மோனக்காரரு வாங்கிட்டு வந்த அந்த நஞ்சுபோன கனகாம்பரக்கலர் ஃபுல்கை அங்கராக்கும் வெளிரிப்போயி நூலெல்லாம் பிரிஞ்ச யானைக்கால் குழாயக்கும் ஊடால பிதுங்கிக்கிட்டு எட்டிப்பார்க்கிற வக்கப்புல்லும், ஒறட்டான் கையில எந்தி கிடக்கற கரித்துணியும், மண்சட்டியில காவியும் கரியும் குழைச்சு போட்ட தல வேசமுமா தன்னந்தனியா வரப்புக்கு நடுவே மூங்ககழியில தொக்கி நின்னுகிட்டிருக்கான் அவன்.


டவுன்கார இஞ்சினீரு தோட்டத்து சாலையில எப்பவும் இளைப்போட கயித்துகட்டில்ல கிடக்கற அவுங்க அப்பாரு மாதிரி, "இப்படி பேச்சு துணைக்கு கூட யாருமில்லாம ரவும்பகலும் காட்டுக்கு நடுவால நின்னு நின்னு சடஞ்சு போயிருப்பே, பாவம் நீயு"ன்னு ஒரு சோலிய அவன தாண்டி போகும் போது கேட்டு வச்சேன்.
"அப்படியெல்லாம் இல்ல.. நாலு உசுர பயமுறுத்தறுதல இருக்கற சொகம் இருக்கே, அது கிடைக்கிற வரைக்கும் ஒரு பொழுது கூட நான் சடஞ்சுக்கமாட்டேன்"
"ஆமாமா, அதென்னமோ நிசம் தான், எனக்கும் அந்த சொகம் தெரியும்" ஒரு நிமிசம் ரோசணையா அவன பார்த்து சிரிச்சுகிட்டே சொல்லிவச்சேன்.
"காஞ்ச வக்கப்புல்ல இப்படி உள்ளார தினிச்சு என்னைய மூங்கிகழியில தூக்கி நிப்பாட்டினவங்களுக்குத்தான் அது தெரியும்" - சட்டுன்னு பதில் வந்துச்சு.
அந்த பதில் நான் சொன்னத ஆமோதிச்சு சொன்னதா இல்ல நம்மள குத்திக்காட்டவா'ன்னு விவரம் புரியாம குழப்பத்தோட சோலிய பார்க்க போயிட்டேன்.
வருசமாச்சு அவன பார்த்து. பின்னாடி ஒரு நாள் வேறொரு சோலியா அந்தபக்கம் போனப்போ தான் கவனிச்சேன், பருவமழையில சாயம் கரைஞ்சு காவியும் கருப்புமா கலந்து கிடந்த அவன் சட்டித்தலைக்கு கீழே, அந்த கனகாம்பர கலர் வெளுத்து போன அங்கராக்கு இன்னும் கொஞ்சம் பெருசா கிழிஞ்சு, வெளியே தெரிஞ்ச வக்கபுல்லுல... ஒரு காக்கா கூடு கட்டி குஞ்சு பொறிச்சிருந்தது.. 'ம்ம் எல்லாப்பயலும் ஒரு நா சடஞ்சு போயித்தான ஆகனும்'.



நன்றி : கலீல்ஜிப்ரன் (கொஞ்சம் ஓவராத்தான் போறனோ!)

--
#240