Saturday, July 30, 2005

நன்றி. நன்றி.. நன்றி....




நன்றி. நன்றி.. நன்றி.... தமிழ்வலைப்பூ வாழ் மக்கள் அனைவருக்கும், ராசாபார்வை ரசிககண்மணிகள் அனைவருக்கும் இந்த 'கொங்கு'ராசாவின் மனப்பூர்வமான நன்றிகள்..

இப்ப எதுக்கு இப்படி சும்மா கூவிக்கிட்டு இருக்கேன்னு கேக்கரீங்களா.. சும்மா சத்தம் போட்டு ப்லிம் காட்றதுக்கு நான் என்ன அரசியல்லயா இருக்கேன்.. நான் ஒரு சாதாரண விவசாயி, நான் எதுக்கு வெட்டி விளம்பரம் செய்யறேன்..
(எப்படி ராசா, உனக்கு மட்டும் இவ்ளோ அவையடக்கம்..!!. ச்சே, பின்றடா..!!)
சரி.. விஷயத்துக்கு வாடான்னு நீங்க முனங்கிறது எனக்கும் கேக்குது, ஆனா என்ன செய்யிறது, எப்பவுமே ஒரு விஷயம் சொல்லும்போது அதோட வரலாறு, போகோளம், எல்லாத்தையும் அலசி பார்த்து, இப்படியே எனக்கு பழகிடுச்சுங்க, அதான் பிரச்சனையே.. சரி.. சரீ. விஷயத்துக்கு வந்துட்டேன்

நான் நல்ல பையன்னு யாராவது சொல்லுங்கன்னு நான்
இப்பத்தான் என்னோட போன பதிவுல கேட்டுகிட்டேன், நம்ம துளசி(யக்கா)'லயிருந்து நம்ம நண்பர்கள் எல்லாரும் கமெண்ட்லயே எனக்கு சர்ட்டிபிகேட் குடுக்க தயாரா இருந்தத பார்த்துட்டு எனக்கு பயங்கிற சந்தோஷம்.. அந்த சந்தோஷத்துல மிதந்துட்டு இருக்கும் போதே, இப்பத்தான் இன்னொரு சந்தோஷமான ஒரு செய்தி வந்தது, 'ராசபார்வை - ராசா' ரசிகர்மன்றம் சார்பா 'ராசா நல்ல பையன்'னு பல்லாயிரக்ககணக்கான ரசிகர்கள் சேர்ந்து ஒரு பெரிய பேரணியே நடத்ததியிருக்காங்க..
சும்மா கதை வுடாத ராசா'ங்கரீங்களா, கதையெல்லாம் இல்லீங்க நிஜம், நூறு சதவீசம் அக்மார்க் உண்மை.. சொன்னா நீங்க யாரும் நம்ப மாட்டீங்கன்னு தெரியும், அதுக்குத்தான் பாருங்க.. அந்த பேரணிய போட்டா புடிச்சு வச்சிருக்கேன், நீங்களே ஒரு அமுக்கு அமுக்கி பார்த்துக்கோங்க..

போட்டோ ஃப்ரூப்

பேரணிக்கு வந்து எனக்கு ஆதரவு தெரிவிச்ச அனைத்து ரசிகமகாஜனங்களுக்கும், கொங்கு ராசா'வின் மனமார்ந்த நன்றிகள்..

யாரும் பொறாமைபட வேண்டாம்... சரீங்களா..?? ;-)

--
#111

Monday, July 25, 2005

டார்கெட்

ஒரு வேலையா என் சகா ஒருத்தன், நிதின்'னு, அவனை பார்க்க கோயமுத்துர் சவுரிபாளையம் வரைக்கும் போக வேண்டியிருந்ததுங்க, லேசா மழை வேற தூறிட்டே இருந்துச்சுங்களா, சரி எதுக்கு வம்பு, நமக்கு ஏற்க்கனவே விழுந்த அனுபவம் உண்டேன்னு, ஹெல்மெட்ட எடுத்து மாட்டிகிட்டு கிளம்பிட்டேன்.. போன காரியமெல்லாம் ஒழுங்கா முடிஞ்சு, கிளம்பும் போது நிதின், அவனை psg techல எறக்கி விடச்சொன்னான், சவுரிபாளையத்துல இருந்து அலுங்காம திருச்சி ரோட்ட புடிச்சு உக்கடம் போக வேண்டியவன்.. அவன் சொன்னானேங்கிறதுக்காக பீளமேட்டு பக்கம் வண்டிய விட்டேன்.. அவனை PSG சிக்னல்ல இறக்கி விட்டுட்டு கிளம்புனேன். வானம் வேற கருக்கிட்டு இருந்துச்சு, வழக்கமா இப்படி ஒரு சூழ்நிலை இருந்தா, அழுத்திட்டு பறந்திருப்பேன்.. ஆனா பாருங்க, அன்னைக்குன்னு பார்த்து சனிக்கிழமை சாயங்காலமா போச்சு, கோயமுத்தூர்'காரங்க, இல்லை இங்க படிச்சவங்களுக்கு தெரியும், சனிக்கிழமை சாயங்காலம் பீளமேட்டுல சுத்துற விஷேசம். ச்சே.. இதுக்குதான் நான் அடிக்கடி இப்பவெல்லாம் கோயமுத்தூரே வர்றதில்லை.. தேவையில்லாம மனசு கெட்டு போகுது, ஆனாலும், மழை வந்தா வருதுன்னு மெதுவா ஒரு ஓரமா அப்படியே பராக்கு பார்த்துட்டே நவ்-இந்தியா சிக்னல் வரைக்கு வண்டிய விட்டேன்.. அதுக்கப்புறம்.. சரி இனி என்னத்துக்கு மெதுவான்னு ஒரு அழுத்து அழுத்துனேன்.. டக்குன்னு டிவைடர் மேல இருந்து ஒரு ஆள மூஞ்சிக்கு நேரா துப்பாக்கி மாதிரி ஒரு சமாச்சாரத்த நீட்டிக்கிட்டே குதிச்சு ஓடி வந்தாரு.. இன்னொரு பக்கம் ரெண்டு மூணு போலீஸ் ஜீப், பைக்கெல்லாம் வேற நிக்குது.. எனக்கு ஒரு நிமிஷம் வெடவெடத்து போச்சுங்க.. ஆஹா நான் வேற கருப்பு ஹெல்மெட், காலர் இல்லாத டீ.ஷர்ட், கருப்பு ஜீன்ஸ், போட்ஷூவுமா, பொதுவா போலீஸ்காரங்களுக்கு புடிக்காத காஸ்ட்யூம்ல இருக்கேன், நம்மள ஏதும் திவிரவாதின்னு நினைச்சுடாங்களா, இப்பத்தான் லண்டன்ல வேற, யாரோ ஒரு அப்பாவிய தீவிரவாதின்னு சுட்டுபுட்டாங்களாம்.. அங்கயே அப்படின்னா.. நம்ம போலீச கேக்கவே வேண்டியதில்லை.. டிவைடர் மேல இருந்து குதிச்சு, துப்பாக்கிய காட்டிகிட்டே விஜயகாந்த் மாதிரி ஓடி வேற வர்றாங்க..

'கருவேப்பிலை கொத்து மாதிரி ஒத்த புள்ளைய பெத்து வச்சிருக்கோமே'ன்னு எங்கம்மா அழுவுறதெல்லாம் ஒரு நிமிஷம் எதோ பாரதிராஜா பட எடிட்டிங் எபட்க்ட்ல வந்து போகுது.. அப்படியே நடு ரோட்டுல வண்டிய நிறுத்திட்டேன். துப்பாக்கிய காட்டிட்டு ஓடி வந்த போலீஸ்காரர் கிட்ட வந்து டக்குனு துப்பாக்கிய திருப்பி மூஞ்சிக்கு நேரா நீட்டி '52 52'ன்னாரு.. என்னடா இது.. இப்படி போறவன நிறுத்தி 52ங்கிறாங்க.. எதும் துப்பாக்கி மாடலா இருக்குமோ, அதை ஏன் நம்ம கிட்ட சொல்றங்க, ஸ்டேஷனுக்கு கம்ப்ளெயிண்ட் போனா பேப்பர் வாங்கி குடுங்க, பேனா வாங்கி குடுங்கன்னு சொல்ற மாதிரி, நம்ம கிட்ட எதும் புல்லட் வாங்கிகுடுக்க சொல்றாங்களான்னு குழம்பிபோயி பார்த்தேன்.. ரோட்டோரமா இருந்து ஒரு போலீஸ்காரர் வந்து 'வாங்க.. வாங்க.. வந்து இப்படி ஓரமா போடுங்க வண்டிய'ன்னாரு.. மறுபடியும் நமக்கு குழப்பம்.. 'வாங்க'வா.. நம்மூரு போலீஸ்காரங்க, என்னைக்கு பைக்க நிறுத்தி இப்படி மரியாதையா பேசியிருக்காங்க, எடுத்த உடனே அலப்பறையா இல்ல பேசுவாங்க.. அப்புறம்தான 'சார்'ன்னு குழைவாங்கன்னு யோசிச்சுகிட்டே, பைக்க ஓராங்கட்டுனேன்..
கையில ஸ்கூல பசங்க வச்சிருக்கிற மாதிரி பரிட்ச்சை பேடு ஒன்னு வச்சிருந்த ஒரு போலீஸ்காரர் கிட்ட வந்து..
'எவ்ளோ?'
'என்ன எவ்ளோ?'
'ஸ்பீடு'
'என்ன் ஸ்பீடு?'
'அவர் சொல்லியிருப்பரில்ல'.. துப்பாக்கி வச்சிருந்தவர காட்டுனாரு..
அவர் இன்னொரு பைக்காரர் முன்னாடி துப்பாக்கிய நீட்டிகிட்டு இருந்தாரு.. அப்பத்தான் கவனிச்சேன்.. அது துப்பாக்கியில்லை.. எதோ வேகம் அளக்கிற சமாச்சாரம் போல.. வண்டியில வரவங்க மேல காட்டி வேகத்தை கண்டுபுடிக்கறாங்களாம்.. அதோட பின்பக்கத்துல இருக்கிற ஸ்க்ரீன்ல எவ்ளோ வேகம்னு காட்டும் போல, அதை காட்டித்தான் 52.. 52ன்னு சொல்லியிருக்காங்க போல..
'52ன்னு சொன்னாரு'
'ஓவர் ஸ்பீடுங்க'
'ஸ்பீடெல்லாம் இல்லைங்களே'
'சும்மாவா நிறுத்துனாங்க.. கம்ப்யூட்டர்ல பார்த்துதான் நிறுத்தியிருப்பாங்க.. கண்ணுச்சாமி... சாருக்கு ப்ரிண்ட் குடுக்கலையா??'
'கம்ப்யூட்டரா?'
'அதான், அவர் கையில வச்சிருக்காரே, அதுலயே இப்ப ப்ரிண்ட் வந்திரும்' எதோ தானே கண்டுபுடிச்ச மாதிரி சொன்னாரு..
'இப்ப என்ன செய்யனும்?'
'ஸ்பாட் பைன் சார்.. 300 ருபா, அங்க எஸ்.ஐ கிட்ட போங்க'ன்னு சொல்லிட்டு அடுத்த ஆளுகிட்ட போயிட்டாரு..
'ஓவர் ஸ்பீடா.... அடப்பாவிகளா.. இதுக்கா.. இப்படி டிவைடர் மேல இருந்து குதிச்சு ஓடி வந்து நிறுத்துனீங்க.. நான் கொஞ்சம் அசந்திருந்தா.. மேல விட்டு தூக்கிருப்பனே.. அப்புறம், 'ட்யூட்டியில இருந்த போலீஸ்காரர் மேல் பைக் ஏற்றி கொல்ல முயற்ச்சி'ன்னு காலையில ந்யூஸ் போட்டிருப்பாங்களே.. நல்லவேளை.. ஸ்பீடு இல்லை.. கரெக்ட்டா நிறுத்திட்டேன், அதுக்கே ஓவர் ஸ்பீடுங்கிறான்..
'52 கி.மி ஸ்பீடுல போறதே ஒவரா'ன்னு ஒரு மாதிரி விவேக் மாடுலேஷன்ல புலம்பிட்டே பைக் மேல வச்சு கேஸ் எழுதிட்டு இருந்த எஸ்.ஐ கிட்ட போயி கேட்டேன். 'யெஸ்.. யூ சீ, தேர் ஈஸ் போர்ட்.. ஒன்லி 32 கிமி ஸ்பீடு அளவ்டு'..
நம்மள எதோ நைஜீரியாவுல இருந்து வந்து படிக்கிற ஆளுன்னு நினைச்சுட்டாரோ என்னமோ..
நான் டக்குன்னு
'32ஆ.. ஏங்க, அதெல்லாம் நடக்கிற காரியமா.. பக்காவா டிவைடர் போட்டு 3 லேன் இருக்கு, இதுல 32ல போறதுன்னா.. என்னங்க இது?'
'ரூல்ஸ் இருக்குதுங்க, பார்த்து போகமனுமில்லீங்க.. பீக் டைம் பாருங்க. அப்புறம் நாங்க தான் பதில் சொல்லனும்..@#%#%@..'
அடப்பாவிகளா.. ஆரம்பிச்சுட்டீங்களா உங்க அட்வைஸ் மழைய'ன்னு மனசுகுள்ள கருவிகிட்டே..
'சரி, எவ்ளோ பைன்'னு சொல்லுங்க'
'ஸ்பாட் பைன் 300 ரூவா, சார்.. இல்லைன்னா சார்ஜ் ஷீட் வாங்கிட்டு திங்கட்கிழமை கோர்ட்டுல வந்து பார்த்துக்கோங்க'
எல்லாம் நேரம் 120-130ல பறந்திருக்கேன் இதே ரோட்டுல.. இன்னைக்கு '52'க்கு.. டேய் நிதினு.. நான் பாட்டுக்கு திருச்சு ரோட்டுல போயிருப்பேன்.. சைட் அடிக்க ஆசை காட்டி என்னை இந்த ரோட்டுல கூட்டிட்டு வந்து..ம்.. அவனை சொல்லி என்ன செய்யிராது.. நம்ம நேரம் அப்படி.
'இதுக்கு கோர்ட்டுக்கு வேற வராங்க.. ஷீட் எழுதுங்க.. கட்டிறேன்'
'பேர், அட்ரஸ் சொல்லுங்க'
சொன்னேன்..
'நீங்களே இப்படி வேகமா போலகலாமா?' மறுபடியும் அட்வைஸ் மழை..
சார்ஜ்ஷீட் வாங்கிகிட்டு. 300 ரூபாய் எடுத்து குடுத்தேன்..
டக்குன்னு வாங்கி பேண்ட் பாக்கெட்டுல வச்சுகிட்டு பழக்க தோஷத்துல 'சரியா இருக்குமில்ல'ன்னாரு, அடப்பாவிகளா.. சார்ஜ்ஷீட் போட்டு லீகலா வாங்கிற பைன கூட இப்படியா..
பைன் பில்லு எழுதிகிட்டே..'பாருங்க.. அவரெல்லாம் எப்படி டக்குன்னு கட்டிகிட்டு போறாரு.. நீங்க சும்மா நின்னு புலம்பிட்டே இருக்காதீங்க.. ஒன்னும் செய்ய முடியாது.. ஜீப்புல கமிஷன்ர் இருக்காரு.. பைன் கட்டுங்க.. இல்லை சார்ஜ் போடுறேன்.. கோர்ட்டுக்கு வாங்க'ன்னு சொல்லி, பக்கத்துல பாவமா நின்னுகிட்டு இருந்த 'சக- க்ரிமினல்'களோட வயத்தெரிச்சல கிளப்பி விட்டாரு. எல்லாரும் காலேஜ் பசங்க.. அவனவன் ஆளுகள சனிக்கிழமை காந்திபுரத்துல பிஸ்லரி பாட்டில் வாங்கி குடுத்து ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டியது.. இப்படி லேட்டாகுதேன்னு கடுப்புல நின்னுட்டிருப்பான், இதுல நம்மள வேற இவர் உதாரணம் காட்டி வைக்கிறாரு. எல்லாபயலும் மனசுக்குள்ள 'இவன் பாட்டுக்கு பைன் கட்டிட்டு போறான்.. இனி நம்மளும் அழுகனும்'ன்னு என் பரம்பரையவே திட்டியிருப்பானுக..

'ஜீப்புல கமிஷனர் இருக்காரா?' சரி ஒரு வார்த்தை பேசுவோம்னு.. போயி அவர் கிட்ட சார்ஜ்ஷீட்டை காட்டி சொன்னேன்.. 'யெஸ், வீ கான் டூ எனிதிங், திஸ் ஈஸ் த ஆக்ட் 183'ன்னு ஒரு பத்து நிமிஷம் சட்ட பாடம் எடுத்தாரு..
'அதெல்லாம் சரிங்க, அதென்ன 32 கிமி லிமிட்?'
'அது பழைய ப்ரிட்டீஷ் முறைங்க.. 20 மைல்ஸ் ஈஸ் த லிமிட்'
'அதெல்லாம் ப்ரிட்டீஷ் காலத்துல சரிங்க.. இப்ப வர்ற வண்டிகளுக்கும், இத்தனை கூட்டத்துக்கும் 20மைல் எல்லாம் ஒத்து வருமா, கொஞ்சம் பார்த்து.. செய்யுங்க சார்'..
'சார்ஜ் எழுதறதுக்கு முன்னாடி சொல்லியிருக்கலாம் இல்ல நீங்க'
'அது ஒன்னும் ப்ரச்சனை இல்லைங்க.. நான் பைன் கட்டிட்டேன்.. ஆன ப்யூச்சர்ல கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க. ஒரு 50கிமின்னாவது லிமிட் வைங்க'ன்னு சொல்லிட்டு வந்தேன்.. மையமா சிரிச்சாரு.. செய்வாரான்னு தெரியலை.. மனசுக்குள்ள 'போடா வெண்ணை'ன்னு கூட சொல்லியிருக்கலாம்.. எனக்கு தெரியலை.. ஆனா புது sp வந்ததுக்கப்புறம் போலீஸ்காரங்க, எடுத்த உடனேயே மரியாதையா பேசறாங்க..
வரும் போது இன்னொரு போலீஸ்காரர் சொன்னாரு.. 'டார்கெட் சார்.. அதான்'..
இந்த கலெக்க்ஷனுக்கு கூடவா 'டார்கெட்'..

வாழ்க காவல்துறை!. வாழ்க நிதித்துறை!!


பி.கு:
வீட்டுக்கு வந்ததும்,
எங்கய்யன் 'என்னடா கோயமுத்தூர்ல சுகுணா கிட்ட போலீஸ் கூட பேசிட்டிருந்த..'
'பார்த்தீங்களா?'
'ஆமா, நான் ஜென்னி'யில இருந்து வந்துட்டிருந்தேன்'
'போலீஸ் கிட்ட நிக்கிறேன்.. என்ன ஏதுன்னு நின்னு பார்க்கிறதில்லையா நீங்க'
'ஆமா, நீ எங்கயாவது, எச்சு பண்ணிட்டு நிப்ப, நானும் வந்து அங்க நிக்கனுமாக்கும், சல்லுன்னு வ்ந்துட்டிருந்தேன்.. வந்து கேட்டுகலாம்னு அப்படியே வந்துட்டேன்'


'சல்லுன்னு வந்தீங்களா?.. காருக்கு வேற ஸ்பீடு லிமிட்டா..??' அடப்பாவிகளா.. என்னைய மட்டும்தான் நிறுத்துவீங்களா?? இனி 'ஒவர் ஸ்பீடு' '52 கிமி தான்'னு சொன்னா நம்பவா போறாரு..


யாரவது வந்து 'ராசா நல்ல பையன்'ன்னு எங்கய்யனுக்கு சொல்லுங்களேன்.. :-(

--
#110

Thursday, July 21, 2005

அடுத்து??





கிணத்துமேட்டுல வண்டிப்பாதைய பார்த்துட்டு உக்காந்திருக்கேன்,
ரொம்ப நேரமா,
யாருமே அந்த பக்கம் வரவும் இல்லை,
என்னை கவனிக்கவும் இல்லை...
அமைதியா யோசிக்கலாம்..
ஈரமான காத்து,
சுத்தமா, அமைதியா... என் மனசு மாதிரி இல்லாம...

கொஞ்ச நேரம் அமைதியா உக்காந்து யோசிக்கனும்...

சில்வண்டு சத்தம் மட்டும் தான் கேக்குது,
இருட்டிருச்சு,
ரொம்ப நேரமா யோசிச்சுட்டே உக்கந்திருக்கேன், எதுக்கோ காத்துட்டு இருக்கேன்.

கழுத்தெல்லாம் ஒரே வலி,
பேசுன வார்த்தைக தலைக்குள்ள பாரமா இருக்கு.. இன்னும் கொஞ்ச நேரம் உக்காந்திருந்துட்டு வீட்டுக்கு போயிடனும்..

எங்கயோ தூரத்துல டி.எம்.எஸ் குரல்,
என்ன பாட்டுன்னு தெரியல,
நடுராத்திரி ஆயிடுச்சு போல,
மழை துளிக்க ஆரம்பிச்சிருக்கு,
இன்னும் உக்காந்திருக்கேன்..

வீட்டுக்கு போயிட்டேன், நழைஞ்சுகிட்டே..
அம்மா கதவை திறந்துவிட்டுட்டு பார்க்கிறாங்க.

அதே பார்வை,
நான் எப்பவாது எதாவது தப்பா செஞ்சாலோ,
இல்லை
ஜாஸ்த்தியா பேசுனாலோ பார்க்கிற பார்வை..

இப்போ,
நான் எதையும் கண்டுக்க மாட்டேன்,
என்ன வேனும்னாலும் சொல்லுங்க,
இல்லை மறுபடியும் சண்டை புடிங்க..
இன்னைக்கு ராத்திரி தெளிவா இருக்கேன்,
உங்கள பார்த்து அமைதியா சிரிக்க முடியும்,
நான் ஜெயிச்சுட்டேன்..
இந்த சண்டை என்னை ஒன்னும் செய்யாது..



எத்தனை தடவை தான் செய்யாத தப்புக்கு போராடறது...
ம்..
ஒரு பிரச்சனை முடிஞ்சுது.. அடுத்தது??

--
#109

Tuesday, July 19, 2005

வீண் பழி.!


கொள்ளையடித்தது நீயடி..
என்னை குற்றம் சொல்லி திரிகிறாய்..

--
#108

Thursday, July 14, 2005

பழையபேப்பர்



ஒரு பழைய போட்டோ..
படத்துல இருக்கிற ஆளு யாருன்னு தெரியுதான்னு பார்த்து சொல்லுங்க..

சரியா சொல்றவங்க.. அவுங்களோட பர்ஸ்ல இருந்து காசு எடுத்து, ஒரு சாக்லேட் வாங்கி, பக்கத்துல இருக்கிற குழந்தைக்கு குடுத்து சந்தோஷப்பட்டுக்கோங்க..:-)

ஆள் ஸ்மார்ட்டா இருக்காரு இல்ல.. :-)


எழுத ஒன்னுமில்லைன்னா இப்படித்தான் படம் போட்டே சமாளிக்க வேண்டியிருக்கு..:-(

--
#107

Tuesday, July 12, 2005

எப்படித்தான் சகிச்சுக்கறயோ?




வர்ற பதினோராம் தேதி அவ பிறந்தநாள்..


ரிமைண்டர் போட்டு ராத்திரி 12.00 மணிக்கு மறக்காம முதல் ஆளா போன் பண்ணிடனும்,

ப்ளவர்மார்ட்'ல சொல்லி கலர்கலரா வெறும் ரோஜாப்பூவா வச்சு காலையில ஒரு பொக்கே அனுப்பனும்..

அவளுக்கு புடிச்ச அந்த டார்க்ப்ளூ ஆஃப்-ஸ்லாக்கும், ஐவரி கார்கோ'வயும் பெட்டி போட்டு வாங்கி வைக்கனும்..

ரொம்ப நாளா கூட கோயிலுக்கு வரசொல்லிட்டே இருக்கா, அன்னைக்கு கண்டிப்பா கூட போகனும்..

அன்னைக்கு முழுசும் அவகிட்ட எதுக்கும் கோவிச்சுக்காம இருக்கனும், அவ கோவப்படாத மாதிரி நடந்துக்கனும்..

எல்லாம் சரியா திட்டம் போட்டாச்சு, கலக்கிடனும்..
திட்டம் எல்லாம் ரெண்டு நாளா மனசுல ஓடிகிட்டே இருக்கு,
.
.
.
.
.
.
மூனாவது லோடு இன்னைக்கு அனுப்பனும், அப்பத்தான் அவன்கிட்ட முதல் லோடு பேமண்ட் கேக்கமுடியும்..

எங்கயோ குண்டு வெடிச்சா, இங்க எல்லா ஷேரும் கலங்குது.. டெர்மினலக்கு போயி பார்க்கனும்..

மழையோட மழையா மேக்கால காட்டுல உரம் வச்சு விட்றனும், ஒரு வேலை முடியும்..

.
.
.
.
.
.
.

காலையில ஜாகிங் போயிட்டு வந்து அருகம்புல் டீயோட..

நேத்து செய்ய நினைச்ச வேலை எதுவுமே முழுசா முடிக்கலயே, ச்சே..

யோசிச்சுகிட்டே,
காலையில பேப்பர் புரட்டும் போது தான் கவனிச்சேன்..

இன்னைக்கு தேதி பன்னிரெண்டு..

எப்படித்தான் என்னை சகிச்சிக்கறயோ!!

இனி எப்படி மன்னிப்பு கேக்கிறதுன்னு ஒரு வாரம் திட்டம் போடனும்... :-(

---
#106

Sunday, July 10, 2005

sms siரிப்பு

ஏற்க்கனவே எனக்கு வந்த ஒரு sms பத்தி ஒரு பதிவு போட்டிருந்தேன், அதை படிச்சுட்டு நம்ம வலை வாழ் தமிழர்கள் எல்லாரும் எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்தனும்னு ஆசைப்பட்டாங்க, நான் தான் அப்ப கொஞ்சம் வேலையா இருந்ததால, இப்ப டயமில்லை பிற்காலத்துல பார்த்துக்கலாம்னு சொல்லிட்டேன், சரி அது பழைய கதை, விடுங்க..
இந்த தடவை, மறுபடியும் அதே மாதிரி ஒரு பதிவு. படிச்சு பார்த்து சிரிப்பு வந்தா சிரிங்க.. எனக்கு சிரிப்பு வந்துச்சு, உங்களுக்கும் சிரிப்பு வரலைன்னா என்ன கோவிச்சுக்காதீங்க.. :-(

--
குடும்பத்துல பிரச்சனையா??
'மெட்டிஒலி' பாரு
அண்ணன் தம்பிக்குள்ளார பிரச்சனையா??
'ஆனந்தம்' பாரு
புருஷம் பொஞ்சாதிக்குள்ளார பிரச்சனையா??
'கணவருக்காக' பாரு
நீங்க சைட் அடிக்கிற பொண்ணுகூட பிரச்சனையா??
அப்போ அவ தங்கச்சிய பாரு
--
(சிரிப்பு வந்துச்சா??)

'மெட்டிஒலி', 'ஆனந்தம்','கணவருக்காக'.. இதெல்லாம் என்னன்னு கேட்டீங்கன்னா.. வேண்டாம், கேக்க மாட்டீங்க..
'தமிழர் இருக்குமிடமெல்லாம் தமிழ் சீரியல்களும் இருக்கும்'னு யாரோ 'ஸ்ரீ ஸ்ரீ சீரியலாணந்தா'ன்னு ஒரு மகாகுரு சொல்லியிருக்காராம், ஊருக்குள்ளார சொன்னாங்க..

அப்புறம், இந்த smsக்கும் நான் முன்ன ஒரு நாள் சொன்ன 'கவிதை'(?)க்கும் எதோ விட்டகுறை தொட்டகுறை இருக்கிற மாதிரி தோணுச்சு, ...ஒரு வேளை அதுனால தான் எனக்கு இது புடிச்சிருக்கோ என்னவோ ?

--
#105

Wednesday, July 6, 2005

அசிங்கம்.. அசிங்கம்.. அசிங்கம்.

வெளிய போனா ஒரே குப்பை, சகதி, ஒரே கிருமி கன்றாவியா இருக்குன்னு வூட்டுகுள்ளாரயே உக்காந்துடறோம், ஆனா அப்பவும் முடியுதுங்களா?? ஜன்னல் வழியா, கதவு வழியா, நம்ம வூட்டு அசிங்கம் வெளிய போற ஜலதாரி வழியான்னு, பல வழியில எல்லாம் அசிங்கமும் உள்ளயே வந்திருது, சரி ஜன்னலையும் கதவையும் சாத்தி வச்சிரலாம்னு நினைச்சா??.. அது எத்தனை நாளைக்கு, ஃபேன் காத்தும், ட்யூப்லைட் வெளிச்சமும் பத்தாது, இயற்க்கையான காத்தும், வெளிச்சமும் வேனும்னு மனசும் உடம்பும் பரபரக்குதுங்களே!

அதுக்கு என்ன செய்யறது?? வாழ பழகிக்க வேண்டியதுதான், குப்பைய பார்த்தா நம்ம பாட்டுக்கு உடனே சங்கடப்பட்டு, அருவருத்துப்போய் அது மேல காறித்துப்பி அந்த இடத்த மறுபடியும் அசிங்கப்படுத்தாம, என்ன நாத்தம்'?ன்னு பொருமலோட சொல்லிட்டு டக்குன்னு காறிதுப்புவாங்க பாருங்க.. இப்படி ஒவ்வொருத்தனு துப்பிதுப்பி தான்டா இத்தன நாத்தம்'ன்னு அப்படியே அந்நியன் ஸ்டைல்ல பாயலாம்னு கூட தொணுது.. கருட புராணம் முழுசா படிச்சுபுட்டு அதை செய்யவோம்', .. எங்க விட்டேன்.. ஆங்!! மறுபடியும் அசிங்கப்படுத்தாம.. ஒதுங்கி போயிர வேண்டியதுதான்.. ஆரம்பத்துல கஷ்டம் தான், ஆனா கொஞ்சம் கொஞ்சமா நாமளும் பழகிடுவோம்.. எப்படின்னா?? இந்த எக்களக்ஸ் தெரியும்ங்களா??
அதாங்க எக்களக்ஸ் மாவீரன்னு முன்ன தூர்தர்ஷன்ல விளம்பரம் வருமே, பூச்சுகொல்லி மருந்து, செடிகளுக்கு அடிக்கிற மருந்துங்க, நீங்க பாட்டுக்கு வயத்துல இருக்கிற பூச்சிக்கெல்லாம், நான் சொன்னேன்னு எக்களக்ஸ் குடிச்சராதீங்க. இதை குடிச்சவனும் ஒருத்தன் இருக்கான், அது வேற கதை.. நம்ம கதைக்கு வருவோம்.. ஆரம்பத்துல எக்களக்ஸ் வந்தப்போ தென்னை மரத்துல வண்டுப்பூச்சிய தடுக்க அதத்தான் ஊத்துவோம், யாருங்க அது வண்டுபூச்சுயோட பயாலஜிக்கல் நேம், ஜியோகரபிகள் ப்ரபர்ட்டியெல்லாம் கேக்கிறது, அதெல்லாம் யாராவது புரபசர கேளுங்க, நான் வெறும் விவசாயி, ச்சே மறுபடியும் ட்ராக் மாறிட்டனா..??
அந்த வண்டுபூச்சிய கொல்றதுக்காக ஒரு போசி எக்களக்ஸ ஒரு பக்கெட் தண்ணியில கலந்து, வாசம் படாம இருக்க நம்மாளுக மூஞ்சியில ஈரலதுண்டு கட்டிகிட்டு மரத்துல ஏறி ஊத்துவாங்க.. அந்த வாசம் பட்டஉடனே, மரத்து மேல இருந்து குண்டு குண்டா வண்டு கீழ விழுகும்.. அதெல்லாம் முன்னே, ப்ளாஷ்பேக்.. இப்பவெல்லாம் ஒரு போசி எக்களக்ஸும் ஒரு பக்கெட் தண்ணியும் கலக்கி வச்சுகிட்டு, காய் போடும் போது கீழ விழுந்த வண்டை எடுத்து அதுக்குள்ளார போட்டா.. சும்மா குற்றாலீசுவரமன் மாதிரி கலக்கலா நீந்தி வெளிய வந்திருது.. அந்தளவுக்கு அதுக்கு எதிர்ப்பு சக்திய அதிகம் செஞ்சு வச்சிருக்கோம்.. (ஆனா, அன்னைக்கும் இன்னைக்கும் ஒரு 350ml குடிச்சா, நம்மாளுக வயிறு எரிஞ்சு செத்துபோயிட்டு தான் இருக்காங்க). ஆமா இப்ப எதுக்கு மரவண்டை பத்தி பேசுனோம்!.. நாம காத்துல வர்ற தூசி கிருமிய பத்திதான ஆரம்பிச்சோம்.. அதுல எக்களக்ஸ் எங்க வந்துச்சு.. ம்ம்..
தெரியலையே.. என்னமோ சொல்ல வந்தேன் என்னமோ சொல்லிட்டு இருக்கேன்.. ஆங்.. ஞாபகம் வந்திருச்சு, அந்த எக்களக்ஸோட தீவிரத்த எதிர்த்து வாழ பழகிட்ட மரவண்டு மாதிரி.. குப்பையும், கிருமியையும் சகிச்சுகிட்டு, அது நம்மள ஒன்னும் பண்ண முடியாத மாதிரி வாழ்ந்திடவேண்டியதுதான்.. அப்ப இப்படியே இருக்க வேண்டியதுதானா?'ன்னு அம்மாஞ்சி ஹீரோ அடிபட்டு கிடக்கிற தங்கச்சிய நினைச்சு கத்துற மாதிரி இங்க கத்தாதீங்க.. ஒன்னும் செய்ய முடியாது.. காத்துல வர கிருமிய என்ன செய்வீங்க.. நேரடியா மல்லுக்கு நின்னா, நம்மளும் ஒரு கை பார்க்கலாம்.. கையில சிக்குனாலும், சத்தியமா நானில்லைன்னு சொல்றவன என்ன செய்யறது.. விட்ற வேண்டியத்துதான்.. நம்ம ஆளுக பாதிக்க படறாங்களேன்னா?? சரிதான், நம்ம வூட்டுபுள்ளைக முகம் சுழிக்குதேன்னா?? அதுவும் சரிதான். ஆனா, நாலு எடத்துக்கு போயி பழகனும், நாலு விஷயம் தெரிஞ்சுக்கனும்னா, அப்புறம் இப்படித்தான இருக்கு இன்னையதேதிக்கு.. கிருமியே இல்லாத காத்து எங்கயும் இல்ல.. இமய மலை மேல கூட எதோ காத்து மண்டலம் கெட்டுபோயிருக்காம், நிஜம்மாங்க, இந்த வாரம் அவுட்லுக்ல சொல்றாங்க, நம்மூரெல்லாம் எம்மாத்திரம்..
சும்மா குணா மாதிரி 'அசிங்கம்.. அசிங்கம்.. அசிங்கம்'ன்னு சொல்லாம,
வாழபழகிக்க வேண்டியதுதான்..(யப்பா, எப்படியோ டைட்டில் வந்திருச்சு) இது பயந்தாங்கொளித்தன்ம்ன்னா, ஆமா பயந்தாங்கொளித்தனம் தான்.. அவனவன் வாழ்க்கையில எது முக்கியமோ, அதுக்கு என்ன தேவையோ அதை செய்ய வேண்டியதுதான்.. !!, உனக்கு நிம்மதி முக்கியமா, அதுக்கு அடுத்தவன் சந்தோஷமா இருக்கனுமா வேண்டாமா, அதுவும் அவனவன் கையிலதான்.. அவனவன் நினப்புல தான்..

"I think everybody has brokenness. There's no doubt about that. We live in a fallen world. This is not heaven. Everybody has scars. Everybody is hurting somewhere, I guarantee you that. Everyone has a hidden hurt" - RickWarren



சரி.. இப்போ எதுக்கு இத்தன பழமை பேசிட்டுகிடக்கிற?ன்னு கேட்டீங்கன்னா.. என்னத்த சொலறது போங்க.. இந்த கிரகமே வேண்டாம்னு நாம ஒதுங்கி போனாலும், நம்ம போற பக்கம், வர்ற பக்கம் போயி ஆகாத நாயம் பேசறாங்க, டக்குன்னு சட்டைய புடிச்சு உலுக்கினா, சத்தியமா நானில்லைங்கிறாங்க.. அந்த கடுப்புல எதோ புலம்பிட்டேன், அவ்ளவு தான்.. சத்தியமா இவுங்கெல்லாம் (கீழ வரிசையா சுட்டி போட்டிருக்கனே, அவுங்க) இப்படி சொல்றாங்களேன்னு நான் போட்டிக்கெல்லாம் சொல்லலைங்க..
1

2

3

4

5


---
# 104

Monday, July 4, 2005

மழை நேர மாலை


----
ஞாபகமிருக்கிறதா..?

அந்த ஜூலை மாதத்து
மழை நேரத்து மாலை

நான்..

உன்னை கண்டுகொண்டதும்..
என்னை தொலைத்ததும்..
அன்றுதான்..

----
(எங்கயோ, எப்பவோ படிச்ச ஒரு ஆங்கில கவிதையை தழுவி..)

ஒண்ணுமில்லீங்க, வெளிய சாரல் மழை.. அதான்..!! வேற ஒன்னுமில்லீங்க..!! :-)

குறிப்பு: ஈஸ்வர், இந்த படமும் நான் எடுத்தது தான்.

---
#103

Saturday, July 2, 2005

பத்த்த்தாயிரம்ம்ம்...!!




அதோ, இதோன்னு கடைசியில எப்படியோ பத்தாயிரம் பார்வையாளர்கள் வந்தாச்சுங்க. 'ராசபார்வை'க்கு வந்த பத்தாயிரமாவது நண்பரோட விவரங்க இதுதான்..

Domain Name planet.nl ? (Netherlands Map | Flag | Facts)
IP Address 80.60.36.# (RIPE NCC)
Language Dutch nl
Operating System Microsoft WinXP
Browser Internet Explorer 6.0 Mozilla/4.0 (compatible; MSIE 6.0; Windows NT 5.1; SV1)
Monitor Resolution 1024 x 768
Monitor Color Depth 32 bits
Time of Visit Jul 2 2005 3:55:55 pm
Last Page View Jul 2 2005 3:56:13 pm
Visit Length 18 seconds
Page Views 2
Referring URL http://www.thamizman...lblogs/userpanel.php
Visit Entry Page http://raasaa.blogspot.com/
Visit Exit Page http://raasaa.blogspot.com/
Time Zone UTC+1:00 CET - Central European Time
Visitor's Time Jul 2 2005 11:55:55 am
Visit Number 10,000


ஒரு வருஷம்..
100வது பதிவு..
10000 பேர் வருகை.. .. ம்ம்.. என்னவோ போடா ராசா.. எல்லாம் மாயை.. ஒன்னுமே புரியல உலகத்தில.. என்னவோ நடக்குது.. மர்மமாய் இருக்குது

யாருங்க அது 'விளக்கு அணையும் போது பிரகாசமா எரியும்'னு அபசகுணமா பேசறது.. :-(

--
#102

வேம்பநாடு ஏரி

போன பதிவுல நான் விடுமுறையை கழிக்க விரும்பும் இடங்கள் வரிசையில சொன்ன வேம்பநாடு ஏரியிலிருந்து ஒரு படம்.


ஆஃப் சீசன்'ல எடுத்த படம் இது.
ஒரு அமுக்கு அமுக்கி பெரிசா பார்த்துக்கோங்க.

Friday, July 1, 2005

அந்த மூன்று விஷயங்கள்.



இபோ பதிவுகள்ல ஒரு personal tag' (தமிழ்ல என்னங்க சொல்றது?)ன்னு ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க. நம்மளயும் இளமுருகு அந்த ஆட்டத்துல புடிச்சு விட்டிருக்காரு, அதுனால நம்ம பங்குக்கு நம்மளும் எழுதியாச்சு..

உங்கள் உருவத்தில் உங்களுக்கு பிடித்த மூன்று: (THREE PHYSICAL THINGS YOU LIKE ABOUT YOURSELF)
இடது கை சுண்டுவிரல் முனையில் இருக்கிற மச்சம்
செல்ஃப் ஷேவ் பண்ணினதும் நான் ரசிக்கிர என் கிருதா
கால்கட்டை விரலை விட நீளம் ஜாஸ்த்திய இருக்கிற அடுத்த கால்விரல்


நீங்கள பயப்படும் விஷயங்கள் மூன்று: (THREE THINGS THAT SCARE YOU)
அறிவுரைகள் :-(
டிஸ்க்கோத்தே
மைனர் செயின்

தினசரி வாழ்க்கையில் உங்களுக்கு மிக முக்கியமான மூன்று: (THREE OF YOUR EVERYDAY ESSENTIALS)
என்னுடைய பெட்-பேங்க் டெபிட் கார்ட்
என் கண்ணாடி
poggo சேனல்

இப்பொழுது அணிந்துகொண்டிருக்கும் மூன்று: (THREE THINGS YOU ARE WEARING RIGHT NOW)
கை வைக்காத oxen பனியன்
கத்திரிப்பூகலர் கட்டம் போட்ட லுங்கி
வெள்ளை ஈரலதுண்டு

உடனடியாக உங்களுக்கு தேவைப்படும் மூன்று: (THREE THINGS YOU WANT TO DO REALLY BADLY RIGHT NOW)
வெளிய நல்ல மழை சூடா மிளகாய் பஜ்ஜி கிடைச்சா பரவாயில்லை
கூடவே ஒரு ரெண்டு சுத்து கையெழுத்து'ம் கிடைச்சா.. ஆஹா..
ஒரு அகலப்பாட்டை இணைப்பு :-(

இறப்பதற்க்கு முன் நீங்கள் செய்ய நினைக்கும் மூன்று: (FEW THINGS I WANT TO DO BEFORE I DIE)
த்ரிஷா கூட ஒரு சீன்ல நடிக்கனும் (குளிக்கிற சீன்ல இல்லீங்க..)
எங்கய்யன் ஆசைப்படுற மாதிரி பொறுப்பான பையனா மாறனும்.
இவன் எப்ப சாவான்னு நாலு பேரு நினைக்க வைக்கனும்

உங்கள் விடுமுறையை நீங்கள் கழிக்க விரும்பும் இடங்கள் மூன்று: (THREE PLACES YOU WANT TO GO ON VACATION)
வேம்பநாடு ஏரி (பேட்டரி வசதி இல்லாத படகுவீட்டில்)
கபினிஆற்றங்கரை நடைபயணம்
அப்புறம்.. முடிஞ்சா.. இந்தியஜனாதிபதி மாளிகை ;-)

உங்களுக்கு பிடித்த குழந்தைகள் பெயர் மூன்று: (THREE KIDS NAMES YOU LIKE)
பப்பிகுட்டி
ஜுஜிம்மா
ராசா

LAST BOOK I READ NUMBER OF BOOKS I OWN
இதெல்லாம் ஏற்க்கனவே பழைய பதிவுல சொன்ன சமாச்சாரம் தான, அதுனால நோ..ர்ரிப்பீட்ட்டேய்!!
3 PEOPLE I WISH TO TAG
அதென்ன மூனு பேரு.. தமிழ்பதிவுகள்ல இந் த தொடர் சமாச்சாரம் இன்னும் ஆரம்பிக்கலையில்ல, அதுனால இதை படிக்கிற அளுக யாருக்கு இது புடிக்குதோ அவுங்க ஆளுக்கொரு நூல்புடிச்சு தொடர்ந்துக்கோங்க..

--
#100
..
அட நூறு பதிவாயுடுச்சா??.. ச்சே யாராவது விழா எடுக்கிற ஆசை இருந்தா சொல்லுங்கப்பு (பொற்க்கிழி, பணமுடிப்பு எதுவா இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்)