Tuesday, February 17, 2009

ஒரு கணம்

விழிப்பு தட்டிவிட்ட வாரயிறுதி அதிகாலையில்
பிடித்த கட்டங்காபியும் மெல்லிசையுமாய் சிலநேரம்

நேரம் பார்க்காமல் காட்டோடையில் மூழ்கி திளைத்து 
ஈரம் சொட்ட சொட்ட கரையில் அமர்ந்து சிலநேரம்

மின்சாரமில்லா மழைநேரத்து மாலையில்
வாசலில் தெறிக்கும் சாரலோடு தனிமையில் சிலநேரம்

உறக்கமில்லா நெடுந்தூர இரவு பயணத்தில்
ஆளில்லா அத்துவான சாலையோரங்களில் சிலநேரம்

கலோரி கணக்கு பார்க்காமல் மனசு நிறைய உண்டுவிட்டு 
கொழுந்து வெற்றிலையோடு தென்னந்தோப்பில் சிலநேரம்

வெட்டிப்பேச்சும் போதையுமாய் போகும் நட்புகூட்டம்
சட்டென்று அமைதியாகி மெளனம் நிறைக்கும் சிலநேரம்

காமம் கொண்டாடி கரைந்து களைத்துவிட்ட பிறகு
சாளரம் வழியே நட்சத்திரங்களை பார்த்தபடி சிலநேரம்

இப்படி ரசித்து புகைத்த நேரங்கள் பல உண்டு

இத்தனையையும் விஞ்சி விட்டது 

நேற்று

அணைக்காமல் விட்டெறிந்த அந்த
கடைசி சிகரெட்டின் ஒரு கணம்.