Tuesday, November 23, 2004

தெய்வம் தந்த வீடு..

அம்மாடி... பதினைஞ்சு நாளா வீட்டுல வேலை 'பெண்ட' நிமித்திருச்சுங்க.. புதுசா ஒரு வீட்டுக்கு குடி போறது கூட பரவாயில்லைங்க, இருக்கிற வீட்டை சுத்தம் செஞ்சு பெயின்ட் செய்யனும்னா.. அதுவும் பத்து வருஷமா பெயின்ட் பண்ணாம, மொத்தமா எல்லாப்பொருளையும் வெளிய எடுத்து வச்சு, சுத்தம் செஞ்சு, மறுபடியும் உள்ள அடுக்கிவச்சு, சாமி, இதுக்குதானுங்க வீட்டுல பொண்ணுக வேணும்ங்கிறது.. ஒத்த பையனா இருந்தா சந்தோஷம்ங்கிறாங்க, எனக்குத்தான தெரியும் நிஜம்.
என்ன கலர் பெயிண்ட் அடிக்கிறதுங்கிறதுல இருந்து, எந்த சாமானத்தையெல்லாம் மறுபடியும் வீட்டுக்குள்ள கொண்டு போறதுன்னு ஒவ்வொவ்வுக்கும் பெரிய விவாதமே நடத்த வேண்டியதா போச்சுங்க, மரத்தடியே பரவாயில்லை போல.. (ஹி..ஹி.. சும்மானாச்சுக்கும்.. தமாசு!!)
நான் காலேஜ் போயே அஞ்சு வருஷம் ஆச்சுங்க, எங்கம்மா அவுங்க அந்த காலத்துல அவிநாசிலிங்கத்துக்கு கொண்டுபோன கூடைப்பையை இன்னும் என் ரூம் மேல் 'லாப்ட்'ல பத்திரமா வச்சிருந்தங்க, அதையெல்லாம் மறுபடியும் உள்ளயே வச்சுகனும்னு அவுங்க ஒரு பக்கம், 'வீடா, குப்பத்தொட்டியா இது?, எல்லாத்தையும் தூக்கு வெளிய எறி'ன்னு எங்கய்யன் ஒருபக்கம். இப்பத்தான் ஒவ்வொரு சண்டையா முடிஞ்சுட்டு இருக்குது.. (ம், அவரவருக்கு தானுங்க தெரியும், ஒவ்வொரு பொருள்லயும் என்னன்னா வரலாறு எழுதியிருக்குதுன்னு..)
ஒவ்வொரு அறையா சுத்தம் சுத்தம் செய்ய செய்யத்தான், எதோ அலிபாபா குகை மாதிரி எப்பவோ வாங்கிவச்ச பொக்கிஷமெல்லாம் கண்னுக்கு தட்டுபட்டுதுங்க,எங்க சித்தப்பா பையனுக்கு வாங்கின தூளிமெத்தை (அவன் இப்போ இன்ஜினீயரிங் படிக்கிறான்), நான் நாலாவது படிக்கும் போது எங்கய்யனுக்கு ஒரு ஆக்ஸிடென்ட் ஆகி அப்போ வாங்கின வெயிட் (கால்ல கட்டி தூக்கி தொங்க விடுவாங்களே அது), 'பேக்' பிரிக்காத எலெக்ட்ரானிக் சைக்கிள் பெல் (என் சைக்கிள எங்கூட்டாளியோட தம்பி எடுத்துட்டு போயே பத்து வருஷம் ஆச்சு), இதுக்கு நடுவால எப்பவோ அலமாரியோட மேலைரையில நான் வச்சுட்டு மறந்து போன ஒத்தை 'கிங்ஸ்'. (நல்லவேளை, அதை எடுக்கும் போது அய்யன் அம்மா யாரும் கிட்டத்துல இல்லை..)
எப்படியோ ஓயாம பெயின்ட் தூசிக்கு நடுவால சண்டை போட்டுகிட்டே, 'இப்படியா வீட்டை வச்சிருப்பீங்க'ன்னு அம்மா மேல பழியபோட்டுட்டு (நீ, குடும்பம் நடத்தும் போது பார்க்கத்தான போறேன்னு வேற பயமுருத்தறாங்க) மறுபடியும் வீட்டுக்குள்ள வந்தாச்சுங்க..
இனி ஒரு வாரம் மறுபடியும் புது பெயின்ட் வாசத்துல படுத்து தூங்கி, சளி புடிச்சு.. அய்யோ சாமி...
இந்த குடைச்சலுக்கு நடுவால "மாப்ள, சிக்கிட்டியா, சொல்லவே இல்லை, எப்ப?, யாரு?"ன்னு கேக்கறவனுக்கெல்லாம், "அதெல்லாம் இல்லைடா சும்மா ரொம்ப நாளேச்சேன்ன்னு பெயின்ட் அடிச்சோம் அவ்வளவுதான்"னு பதில் சொல்லியே வெறுப்பாகிபோச்சுங்க.

ஆனாலும், கலரெல்லாம் மாத்தி, வீடெல்லாம் ஒழுங்கா அடுக்கி வச்சுபார்த்தா.. நம் வூடுங்கூட அழகாத்தாங்க இருக்குது..




Saturday, November 20, 2004

என் ஆசை மைதிலியே..

தீபாவளி முடிஞ்சு ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு, இன்னும் தீபாவளி ரிலீஸ் படம் இன்னும் ஒன்னுங்கூட பார்க்காம இருந்தா, அப்புறம் சாமி கண்ண குத்திருமேன்னு, நேத்து எதாவது ஒரு படத்துக்கு போறதுன்னு முடிவு செஞ்சு பொதுக்குழுவ கூட்டினதுல, நம்ம சகாக்கள் மத்தியில அட்டகாசம், ட்ரீம்ஸ்'ன்னு ஒவ்வொரு படமா கழிச்சு கடைசியில 'மன்மதன்' போலாம்னு முடிவு ஆச்சு.. (எல்லாரும் சாமியார் சமாச்சாரத்துல பிசியா இருக்கிறதுனால, விமர்சனம் எழுதாம விட்டுடாங்க போல, அதான் எங்களுக்கு குழப்பமாகிபோச்சுங்க)

சரி இதுவரைக்கும் நம்ம லிட்டில் சூப்பர்ஸ்டார வெள்ளித்திரையில பார்த்ததே இல்லை, முதன் முதல்ல ஒரு முயற்சி செஞ்சிருவோம்னு நானும் தலையாட்டிட்டு, அடிக்கிற குளிருல, கொட்டுர பனியில, ரெண்டாவது ஆட்டம் கிளம்பிபோயிட்டனுங்க (உங்க ஊரு என்னடா குளிரு, இங்க அமேரிக்காவுல, லண்டன்ல இல்லாத குளிரா'ன்னு கேக்காதீங்க, நமக்கு தெரிஞ்சது, நம்ம ஊரு மார்கழி பனிதாங்க).
நல்ல வேளை நாங்க ஒரு நாலு பேரா போனோம்ங்க, எங்க ஊருலயே அதிக சீட் இருக்கிற ATSC தியேட்டருல படம் போட்டிருந்தாங்களா, தனியா போயிருந்தா தியேட்டருல பயமா இருந்திருக்கும்.. அவ்ளோ கூட்டம்ங்க.

நீ படத்துக்கு போன கதைய விட்டுட்டு. படத்தை பத்தி சொல்லுங்கரீங்களா, அதுக்கு தான வர்றேன் அவசரப்படாதீங்க.
D:\manmd

படத்தோட கதையெல்லாம் எல்லாரும் இணையத்துல சுத்துர பல இழைகள்ல படிச்சிருப்பீங்க, அதுனால நானும் நீட்டி முழக்க வேண்டாம்னு நினைக்கிறனுங்க. கொஞ்சம் சிவப்பு ரோஜக்கள் கதை மாதிரி இருந்தாலும், கடைசியில ஒரு எதிர்பாராத முடிச்சு வச்சிருக்காங்க, அது கொஞ்சம் புதுமாதிரியா தாங்க இருந்துச்சு.

ரஜினி படம் பார்க்கிர மாதிரி முதல்ல இருந்து கடைசி வரை சிம்பு, சிம்பு சிம்பு மட்டுமே.. முதல் அரை மணி நேரத்துக்கு அவர் வர்ற எல்லா காட்சியுமே அறிமுக காட்சி மாதிரி கால் தனியா, கை தனியா, பின்னாடி கொஞ்சம்ன்னு பில்டப்புலயே காட்டுனதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் (மத்த படத்துக்கு இது பரவாயில்லைன்னு சொன்னாங்க).எங்கூட வந்த சகா ஒருத்தன் 'சிம்பு நடிச்சு இதுவரைக்கும் வந்த படத்துல இது தான் ஒரளவுக்காது தேறுது'ன்னு சொன்னான்.
ஆனா எனக்கென்னமோ சிம்பு இந்த இயக்கம், திரைக்கதைக்கெல்லாம் இன்னும் பக்குவப்படலைன்னு தாங்க தோணுது. அதுவும் நிறையா காட்ச்சிகள்ல அவர் தான் சொல்ல நினைச்சதா முழுசா காட்சியா காமிக்காம, திரையிலயும் நம்ம முன்னாடி உக்காந்து கதை சொல்ற மாதிரியே சொல்லியிருக்கிறது, என்னவோ ரேடியோ நாடகம் கேக்குற மாதிரி இருந்துச்சுங்க.. (கொஞ்சம்) வலுவான கதைத்தளத்தை கையில வச்சுகிட்டு அதுக்கு இப்படி வலுவில்லாத திரைக்கதைய செஞ்சது தான் தப்பு.
அதுல்குல்கர்னி, கவுண்டமனி, மந்திராபேடி'ன்னு பெரிய நட்சத்திர பட்டளத்தை சுத்தமா வீணடிச்சிருக்காங்க. (அதுல்குல்கர்னி மாதிரியான ஒரு கலைஞனை இப்படி வெட்டியா உலாவவிட்டது நினைக்கும் போது..நற..நற)

சரி.. சும்மா எதுக்கு குத்தமே சொல்லிட்டு. நல்லதா சொல்லவும் நாலு விஷயம் இல்லமாலா போச்சு. குறிப்பா யுவன்சங்கர்ராஜா'வொட பின்னனி இசை, அதுதான் rd.ராஜசேகரோட கேமிராவும் தான் படத்தை இழுத்துட்டு போற முக்கியமான குதிரைக. (ஆமா, யுவனுக்கு பின்னனி இசை செஞ்சு குடுக்கிறது கார்த்திராஜா'ன்னு சொல்ராங்களே, அது உண்மையா?).
அப்புறம் ஜோதிகா.. துளியூண்டு பொண்ணா மேக்கபெல்லாம் இல்லாம கலக்கறாங்க, இந்த மேட்டர இதோட நிறுத்திக்கிறனுங்க, எப்படியும் மீனாக்ஸ் இதை பத்தி சொல்லுவாரு அப்ப பார்த்துக்கோங்க.

முதல் பாதியில நாம படுற அவஸ்த்தைய புரிஞ்சுகிட்டோ என்னவோ ரெண்டாவது பாதியில கொஞ்ச நேரம் வந்தாலும் நம்ம சகலைரகளை 'சந்தானம்' பட்டைய கிளப்பிட்டு போறாருங்க. அவர் சிம்புவ பார்த்து "குணா கமல் மாதிரி இருந்துட்டு சிவப்பு ரோஜாக்கள் கமல் வேலையெல்லாம் செய்யிறயே"ன்னு சொல்ற வசனம், எதோ படத்தோட கதைய பத்தி 'எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை'ன்ன சொல்ற மாதிரி பட்டுதுங்க.

'என் ஆசை மைதிலியே..' பாட்டு சும்மா ஆட வைக்கிற ரகம். என்ன செய்யிறது, உள்ளூரு, அதுவும் நமக்கு தெரிஞ்ச தியேட்டரா வேற போச்சுங்களா, கைய கால கட்டிகிட்டு அமைதியா உக்காந்திருந்தனுங்க.

மொத்ததுல மேல போட்டிருக்கிற படத்துல சிம்பு உக்காந்திருக்கிறாரே அதே மாதிரி தான் நான் உக்காந்திருந்தேன், படம் பூராவும். (ஜோதிகா வர்ற சீன் தவிர:-)..). படம் போன போக்கு மட்டும் அதுக்கு காரணமில்நலைங்க, தியேட்டரோட ஆடியோ சிஸ்ட்டமும் கொஞ்சம் அப்படித்தான்.. (கேட்டா, இப்பத்தான் ரெண்டு வருஷம் முன்னாடி DTS செஞ்சோம்ங்கிறாங்க..).

"வீட்டுல ஆயிரஞ்சோலி கிடக்குது எல்லாத்தையும் விட்டுட்டு துரை ரெண்டாவது ஆட்டம் சினிமாவுக்கு போயிட்டியா"ன்னு எங்கய்யன் காலையில பாட்டு ஆராம்பிப்பாரு, அதுக்கு அதே மாதிரி உக்காந்திர வேண்டியதுதான்..

Friday, November 19, 2004

பதில் பதிவு.

என்னோட முந்தய ஒரே கேள்வி பதிவுக்கு
பின்னுட்டம் குடுக்கிற விதமா 'சீமாச்சு' மரத்தடியில ஒரு மடல் போட்டிருந்தாருங்க.
அதை வழிமொழிஞ்சு 'ஜெயஸ்ரீ'யும் ஒரு மடல் போட்டிருந்தாங்க...

அவரோட பின்னுட்டத்துக்கு பதில் சொல்ல இந்த பதிவு..

----

சீமாச்சு சார்..

நீங்க சொன்ன மாதிரி
//இந்த நான்கு காட்சிகளிலுமே "அந்த கேள்வி" யாருக்கும் தவறாகப் படவில்லை.//

ஆனால் எனக்கு மட்டும் ஏன் பட்டுதுங்கரீங்க?? நீங்க சொன்ன நிகழ்ச்சியும் நான் சொன்ன நிகழ்ச்சியும் ஒரே தர வரிசைதாங்கரீங்களா?

//வன்மத்தையும் இத்தனை நாளாக அடை காத்து இன்று வலைப் பதிவில் குஞ்சு பொரித்திருக்கிறார்//

இப்படியெல்லாம் நீங்க நினைக்கவே வேண்டியதில்லை..

பாவம், நிறைய பேரு (எங்கம்மா உட்பட!) அவர் 'இந்து மதத்தின் தலைவர்'ன்னு நினைக்கிறாங்க அந்த மாதிரி ஆளுகளுக்கு வெணுமின்னா அவர் இப்படி கேட்டது தப்பா பட்டிருக்கலாம்.. சாமி சத்தியமா எனக்கும் அது தப்பா படலைங்க..

எல்லா உயிரனங்களையும் 'நம்மவாளா' நினைக்கிறதுக்கு ஜெயெந்திரர் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மொத்த தலைவரோ, இல்லை பெரிய மக்கள் தலைவரோ கிடையாது, அவர் 'நம்மவளோட' ஒரு பெரிய, முக்கிய பிரதிநிதிங்கிறது எனக்கு புரியுது.. சும்மா எனக்கு ஏற்ப்பட்ட ஒரு அனுபவத்தை சொன்னனுங்க அவ்வளவுதான்.. மத்தபடி எனக்கு சம்பந்தமில்லாத வேறொரு துறைத்தலவரோட நடவடிக்கை பத்தியெல்லாம் நான் தப்பா பேசரதில்லீங்க..

எல்லாம் சாதிக்காரங்களும் மதத்துக்காரங்களும் தான் வேளாங்கன்னிக்கும், ஏர்வாடிக்கும் போறாங்க, ஆனாலும் அதெல்லாம் ஒரு பிரிவுக்காரங்களோட இடம் தான, அந்த மாதிரித்தான் 'காஞ்சிமடமும்'ங்கிறது எனக்கு தெளிவா இருக்கிறதுனால கண்டிப்பா, அவர் கேட்ட அந்த கேள்வி மேல எந்த வன்மமும் இல்லைங்க..

அப்புறம் ஜெயஸ்ரீ மேடம்..

//செக்ஷன் 302-வரை போயிருக்கிறார். அவரைப்பற்றி இப்போதுதான் தம்மாத்தூண்டெல்லம் எடுத்துப்போட்டு சந்திலே சிந்து பாடுகிறது மொத்த இணையமும் //

யாரு சந்தில சிந்து பாடுறாங்கன்னு எனக்கு தெரியலைங்க..நான் கண்டிப்பா பாடுல.. அப்படி நான் சந்துல சிந்து பாடி அதுனால அவருக்கு ஒன்னும் ஆகப்போறதில்லைங்க.. எதோ திடீர்ன்னு எங்காவது பஸ்ஸுல போகும் போது FM ரேடியோவுல "செனோரீட்டா"ன்னு "ஜானி"ப்படபாட்டு போட்டா உடனே நமக்கு எப்பவோ பார்த்த அந்த படத்துல டைட்க்ளோசப்ஷாட்டுல தலையில முக்காடோட தீபா சிரிக்கிற அந்த காட்சி ஞாபகத்துக்கு வருமே (ஒரு வேளை ரஜினிராம்கி மாதிரி ஆளுகளுக்கு அவங்க தலைவர் ஸ்டைலா பைப் புடிக்கிறது கூட ஞாபகம் வரலாம்). அந்த மாதிரி எல்லாரும் 'ஜெயேந்திரர்'ன்னு பேசும்போது நமக்கும் அவருக்குமான அந்த ஒரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வந்துச்சுங்க.. எழுதிட்டன் அவ்ளோதாங்க.. அதுல வேற எந்தமாதிரி உள்ளர்த்தமும் கிடையாதுங்க..

//அவர் கொடுத்திருந்த பில்ட்-அப் பார்த்து நான் கூட, ஏதோ 'ஏன் இவர்களை உள்ளே வீட்டீர்கள்?' ரேஞ்சுக்கு ஏதோ சொல்லிவிட்டாரோ என்று ரொம்பத்தான் எதிர்பார்த்துவிட்டேன்.//

இதை எனக்கு கிடைச்ச பாராட்டா எடுத்தக்கறனுங்க.. (டேய் ராசா.. கடைசி வரைக்கும் எதிர்பார்ப்போட படிக்கிற மாதிரி எழுதறளவுக்கு பெரிய ஆளாகிட்ட..ம்ம்.. கலக்கற போ!!)

கலக்கீட்ட கண்ணு!!


(இந்த பதிவை மரத்தடி குழுமத்திலும் பொது மடலா போட்டிருக்கேன்..)

Thursday, November 18, 2004

அந்த ஒரு கேள்வி....

ஜெயேந்திரர், ஜெயேந்திரர்ன்னு வலைப்பூக்களும், மீடியாவும் பரபரப்பா இருக்கிறாங்க..
நிஜம்மாலுமே மீடியா மட்டும் தாங்க நாடெங்கும் பரபரப்பு அப்படி இப்படிங்கிறாங்க,,
இங்க ஊருக்குள்ள யாருகிட்டயாவது ஜெயேந்திரர்'ன்னு ஆரம்பிச்சா, 'அட நீ வேற பெரிய வாய்க்கால்ல தண்ணி விட்டுருக்காங்க, நாங்க அதை பத்தி நினைச்சுட்டு இருக்கோம், நீ என்னம்மோ பெரிய சாமியரை பத்தி பேசிட்டிருகே'ன்னு சொல்லிட்டு விறுவிறுன்னு போயிடறாங்க..
ஒரு வேளை சென்னையில எல்லாம் பரபரப்பு இருக்குமோ என்னவோ, இங்க நம்ம ஊருப்பக்கம் ஒரு பரபரப்பயும் காணோம்.

சரி.. சொல்ல வந்தது விட்டுபுட்டு வழக்கம் போல கதை பேசிட்டிருக்கேன்..

ஒரு 5 வருஷம் முன்னாடி, எங்கய்யனோட கூட்டாளிக ரெண்டுபேரு குடும்பம், எங்கய்யன் அம்மா, நான்னு ஒரு கூட்டம ஒரு புனித யாத்திரை போயிருந்தோமுன்ங்க. புனித யாத்திரைன்னதும் யாரும் எதோ பெருசா காசி (தமிழ்மணம் காசி'யிலீங்க.. இது வேற), இமயமலைன்னு நினைச்சுராதீங்க, இங்க இருந்து அப்படியே கெளம்பி திருப்பதி போயி அப்படியே வரும்போது காஞ்சிபுரம், திருத்தனின்னு வந்தோம் அவ்ளோதான்..
நமக்கு எற்க்கனவே இந்த சாமி, பக்தி.. இதுக்கெல்லாம் கொஞ்சம் தூரம்ங்க, இருந்தாலும் அப்போ காலேஜ் முடிச்சுட்டு வீட்டுல வெட்டியா இருந்த நேரமா, சரின்னு நானும் போயிருந்தனுங்க.
எல்லாம் நல்லத்தான் இருந்துச்சு, இவுங்க ஒவ்வொரு பக்கமா ஓடி ஓடி சாமி கும்பிடறதும் (அதென்னமோ இந்த பொம்பிளைக, எந்த கோயிலுக்கு போனாலும், எல்லாரும் வெளிய வந்த பின்னாடி மறுக்கா ஒரு தடவை உள்ள போயி சாமி கும்பிட்டுட்டு தான் வருவோம்ன்னு அடம் பிடிக்கறாங்க).
கூடவே நானும், செந்தானும் (செந்தில்குமார் - எங்கய்யனோட கூட்டாளி பையன், எனக்கும்தான்), இவங்களுக்கு பாதுகாப்பா போயி எங்களால முடிஞ்சளவுக்கு 'தரிசனம்' செஞ்சுகிட்டு வந்திருவோம்.
அப்படிபோனப்பத்தான் நமக்கு காஞ்சிபுரம் ஜெயேந்திரரை தரிசிக்கிற வாய்ப்பு கிடைச்சது. எங்க அய்யனுக்கு கொஞ்சம் பழக்கமான் சென்னை 'வக்கீல் அங்கிள்' தான் எங்களை கூட்டிட்டு போயி இன்னாருன்னு சொல்லி ஆசிர்வாதம் வாங்கி குடுதாருங்க,
சாமியாரு முன்னாடி உக்காந்திருக்க, ஒவ்வொருத்தரா போயி கும்பிடு போட்டுட்டு வந்தாங்க, நானும் எங்கம்மாவோட 'அக்னிப்பார்வை'ய சமாளிக்க முடியாம போய் அசிர்வாதம் வாங்கிட்டு அப்படியே பக்கத்துல நின்னேன்.
எனக்கு அடுத்து செந்தான், அவன் தங்கச்சி, அவுங்க அய்யனம்மா எல்லாரும் ஆசிர்வாதம் வாங்க வந்தாங்க.
(இந்த எடத்துல ஒன்னு சொல்லனும் - நானும் எங்கம்மாவும் கொஞ்சம் திராவிட கலர்.. சரிங்க.. கொஞ்சம் கருப்பு. எங்கய்யன் நல்ல கலரா இருப்பாருங்க, ஆனா செந்தான் குடும்பத்துல எல்லாரும் கொஞ்சம் நல்லாவே பளபளப்பா இருபாங்க, இதுல செந்தானோட அய்யன், மீசையெல்லம் வழிச்சுட்டு ஜம்முன்னு இருப்பாருங்க)
இவுங்க குடும்பமா வந்து சாமியார் முன்னாடி நின்னது சாமியார் வக்கீல் அங்கிள் பக்காமா திரும்பி ஒரு கேள்வி கேட்டருங்க, அது எனக்கு நல்லாவே காதுல விழுத்துச்சுங்க.. அதை நான் வெளிய வந்தததும் எங்க கூட்டத்துல சொன்னேன், ஆனா ஒரு ஆளும் (எங்கய்யனும், அவரோட இன்னொரு கூட்டளி தவிர) யாரும் நான் சொன்னதை நம்பவேமாட்டேனுட்டாங்க.
ஆனா, நிஜம்மா சொல்றேனுங்க, அவர் அப்படி கேட்டது உண்மை. சரி என்னை நம்பாட்டி 'வக்கீல் அங்கிள்'கிட்ட கேட்டு பாருங்கன்னு சொன்னேன், வேண்டாம்னு தடுத்துட்டாங்க.. நானும் அதுக்கப்புறம் 'வக்கீல் அங்கிள்'ல பார்க்கிறப்பெல்லாம் கேக்கனும்னு நினைக்கிறது, ஆனா, சரி வேண்டாம், நமக்கு ஆகாதுன்னா விலகிறனும், எதுக்கு சும்மா அதை கிளறிட்டுன்னு விட்டுறது..

அப்படி என்னடா கேட்டாருங்கரீங்களா??
பார்த்தீங்களா.. நான் எப்பவுமே இப்படிதானுங்க.. சொல்ல வேண்டியதை சொல்லாம எல்லாத்தையும் சொல்லுவேன்.. ச்சே.. இந்த பழக்கத்தை எப்படியாவது மாத்தனுமுங்க..

அவர் கேட்டது "இவா நம்மவாளா?"

------------------------------------

சட்டை கிழிஞ்சிருந்தா தச்சு உடுத்திக்கலாம்..
நெஞ்சு கிழிஞ்சிருச்சே.. எங்க முறையிடலாம்...

------------------------------------

எல்லாரும் நல்லா இருக்கீங்களா??

வீரப்பன், ஜெயெந்திரர், தனுஷ்-ஐஸ்வர்யா'ன்னு பல விறுவிறுப்பான, பரபரப்பான, செய்திகளுக்கு நடுவாலயும், இந்த 'ராசா'வை காணமுன்னு நேத்திக்கு உலகம் பூராவும் உள்ள தமிழர்கள் அவுஙகவுங்க வீட்டுல, அலுவலகத்தில, அவுங்களோட கணிணி முன்னாடி ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் செஞ்சாங்கங்கிற செய்தி, என்னுடய ஜப்பான் நாட்டு ரசிகையான செல்வி.ஜியாவூ(!) சித்த முன்னாடி என்னை என்னோட கைத்தொலைபேசியில கூப்பிட்டு சொல்லித்தாங்க தெரிய வந்துச்சு.

உலகமெங்கிலும் உள்ள அனைத்து தமிழர்களின் நலன் கருதி(!),
அவர்களுடைய ஆர்ப்பாட்டத்திற்க்கு மதிப்பு குடுத்து,
அதுமட்டுமில்லாம,
தனிமடல் மூலமாக என் பதிவை பத்தி வருத்ததோட விசாரிச்ச, என்னை வாழ வைக்கும் தெய்வங்களான என்னுடைய பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் வேண்டுகோளுக்கினங்கி,
கொஞ்ச நாளா கண்டுக்காம விட்டிருந்த என்னோட இந்த பதிவை மறுபடியும் தூசு தட்டி ஆரம்பிக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கனுங்க..

//
டேய்.. டேய்.. இது அடுக்குமா, இத்தனை நாளா பதிவு செஞ்சு, உன்னோட hitcounter இப்பத்தான் 2000த்தை தாண்டியிருக்கு, இதுக்கே பல்லாயிரக்கனக்கான ரசிகர்களா??..ம்ம்

சரி..சரி.. ஒரு பேச்சுக்கு ஒரு வார்த்தை சொன்னா, உடனே கோவிச்சுக்குவீங்களே!
//

தூசு தட்டியாச்சு... இனி என்ன..??

அது தெரிஞ்சா நான் எழுதிர மாட்டனா?
அதைதாங்க யோசிச்சிட்டு இருக்கேன்.. அவசரப்படாதீங்க..


Friday, November 5, 2004

என்னவென்று சொல்வதம்மா..

dog



என்னத்த சொல்லறது போங்க...
வலைப்பக்கம் வரனுமின்னுதான் நினைக்கிறனுங்க.. ஆனா??
ம்ம்..
"நேரம் வரும் காத்திருந்து பாரு ராசா"

(யாருங்க அது?? காணாத போயிட்டான்னு நினைச்சு சந்தோஷமா இருந்தேன்னு முனங்கிறது..)