Sunday, March 2, 2014

ஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்

ஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்: பதிவர் : Paval MV ( @paval ) பொன்னாளை கல்யாணம் கட்டிய புதிதில், மொட்டையாக மரங்கள் எதுவுமின்றி இருந்த தன் மாமனார் வீட்டு வாசக்களத்தி...




Thursday, February 27, 2014

Monday, February 3, 2014

கனவின் கனவே - லூசியா


லூசியா.. வெகுநாட்களாக கிடப்பில் போட்டுவைத்து, நான் சமீபத்தில் பார்த்த, முதன்முதலாக இணையத்தில் தரவிறக்கி பார்த்த, இரண்டாம் முறையும் பார்த்த - ஒரே கன்னடத்திரைப்படம். LUCIA.

கன்னடத்திரைப்படங்களில் தற்போதைய நிலை.. தரம், அவர்கள் எப்படி உன்னதமான சினிமாக்களை அந்தக்காலத்தில் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.. இன்னும் எவ்வளவு அருமையான படைப்பாளிகள் அங்கே யாருக்கும் தெரியாமல் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள், இந்த படத்தின் கதை எப்படி சென்ற இடத்தில் எல்லாம் நிராகரிக்கப்பட்டது, பின்னர் crowd financing மூலம் எப்படி இந்த லூசியா எடுக்கப்பட்டது.. அதன் மூலம் மற்றவர்கள் (முக்கியமாக தமிழ் சினிமா வெற்றியாளர்கள்) கற்றுக்கொள்ள வேண்டியது என்ன.. இன்னபிற, சமூக -பண்பாட்டு-கலை-அற-ஈனவெங்காயங்கள் எல்லாம் கொண்ட விமர்சனங்கள் நிறைய வந்திருக்கவேண்டும், ஒன்லைனர்கள் தவிர நான் எந்த தமிழிணைய லூசியா விமர்சனங்கள் எதுவும் (இன்னும்) படிக்காததால் சுட்டி கொடுக்க முடியவில்லை..

லூசியா என்ற பெயரே, கொஞ்சம் ஆர்வமாக‘எட்டிப்பார்க்க’ வைத்த பெயர் தான்.. அதற்கு, இலவசமாக இணையத்தில் கிடைத்ததையெல்லாம் இறக்கும்/இரக்கும் வியாதி உச்சத்தில் இருந்த காலத்தில் சப்டைட்டிலும் இல்லாமல் முழுப்படத்தையும் ம்யூடிலேயே பார்த்த ஸ்பானிய ’செக்ஸ் & லூசியா’ திரைப்படத்தில் அந்த ’லூசியா’ எனும் சொல் ஞாபகம் இருந்தது தான் காரணமாக இருக்கவேண்டும்.அதற்கும் இதற்கும் எந்த தொடர்புமில்லை என்று இந்த படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் தெரிந்துவிட்டது. நிம்மதி.

கனவுகள்,கனவுகளுக்குள் கனவுகள், நிகழ்வுகளோட சங்கமிக்கும் கனவுகள் என்று நோலனார் நமக்கு திகட்ட திகட்ட காட்டிய களம் தான்.அத்தகைய பிரம்மாண்டங்கள் எல்லாம் இல்லாமல், அந்தரத்தில் பல்டி எல்லாம் அடிக்காமல், கிடைத்ததில்  கனகச்சிதமாக அடித்து விளையாடியிருக்கிறார்கள். உறக்கமின்றி தவிக்கும் ஒருவன் உறக்கத்துக்காக ‘லூசியா’ என்ற ஒரு தெருவோர வஸ்த்துவை எடுத்துக்கொள்கிறான். ‘Lucid Dream'நிலைக்கு கொண்டு செல்கிறது.அந்த கனவையும் நிகழ்வையும் கனவின் கனவையும் மாற்றி மாற்றி திரையில் நமக்கு எந்த குழப்பமும் இல்லாமல் காட்டியிருக்கிறார்கள். கொஞ்சம் ஏமாந்தாலும் இரண்டு நிமிட நூடில் கருமாந்திரம் போல ஆரம்பமும் முடிவுமற்று அலங்கோலமாய் போய்விட சாத்தியமுள்ளதை அழகாக ஒரு தேர்ந்த பரோட்ட மாஸ்டர் போட்ட முட்டைகொத்து சாப்பிட்டால் எப்படி கொஞ்சம் கூட பரோட்டாவின் மைதா அரூபருசி தெரியாமல், முட்டையும் தக்காளியும், சால்னாவும், குருமிளகும், வெங்காயமும் கண்ணுக்கு தனித்தனியாக தெரிந்தாலும், நாவுக்கு ஒரு சேர சேர்ந்து ருசிக்குமோ அது போல.

கதை? அதெல்லாம் வழக்கம் தான்.

(1)
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டு பெரும்பணத்துடன் அனாதையாக வாழ்ந்து, சினிமா நடிகனான புகழ்பெற்ற பின்னும் உள்ளூர ‘ஆள்கூட்டத்தில் தனியே’ ரேஞ்சில் நிஜ அன்புக்காக ஏங்கும் ஒரு ‘நிக்கி’. அவனுக்கு கிடைக்கும் ஒரு காதல், இழப்பு, விரக்தி.கொஞ்சம் கிச்சுகிச்சு மூட்ட ஆந்திரா தயாரிப்பாளர், தமிழ் இயக்குனர், வழியும் சக நாயகி, நிழல் உலக வசூல்கள்.

(2)
சிறு கிராமத்தில் இருந்து வந்து ஒரு மாநகரத்தின் ஓரத்தில் வாழ்ந்துகெட்ட திரையரங்கில் உதிர்ந்துகொண்டிருக்கும் கூரைக்கு கீழ் பார்வையாளர்களுக்கு இருட்டில் உட்கார இடம்காட்டும் ‘டார்ச் போடும்’ வேலையை விசுவாசமாக பார்த்துக் கொண்டு, முதலில் உதாசீனப்படுத்திய சூப்பர்-பேமிலி பிகரை செண்டியாக நடந்து மயக்கி, அவளும் வந்து இவனை கொஞ்சமாவது செல்லுபடியாக்க இங்கிலீசு எல்லாம் கத்துகொடுக்க முயற்சிக்கும் செல்வராகத்தனம் பூசிய விக்கிரமன் பட நாயகன் போல் ஒரு ‘நிக்கி’.

ரெண்டு லைனுமே, தாழ்வுமனப்பான்மையில் காலங்காலமாக தவித்துக்கொண்டிருக்கும் ஒரு சாமன்ய ரசிகனுக்கு அப்படியே லட்டு மாதிரி.. கூட்டமா போயி, இருட்டில விசிலடிச்சு, காகிதத்த பறக்கவிடு மனசுகுள்ளார பீலிங்க்சோட, மகிழ்ச்சியா படம் பார்த்துட்டு வெளிய வர வைக்க முழு காரண்டியான களம், இதை வச்சுகிட்டு எப்படிய்யா.. பெஸ்டிவல், விருது எல்லாம், அது தான் டெக்னிக்கி :) விஞ்ஞானம்.!!

இதில் ஒருவனின் கனவில் இன்னொருவன், அவன் கனவில் இவனா, இவன் கனவில் அவனா என்று பார்வையாளனை அப்படியே மிதக்கவிட்டு, சுவாரஸ்யமா முடிச்சை இருக்கி.. அழகா கொஞ்சம் சுமாராவே அவிழ்க்கிறார்கள். இந்த இரண்டு கனவுக்கு நடுவில் ஒரு குற்றம், போலீஸ், தனியார் டிடெக்டிவ், புலனாய்வு, ஆஸ்பத்திரி .. இன்னும் சில.

இப்படி ஒரு படத்துக்கு முதுகெலும்பு.. எது படத்தொகுப்பாளர் தான். கச்சிதமா வெட்டி ஒட்டியிருக்கார். நாயகன் சதீஷ் - அட்டகத்தி படத்தில் தினேஷை பிடித்த அளவுக்கு இவரையும் பிடித்தது... வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார்.. இரண்டு கலரில், கனவிலும் நினைவிலும் வருபவர் வேறு வேறோ என்று சில நிமிடங்கள் நினைக்குமளவுக்கு அற்புதமாக நடை
பாவனை பேச்சு என்று அனைத்திலும் வித்தியாசப்படுத்தியிருக்கிறார். எதாவது நல்ல தியேட்டர், ஆர்ட் ஹவுஸ் என்று சிக்கி பிழைத்துகொள்ள வேண்டும்.. வேறு என்னத்த சொல்ல. நாயகி ஸ்ருதி - அழகு, பிடிஎம் காபிடே’யில் கூட இதே போல்.. சரி வேண்டாம், அது நம் பர்ஸனல் :)  கொஞ்சம் டப்பிங்கில் கவனம் செலுத்தியிருக்கலாம். அல்லது பின்னர் வசனங்களில் இம்ப்ரூவ்மெண்ட்டுக்காக செய்தார்களோ என்னவோ, சில இடங்களில் உதட்டுக்கு ஒட்டாமல் ஓடியது. சப்டைட்டில் பார்ப்பவர்களுக்கு இதெல்லாம் ஓவர் தான் என்றாலும்.. சொல்ல வேண்டிய வரலாற்று கடமை நமக்கு இருக்கிறதே.

நிறைய அவார்டெல்லாம் வாங்கியிருக்காம், வாங்க இருக்காம்.. ம்ம் தியேட்டரில் பார்த்திருக்கலாம். விட்டாச்சு. அதுக்கு பரிகாரமா இந்த இயக்குனரின் அடுத்த படத்தை அரங்கத்தில் சென்று பார்ப்பது என்று முடிவு செய்தாயிற்று.. பார்க்காதவர்கள் இறக்கி பார்க்கவும். அல்லது 5$ கொடுத்து பார்க்கவும் நல்ல ப்ரிண்ட், சப்டைட்டிலோடு கிடைக்கும். எறக்கசெலவழித்த அலைத்தொகுப்புக்கும் பார்க்க செலவழித்த நேரத்துக்கும்.. இதை எழுதத்திருடிக்கொண்ட நேரத்துக்கும் சேர்த்தே..
**பைசா வசூல் - மீட்டர் வட்டியுடன்**




Friday, January 17, 2014

படிமம்

‘(சம்வித்யாகம் போறா) இயக்கம் பத்தாது, இன்னும் கொஞ்சம் நன்றாக வந்திருக்கவேண்டும், நாயகனுக்கு கொஞ்சம் கூடுதல் க்ளோசப் வைத்திருந்தால் தான் பார்ப்பவர்களுக்கு அந்த காட்சியின் பரபரப்பு சென்று சேரும்’ என்று தொடங்கும் உரையாடல் தான் கதை நாயகன் ஜார்ஜ்குட்டிக்கு படத்தில் முதல் வசனம்.

‘த்ரிஷ்யம்’ - திரைப்படத்தின் நாயகன் அதன் இயக்குனர் ஜீத்துஜோசப் தான். இயக்கம் மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை எழுதியவரும் அவரே. அந்த முதல் வசனத்தில் சொலவது போல் எந்த ’கைநாற்காலி’ விமர்சகரும் சொல்வதற்க்கு வழியில்லாமல் அற்புதமாக செய்திருக்கிறார்.

மலையாளம் கண்ட மாபெரும் வெற்றிப்படமான ‘யவனிகா’வுடன் இந்தப்படத்தையும் அதே தளத்தில் வைத்து விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. யவனிகா’வும் ‘த்ரில்லர் வகைதான், ஆனால் அது வேறு தளம் இது வேறு தளம். யவனிகா’வின் பரப்பு இன்னும் கொஞ்சம் விஸ்தீரமானது. ‘த்ரிஷ்யம்’ வேறு வகை. தெளிவாக பார்வையாளர்களை கவரவேண்டும் என்ற மசாலாபடங்களின் ஒரே குறியை வைத்து திட்டமிட்டு பின்னப்பட்ட கதை தான்.

ஒரு கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தி, அவன் குடும்பத்தை பற்றிசொல்லி, அவன் பூர்வீகத்தை அலசி, அவனைப்பற்றி மானே தேனே போட்டு நல்லவிதமாக பார்ப்பவர்கள் மனதில் ‘ச்சே எம்புட்டு நல்லவன்’ என்று முழுவதுமாக ஒத்துக்கொள்ளுமாறு காட்சியமைப்புகளை நகர்த்தி, பார்வையாளர்கள் அந்த குடும்பத்தை முழுவதுமாக நேசிக்கும் பொழுது திடும் என்று ஒரு சிக்கல் வந்து நிற்கிறது - டொட்டடய்ங் என்ற இசையில்லாமல். அதுவும் இரண்டு சின்ன பெண்கள் இருக்கும் அழகிய குடும்பத்தில், (கொஞ்சம் நிறையவே பூசினாற்போல் இருந்தாலும் பெண்களின் தாயாக வரும் மீனா இன்னும் அழகு தான்) வயசுவந்த பெரிய பெண் தான் சிக்கலின் மையப்புள்ளி. வயசுபுள்ளைக்கு சிக்கல் எனும்போதே அரங்கில் அமர்ந்திருக்கும் 90சதம் பேருக்கும் அடிவயிறு கலங்கித்தான் போகிறது. குறி தவறவே இல்லை.

வந்த சிக்கலுக்கும் கொஞ்சம் பலம் வேண்டுமே, எம்ஜிஆருக்கு ஏற்ற நம்பியார் போல், வில்லனுக்கு கெத்து இருந்தாத்தான ஹீரோவுக்கு மரியாதை, இங்கே நாயக்ன் சாமான்யன். நம்மூரில் பெரும்பான்மையோர் மிரள்வது அதிகாரவர்கத்தின் கோரமுகத்துக்கு தான், அதைவிடவா சிக்கலுக்கு வெயிட் வேண்டும், பெரும் அதிகாரத்தில் இருப்பவரின் வாரிசு தான் உள்ளே நுழைந்த சிக்கல். சிக்கலை துரத்திவிட்டு சட்டத்தில் இருந்து தப்பிக்க போராடுவது தான் மிச்சம். சாமன்ய நாயகன் மற்றவரைப்போல் ஆகாயசூரனாக இருக்கமுடியாது ஆனால் புத்திசாலி, புத்தியை உபயோகித்து தப்பிக்க திட்டமிடுகிறான், அதிகாரவர்கத்தையே ஏமாற்ற வேண்டுமே, கொஞ்சம் பலமான திட்டமிடல் தான். படிப்பதற்க்கு ஒன்றுமே விசேஷமாக தெரியவில்லை அல்லவா, ஆமாம் அதே தான். ஆனால் இதை 2.45 மணிநேரம் பார்ப்பவர்களை திரையை விட்டு அகலாமல் கட்டிப்போட்டு பார்க்க வைத்ததில் தான் வெற்றி இருக்கிறது.

இரண்டரை மணிநேர திரைப்படத்தில் சவுத் இண்டியன் புல்மீல்ஸ் போல வகைக்கொன்றாய் பாடல்கள், நடனங்கள், தனிக்குலுக்கல்கள், கூட்டுகுலுக்கல்கள், நமது ட்வீட்டரில் சுட்டு பாலீஷ் போடப்பட்ட நகைச்சுவைத்தோரணங்கள், அதிரடி சண்டைகள், பறக்கும் கார்கள், அயல்தேச அழகிய லொக்கேஷன்கள், தங்கத்தில் சுவரெழுப்பும் நவீன ஆசாரிகளின் வேலைப்பாடுகள் என்றெல்லாம் நிறைத்தும் படம் பார்ப்பவன் என்னவோ பொது கக்கூசில் சங்கடத்துடன் உக்கார்ந்திருப்பவன் மனநிலையில், ‘எப்படா முடிப்பீங்க’ என்று கதறும்படியான சமகால திராபைப்படங்களுக்கு நடுவில் ‘த்ரிஷ்யம்’ கொண்டாடப்படவேண்டியது தான்.

நமது புரட்சிகலைஞரின் பாணியை பின்பற்றி நாயகனே கடைசியில் ஒரு நீண்ட வசனத்தில் ‘ஒரு பெரும் சிக்கல் எங்கள் குடும்பத்திற்க்கு வந்தது, அந்த சிக்கல் எங்கள் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக கலைத்துபோடப்பார்த்தது, நாங்கள் கெஞ்சி கதறினோம் போராடினோம் அதற்கிடையில் எதிர்பாராமல் அந்த சிக்கல் என்றென்னைக்குமாய் எங்கள் குடும்பத்தை மீண்டும் தொந்தரவு செய்யாதபடி செய்ய நேர்ந்துவிட்டது, எங்களுக்கு வேறு வழி இல்லை, இனி அந்த சிக்கல் எங்களை நெருங்காது என்ற நிம்மதி இருந்தபோதும், தெரிந்தோ தெரியாமலோ சிலரின் கனவுகளை சிதைத்துவிட்டோம், மன்னித்துவிடுங்கள்’ என்று ‘கதையின் சாரம்சம்சத்தை சொல்லி விமர்சகர்களின் வேலையை சுலபமாக்கிவிடுகிறார். அந்த இடத்தில் படம் முடிந்துவிட்டது தான், இன்னும் சொல்லப்போனால் அதற்க்கு முந்தய சீனிலே கூட படம் முடிந்துவிட்டது தான்.. ஆனால் அதற்க்கு அப்புறமும் ஒரு சீன் வைக்கிறார் பாருங்கள்.. அங்கே தான் சாமான்யன் சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு போகிறார்.. அரங்கமே கைதட்டி ஆர்ப்பரிக்கிறது.. அங்கே நிற்கிறார் இயக்குனர்..  ஜீதுஜோசப் - இனி நமது ‘should not miss list'ல் இவர் கண்டிப்பாக இருப்பார்.

கேரளா லொக்கேஷன் நல்லாஇருந்தது, மோகன்லால் நல்லா நடித்தார், துணை கதாப்பாத்திரங்கள் கூட அருமையான நடிப்பு என்ற விஷயங்களை எல்லாம் இந்த படத்தின் விமர்சனங்களில் சொல்லியிருப்பார்கள், படித்துக்கொள்ளவும்.

படம் முடிந்து வெளிவரும்பொழுது உடன் வந்த நண்பர் ”இதை தமிழில் எடுப்பதாக சொன்னார்களே, அதுவும் சமீபமாக ராடான்’ நிறுவனம் தான் மலையாளத்தை தமிழ் ‘படுத்தி’ வருகிறது.. ஒருவேளை சரத் அல்லது சேரனை வைத்து இந்தப்படம் தமிழில் வந்துவிடுமோ” என்ற சந்தேகத்தை  கேட்டு என் ஒட்டுமொத்த திரையனுபவத்தையும் கெடுத்துவிட்டார் என்பதையும் இங்கே பதிவு செய்துகொள்கிறேன். 

Monday, January 6, 2014

தொட்டவனை மறந்ததென்ன.. (அவசர குறிப்புகள்)

பத்தாவது வரைக்கும் டீச்சர் பையன் என்ற ஒரு சமூக மிரட்டலில்! படிக்கும் பையன் வேஷத்தை கலைக்கமுடியாமல் கூட்டுப்புழுவாய் இருந்த காரணத்தால் பெரிதாக பாட்டுகீட்டு கேட்கும் வழக்கமெல்லாம் இல்லை.. வீட்டில் இருந்த நேஷனல் டேப்ரிக்கார்ட் எல்லாம் என்றாவது சில வாரயிறுதிகளை தவிர தொட்டு பார்த்தது கூட இல்லை.. அதில் அதிகம் கேட்டது ‘காத்தோடு பூவுரச’வும் ‘மெளனகீதங்கள்’ திரைவசனமும் தான். பாட்டெல்லாம் காலை நேர கோவை/திருச்சி ரேடியோக்களில் மெயின்கார்ட்கேட் சாரதா சில்க்ஸ் விளம்பரத்துக்கும், கேரம்போர்ட்டு விளையாடு பாப்பா’வுக்கும் நடுவில் கேட்டது தான், அதுவும் அதில் காலையில் முதல் பாடலுக்கு முன் வரும் பொது அறிவு வினாவை நோட் புஸ்தவத்தில் எழுதிவைத்து படித்தால் பையன் அறிவாளியாகிவிடுவான் என்று நம்பின எங்கய்யனின் நம்பிக்கையினால் கேட்ட பாடல்கள் தான். எம்ஜிஆர் காலத்தில் எம்.எஸ்.வி இருந்தார், கமல் காலத்தில் இளையராஜா இருந்தார் என்ற அளவில் நம் பொதுஅறிவு இருந்த காலம் அது.

‘அவளுக்கு கொஞ்சம் ஹெட்வெயிட்டுடா’பேச்சுக்களை கேட்கவும் எப்படியாவது காலனி க்ரிக்கெட் டீமில் விக்கெட்கீப்பராகவும் பர்ஸ்ட்டவுனாகவும் இடம்பிடித்துவிடவேண்டி அக்கம்பக்கத்து வீட்டு அண்ணன்களுடன் வரித்துக்கொண்ட சகவாசத்தில் அஞ்சலி, சத்ரியன், மைமகாரா, தளபதி, குணா, மீரா, ஆத்மா என்று கலவையாக கார்ஸ்டீரியோக்களில் இருந்து மண்பானைக்குள் வைத்த ஸ்பீக்கர்/ட்வீட்டர்கள் வழியே வரும் இசைக்கெல்லாம் கிதாரை அணைத்தபடி ஒரு பெரிய கருப்புவெள்ளை ப்ளோஅப்பில் அம்சமா இருக்கும் ‘மொட்டை’ என்பவர் தான் காரணம் என்று தெரியவந்தது. கமலுக்கு வேறு க்ளோஸ்ஃப்ரெண்ட் என்றார்கள், ரொம்பவும் பிடித்துபோய்விட்டது.

பத்தாவது முடித்ததும் ‘படிக்கும்பையன் எங்கிருந்தாலும் படிப்பான்’ சித்தாந்தத்தில் நம்பிக்கைவைத்து எங்கய்யன் ’கட் அண்ட் ரைட் டை கட்டி ரைட்’பள்ளியில் இருந்து ’கட்டடிப்பதே ரைட்’ என்றும் 9:15 அட்டெண்டன்ஸ் எடுப்பது மட்டுமே வாத்தியார் வேலை என்ற சிஸ்டத்தின் படி இயங்கிக்கொண்டிருந்த இடத்துக்கு இடம்பெயர்த்துவிட.. அவிழ்த்து விட்ட வீட்டு நாய் பைத்தியம் பிடித்து தெருவில் அலைவது போல் அலைந்து முக்திபெற்ற பிறகு ’அந்த பாட்டுல ஒரு வயலின் பிட் வரும் பாரு’ ரக உரையாடல்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன்..
அப்பொழுது தான் ‘கலைஞன்’ வந்தது.. அதுவரை கேட்டமாதிரி இல்லாமல் இந்த மொத்த ஆல்பமும் கொஞ்சம் புதுமாதிரியா தெரிய.. ரஹ்மான் என்று ஒருவர் புதிதாக வந்துவிட்ட சமாச்சரம் எனக்கு தெரிவிக்கப்பட்டது. சகஹிருதயர்களுடன் ’என்னவென்று சொல்வதம்மா’ கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்து ’பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ’ கேட்க ஆரம்பித்தேன்.
அந்த இடம் துடிக்க’/ ‘சாயங்காலம் வம்போ வம்போ’ போன்ற வரிகள் இருந்ததால் எங்கள் மேத்ஸ்டீச்சரால் தடைசெய்யப்பட்டு ரஹ்மான் என்று ஒருவர் வந்ததாகவே எங்கள் பள்ளிநண்பர்கள் குழுவில் (முதல் இரண்டு பெஞ்சு மட்டுமே அனுமதி) நவநாகரிக தலைவன்‘ரோகனா’ல் கவனிக்கப்படாமல் இருந்திருந்தது என்ற உண்மை புரிந்த காலகட்டம் அது. அப்புறம் பாலும்யூசிக் லேபிளுடன்ஒரு TDK metallic 60ல் புதியமுகமும் உழவனும் எறங்கி வந்து ஆக்ரமித்தார்கள். ஒரு கோவைப்பயணத்தில் ட்ரைவர் மணி மூலமாக முதல்முறையாக காரில் ‘சிக்குபுக்கு’ போடப்பட்டு, உடன் வந்த அய்யனுக்கும், அவரின் நண்பர்களுக்கும் பிடிக்காமல் போக, ரஹ்மானை எனக்கு உடனடியாக பிடித்துப்போனது.. கோவை சென்றதும் பேகிபேண்ட்டும் ஒரிஜினல் ஜெண்டில்மேன் கேசட்டும் வாங்கியதும் வரலாற்றில் பதிவுசெய்யவேண்டிய நிகழ்ச்சி தான்.

 புதிதாக வந்த கேபிள்டிவியில் ATN channelல் மழையோடு வரும் ’மஸ்த்துமஸ்த்து’களும் ‘குச் தூர் சல்த்தே’களும் ஆங்காங்கே கேட்டுக்கொண்டு இருந்தாலும், அடுத்தகட்டமாக நெருங்கியவட்டத்தில் காதல் வந்து, முதன்முறையாக வாழ்வில் பொதுநூலகம் வரை சென்று அரைநாள் செலவழித்து காதல்கடிதம் எல்லாம் எழுதிகொடுத்துக்கொண்டிருந்த காலத்தில் இன்னொரு TDKல் பம்பாய்/இந்திரா என்று வர ஆரம்பித்திருந்தது.. இன்றும் அந்த கேசட்டில் ‘வந்து என்னோடு கலந்துவிடு’ என்ற இடம் மட்டும் கொஞ்சம் சத்தம் கம்மியாகத்தான் ஒலிக்கும், எங்கள்  வீட்டு மொட்டைமாடியும் மாடிப்படியிலுமாக அமர்ந்து அதை அப்படி தேய்த்து உருகிக்கொண்டிருந்தான் என் நண்பன்.. அப்புறம் கொஞ்ச நாள் கழித்து ‘பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா’ என்பதை நான் ரீவைண்ட் - பார்வர்ட் - ப்ளே செய்து கொண்டிருந்தேன்.

கோவைப்பழக்கவழக்கமும் கல்லூரி அறிமுகங்களும் கிடைத்து கஜோலா மாதுரிதீட்சித்தா என்ற பஞ்சாயத்துகளுக்கு நடுவராக இருக்கும் பொருட்டு ‘ப்யார் ஹோத்த்தா ஹெ தீவானா சன’மும் ‘பெஹ்லி பெஹ்லி பார் ஹெ’வும் ஹாஸ்டல் இரவுகளை நிறைத்துக்கொண்டிருந்த வேலையில் அன்றைய இந்திமொக்கை வடஇந்திய பிரசாந்த் அமீர்கான் படத்துடன் ஊர்மிளாவும் ஜாக்கியும் நிற்க்கும் சூப்பர் ஸ்டில்லுடன் ஒரு டைம்ஸ்காஸெட் ஈரோட்டில் வாங்கப்பட்டது. ‘யாரோ சுனோ சரா’வை வால்யூம் ஏத்திவச்சு ‘ஒரே பாட்ட திருப்பி திருப்பி 14 தடவை போட்டு ஹிட்டாக்ககூடாதுடா, அதுவும் எங்க பாலு வாய்ஸ்ல.. இதக்கேளு, எங்காளு பாட்டு’ன்னு காலர தூக்கிவிட்டு  சிக்கிய ஒன்றிரண்டு அமித்துகளை கலாய்த்துக்கொண்டிருந்த பொழுது முழுமையான தலைவனாகிவிட்டிருந்தார் ரஹ்மான்.
லவ்பேர்ட்ஸ், காதல்தேசம், Mr.ரோமியோ, மின்சாரக்கனவு, இருவர், தவுட்.. என்று அப்புறம் சிங்கப்பாதை தான், நடுவில் கொஞ்சம் ஜீன்ஸ், படையப்பா, எல்லாம் இருந்தாலும், காதலர்தினமும், (த்)தால்’ம் கல்லூரி கடைசிகாலத்தில் அன்பாலயா, சூப்பர்குட், சிவசக்தி, மைக்முரளி, விக்கிரமன், அகத்தியன் என்றவர்கள் ஏற்படுத்திய பெரும் அலைகளுக்கு நடுவிலும், காதலுக்கு மரியாதை போன்ற சூராவளியில் எல்லாம் லேசாக்கூடசிக்காமல் ‘வலிக்கலையே வலிக்கலையே’ என்று மகிழவைத்தது.

அப்புறம் வேலைக்கெல்லாம் போக ஆரம்பித்த பிறகு, சென்னை வந்து அலைபாயுதே பார்த்ததோட கொஞ்சம் கொஞ்சமாக... அவரும் முழுமுயற்ச்சியாக இந்தி, அமேரிக்கா, லண்டன்  என்று போய்விட்டார்..  அவருடன் சேர்ந்து வளர முடியாமல், அவ்வப்போது வந்த கன்னத்தில்முத்தமிட்டால், ஆய்தஎழுத்து, மற்றும் சில குறிப்பிட்ட பாடல்களை மட்டும் கேட்டு -   கூடவே வளர்ந்து நடுவீதியில் லுங்கி அவிழ விளையாண்ட பழக்கம் இருந்தாலும் இப்ப ஐஏஸ் ஆகிவிட்ட சகா ஊருக்கு வரும்போது மூனாவது சுத்துக்கு முன்னாடி வரைக்கும் ஒரு சின்ன இடைவெளி விட்டே பேசிக்க முடியற மாதிரி -  ஆகிப்போச்சு ரஹ்மானுடனான சங்காத்தம்.. நடுவால மாஃபியா டிக்கெட் வேற எடுத்தாச்சு :)

இப்ப எதுக்கு இப்படி நீளமா கொசுவர்த்திசுத்தல்ன்னு கேட்டா.. தெரியாதா என்ன..

Happy Birthday ARR.. you were the biggest darling in those salad days ;)

#Nostalgia