Monday, January 6, 2014

தொட்டவனை மறந்ததென்ன.. (அவசர குறிப்புகள்)

பத்தாவது வரைக்கும் டீச்சர் பையன் என்ற ஒரு சமூக மிரட்டலில்! படிக்கும் பையன் வேஷத்தை கலைக்கமுடியாமல் கூட்டுப்புழுவாய் இருந்த காரணத்தால் பெரிதாக பாட்டுகீட்டு கேட்கும் வழக்கமெல்லாம் இல்லை.. வீட்டில் இருந்த நேஷனல் டேப்ரிக்கார்ட் எல்லாம் என்றாவது சில வாரயிறுதிகளை தவிர தொட்டு பார்த்தது கூட இல்லை.. அதில் அதிகம் கேட்டது ‘காத்தோடு பூவுரச’வும் ‘மெளனகீதங்கள்’ திரைவசனமும் தான். பாட்டெல்லாம் காலை நேர கோவை/திருச்சி ரேடியோக்களில் மெயின்கார்ட்கேட் சாரதா சில்க்ஸ் விளம்பரத்துக்கும், கேரம்போர்ட்டு விளையாடு பாப்பா’வுக்கும் நடுவில் கேட்டது தான், அதுவும் அதில் காலையில் முதல் பாடலுக்கு முன் வரும் பொது அறிவு வினாவை நோட் புஸ்தவத்தில் எழுதிவைத்து படித்தால் பையன் அறிவாளியாகிவிடுவான் என்று நம்பின எங்கய்யனின் நம்பிக்கையினால் கேட்ட பாடல்கள் தான். எம்ஜிஆர் காலத்தில் எம்.எஸ்.வி இருந்தார், கமல் காலத்தில் இளையராஜா இருந்தார் என்ற அளவில் நம் பொதுஅறிவு இருந்த காலம் அது.

‘அவளுக்கு கொஞ்சம் ஹெட்வெயிட்டுடா’பேச்சுக்களை கேட்கவும் எப்படியாவது காலனி க்ரிக்கெட் டீமில் விக்கெட்கீப்பராகவும் பர்ஸ்ட்டவுனாகவும் இடம்பிடித்துவிடவேண்டி அக்கம்பக்கத்து வீட்டு அண்ணன்களுடன் வரித்துக்கொண்ட சகவாசத்தில் அஞ்சலி, சத்ரியன், மைமகாரா, தளபதி, குணா, மீரா, ஆத்மா என்று கலவையாக கார்ஸ்டீரியோக்களில் இருந்து மண்பானைக்குள் வைத்த ஸ்பீக்கர்/ட்வீட்டர்கள் வழியே வரும் இசைக்கெல்லாம் கிதாரை அணைத்தபடி ஒரு பெரிய கருப்புவெள்ளை ப்ளோஅப்பில் அம்சமா இருக்கும் ‘மொட்டை’ என்பவர் தான் காரணம் என்று தெரியவந்தது. கமலுக்கு வேறு க்ளோஸ்ஃப்ரெண்ட் என்றார்கள், ரொம்பவும் பிடித்துபோய்விட்டது.

பத்தாவது முடித்ததும் ‘படிக்கும்பையன் எங்கிருந்தாலும் படிப்பான்’ சித்தாந்தத்தில் நம்பிக்கைவைத்து எங்கய்யன் ’கட் அண்ட் ரைட் டை கட்டி ரைட்’பள்ளியில் இருந்து ’கட்டடிப்பதே ரைட்’ என்றும் 9:15 அட்டெண்டன்ஸ் எடுப்பது மட்டுமே வாத்தியார் வேலை என்ற சிஸ்டத்தின் படி இயங்கிக்கொண்டிருந்த இடத்துக்கு இடம்பெயர்த்துவிட.. அவிழ்த்து விட்ட வீட்டு நாய் பைத்தியம் பிடித்து தெருவில் அலைவது போல் அலைந்து முக்திபெற்ற பிறகு ’அந்த பாட்டுல ஒரு வயலின் பிட் வரும் பாரு’ ரக உரையாடல்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன்..
அப்பொழுது தான் ‘கலைஞன்’ வந்தது.. அதுவரை கேட்டமாதிரி இல்லாமல் இந்த மொத்த ஆல்பமும் கொஞ்சம் புதுமாதிரியா தெரிய.. ரஹ்மான் என்று ஒருவர் புதிதாக வந்துவிட்ட சமாச்சரம் எனக்கு தெரிவிக்கப்பட்டது. சகஹிருதயர்களுடன் ’என்னவென்று சொல்வதம்மா’ கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்து ’பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ’ கேட்க ஆரம்பித்தேன்.
அந்த இடம் துடிக்க’/ ‘சாயங்காலம் வம்போ வம்போ’ போன்ற வரிகள் இருந்ததால் எங்கள் மேத்ஸ்டீச்சரால் தடைசெய்யப்பட்டு ரஹ்மான் என்று ஒருவர் வந்ததாகவே எங்கள் பள்ளிநண்பர்கள் குழுவில் (முதல் இரண்டு பெஞ்சு மட்டுமே அனுமதி) நவநாகரிக தலைவன்‘ரோகனா’ல் கவனிக்கப்படாமல் இருந்திருந்தது என்ற உண்மை புரிந்த காலகட்டம் அது. அப்புறம் பாலும்யூசிக் லேபிளுடன்ஒரு TDK metallic 60ல் புதியமுகமும் உழவனும் எறங்கி வந்து ஆக்ரமித்தார்கள். ஒரு கோவைப்பயணத்தில் ட்ரைவர் மணி மூலமாக முதல்முறையாக காரில் ‘சிக்குபுக்கு’ போடப்பட்டு, உடன் வந்த அய்யனுக்கும், அவரின் நண்பர்களுக்கும் பிடிக்காமல் போக, ரஹ்மானை எனக்கு உடனடியாக பிடித்துப்போனது.. கோவை சென்றதும் பேகிபேண்ட்டும் ஒரிஜினல் ஜெண்டில்மேன் கேசட்டும் வாங்கியதும் வரலாற்றில் பதிவுசெய்யவேண்டிய நிகழ்ச்சி தான்.

 புதிதாக வந்த கேபிள்டிவியில் ATN channelல் மழையோடு வரும் ’மஸ்த்துமஸ்த்து’களும் ‘குச் தூர் சல்த்தே’களும் ஆங்காங்கே கேட்டுக்கொண்டு இருந்தாலும், அடுத்தகட்டமாக நெருங்கியவட்டத்தில் காதல் வந்து, முதன்முறையாக வாழ்வில் பொதுநூலகம் வரை சென்று அரைநாள் செலவழித்து காதல்கடிதம் எல்லாம் எழுதிகொடுத்துக்கொண்டிருந்த காலத்தில் இன்னொரு TDKல் பம்பாய்/இந்திரா என்று வர ஆரம்பித்திருந்தது.. இன்றும் அந்த கேசட்டில் ‘வந்து என்னோடு கலந்துவிடு’ என்ற இடம் மட்டும் கொஞ்சம் சத்தம் கம்மியாகத்தான் ஒலிக்கும், எங்கள்  வீட்டு மொட்டைமாடியும் மாடிப்படியிலுமாக அமர்ந்து அதை அப்படி தேய்த்து உருகிக்கொண்டிருந்தான் என் நண்பன்.. அப்புறம் கொஞ்ச நாள் கழித்து ‘பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா’ என்பதை நான் ரீவைண்ட் - பார்வர்ட் - ப்ளே செய்து கொண்டிருந்தேன்.

கோவைப்பழக்கவழக்கமும் கல்லூரி அறிமுகங்களும் கிடைத்து கஜோலா மாதுரிதீட்சித்தா என்ற பஞ்சாயத்துகளுக்கு நடுவராக இருக்கும் பொருட்டு ‘ப்யார் ஹோத்த்தா ஹெ தீவானா சன’மும் ‘பெஹ்லி பெஹ்லி பார் ஹெ’வும் ஹாஸ்டல் இரவுகளை நிறைத்துக்கொண்டிருந்த வேலையில் அன்றைய இந்திமொக்கை வடஇந்திய பிரசாந்த் அமீர்கான் படத்துடன் ஊர்மிளாவும் ஜாக்கியும் நிற்க்கும் சூப்பர் ஸ்டில்லுடன் ஒரு டைம்ஸ்காஸெட் ஈரோட்டில் வாங்கப்பட்டது. ‘யாரோ சுனோ சரா’வை வால்யூம் ஏத்திவச்சு ‘ஒரே பாட்ட திருப்பி திருப்பி 14 தடவை போட்டு ஹிட்டாக்ககூடாதுடா, அதுவும் எங்க பாலு வாய்ஸ்ல.. இதக்கேளு, எங்காளு பாட்டு’ன்னு காலர தூக்கிவிட்டு  சிக்கிய ஒன்றிரண்டு அமித்துகளை கலாய்த்துக்கொண்டிருந்த பொழுது முழுமையான தலைவனாகிவிட்டிருந்தார் ரஹ்மான்.
லவ்பேர்ட்ஸ், காதல்தேசம், Mr.ரோமியோ, மின்சாரக்கனவு, இருவர், தவுட்.. என்று அப்புறம் சிங்கப்பாதை தான், நடுவில் கொஞ்சம் ஜீன்ஸ், படையப்பா, எல்லாம் இருந்தாலும், காதலர்தினமும், (த்)தால்’ம் கல்லூரி கடைசிகாலத்தில் அன்பாலயா, சூப்பர்குட், சிவசக்தி, மைக்முரளி, விக்கிரமன், அகத்தியன் என்றவர்கள் ஏற்படுத்திய பெரும் அலைகளுக்கு நடுவிலும், காதலுக்கு மரியாதை போன்ற சூராவளியில் எல்லாம் லேசாக்கூடசிக்காமல் ‘வலிக்கலையே வலிக்கலையே’ என்று மகிழவைத்தது.

அப்புறம் வேலைக்கெல்லாம் போக ஆரம்பித்த பிறகு, சென்னை வந்து அலைபாயுதே பார்த்ததோட கொஞ்சம் கொஞ்சமாக... அவரும் முழுமுயற்ச்சியாக இந்தி, அமேரிக்கா, லண்டன்  என்று போய்விட்டார்..  அவருடன் சேர்ந்து வளர முடியாமல், அவ்வப்போது வந்த கன்னத்தில்முத்தமிட்டால், ஆய்தஎழுத்து, மற்றும் சில குறிப்பிட்ட பாடல்களை மட்டும் கேட்டு -   கூடவே வளர்ந்து நடுவீதியில் லுங்கி அவிழ விளையாண்ட பழக்கம் இருந்தாலும் இப்ப ஐஏஸ் ஆகிவிட்ட சகா ஊருக்கு வரும்போது மூனாவது சுத்துக்கு முன்னாடி வரைக்கும் ஒரு சின்ன இடைவெளி விட்டே பேசிக்க முடியற மாதிரி -  ஆகிப்போச்சு ரஹ்மானுடனான சங்காத்தம்.. நடுவால மாஃபியா டிக்கெட் வேற எடுத்தாச்சு :)

இப்ப எதுக்கு இப்படி நீளமா கொசுவர்த்திசுத்தல்ன்னு கேட்டா.. தெரியாதா என்ன..

Happy Birthday ARR.. you were the biggest darling in those salad days ;)

#Nostalgia 

2 comments:

ILA (a) இளா said...

ஹ்ய்ம்ம்.. கொசுவர்த்தி.. நடத்து ராசா

Chenthil said...

"அப்புறம் கொஞ்ச நாள் கழித்து ‘பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா’ என்பதை நான் ரீவைண்ட் - பார்வர்ட் - ப்ளே செய்து கொண்டிருந்தேன்." - போற போக்குல முதல் காதல் பத்தி சொல்லாம சொல்லிட்டீங்க.

”நடுவீதியில் லுங்கி அவிழ விளையாண்ட பழக்கம் இருந்தாலும் இப்ப ஐஏஸ் ஆகிவிட்ட சகா” - ஸ்ரீரங்கத்துக் கதையா?

ட்விட்டருக்கு லீவு விட்டுட்டு அப்பப்போ இந்த மாதிரி கொஞ்சம் எழுதலாமே?