Friday, January 17, 2014

படிமம்

‘(சம்வித்யாகம் போறா) இயக்கம் பத்தாது, இன்னும் கொஞ்சம் நன்றாக வந்திருக்கவேண்டும், நாயகனுக்கு கொஞ்சம் கூடுதல் க்ளோசப் வைத்திருந்தால் தான் பார்ப்பவர்களுக்கு அந்த காட்சியின் பரபரப்பு சென்று சேரும்’ என்று தொடங்கும் உரையாடல் தான் கதை நாயகன் ஜார்ஜ்குட்டிக்கு படத்தில் முதல் வசனம்.

‘த்ரிஷ்யம்’ - திரைப்படத்தின் நாயகன் அதன் இயக்குனர் ஜீத்துஜோசப் தான். இயக்கம் மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை எழுதியவரும் அவரே. அந்த முதல் வசனத்தில் சொலவது போல் எந்த ’கைநாற்காலி’ விமர்சகரும் சொல்வதற்க்கு வழியில்லாமல் அற்புதமாக செய்திருக்கிறார்.

மலையாளம் கண்ட மாபெரும் வெற்றிப்படமான ‘யவனிகா’வுடன் இந்தப்படத்தையும் அதே தளத்தில் வைத்து விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. யவனிகா’வும் ‘த்ரில்லர் வகைதான், ஆனால் அது வேறு தளம் இது வேறு தளம். யவனிகா’வின் பரப்பு இன்னும் கொஞ்சம் விஸ்தீரமானது. ‘த்ரிஷ்யம்’ வேறு வகை. தெளிவாக பார்வையாளர்களை கவரவேண்டும் என்ற மசாலாபடங்களின் ஒரே குறியை வைத்து திட்டமிட்டு பின்னப்பட்ட கதை தான்.

ஒரு கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தி, அவன் குடும்பத்தை பற்றிசொல்லி, அவன் பூர்வீகத்தை அலசி, அவனைப்பற்றி மானே தேனே போட்டு நல்லவிதமாக பார்ப்பவர்கள் மனதில் ‘ச்சே எம்புட்டு நல்லவன்’ என்று முழுவதுமாக ஒத்துக்கொள்ளுமாறு காட்சியமைப்புகளை நகர்த்தி, பார்வையாளர்கள் அந்த குடும்பத்தை முழுவதுமாக நேசிக்கும் பொழுது திடும் என்று ஒரு சிக்கல் வந்து நிற்கிறது - டொட்டடய்ங் என்ற இசையில்லாமல். அதுவும் இரண்டு சின்ன பெண்கள் இருக்கும் அழகிய குடும்பத்தில், (கொஞ்சம் நிறையவே பூசினாற்போல் இருந்தாலும் பெண்களின் தாயாக வரும் மீனா இன்னும் அழகு தான்) வயசுவந்த பெரிய பெண் தான் சிக்கலின் மையப்புள்ளி. வயசுபுள்ளைக்கு சிக்கல் எனும்போதே அரங்கில் அமர்ந்திருக்கும் 90சதம் பேருக்கும் அடிவயிறு கலங்கித்தான் போகிறது. குறி தவறவே இல்லை.

வந்த சிக்கலுக்கும் கொஞ்சம் பலம் வேண்டுமே, எம்ஜிஆருக்கு ஏற்ற நம்பியார் போல், வில்லனுக்கு கெத்து இருந்தாத்தான ஹீரோவுக்கு மரியாதை, இங்கே நாயக்ன் சாமான்யன். நம்மூரில் பெரும்பான்மையோர் மிரள்வது அதிகாரவர்கத்தின் கோரமுகத்துக்கு தான், அதைவிடவா சிக்கலுக்கு வெயிட் வேண்டும், பெரும் அதிகாரத்தில் இருப்பவரின் வாரிசு தான் உள்ளே நுழைந்த சிக்கல். சிக்கலை துரத்திவிட்டு சட்டத்தில் இருந்து தப்பிக்க போராடுவது தான் மிச்சம். சாமன்ய நாயகன் மற்றவரைப்போல் ஆகாயசூரனாக இருக்கமுடியாது ஆனால் புத்திசாலி, புத்தியை உபயோகித்து தப்பிக்க திட்டமிடுகிறான், அதிகாரவர்கத்தையே ஏமாற்ற வேண்டுமே, கொஞ்சம் பலமான திட்டமிடல் தான். படிப்பதற்க்கு ஒன்றுமே விசேஷமாக தெரியவில்லை அல்லவா, ஆமாம் அதே தான். ஆனால் இதை 2.45 மணிநேரம் பார்ப்பவர்களை திரையை விட்டு அகலாமல் கட்டிப்போட்டு பார்க்க வைத்ததில் தான் வெற்றி இருக்கிறது.

இரண்டரை மணிநேர திரைப்படத்தில் சவுத் இண்டியன் புல்மீல்ஸ் போல வகைக்கொன்றாய் பாடல்கள், நடனங்கள், தனிக்குலுக்கல்கள், கூட்டுகுலுக்கல்கள், நமது ட்வீட்டரில் சுட்டு பாலீஷ் போடப்பட்ட நகைச்சுவைத்தோரணங்கள், அதிரடி சண்டைகள், பறக்கும் கார்கள், அயல்தேச அழகிய லொக்கேஷன்கள், தங்கத்தில் சுவரெழுப்பும் நவீன ஆசாரிகளின் வேலைப்பாடுகள் என்றெல்லாம் நிறைத்தும் படம் பார்ப்பவன் என்னவோ பொது கக்கூசில் சங்கடத்துடன் உக்கார்ந்திருப்பவன் மனநிலையில், ‘எப்படா முடிப்பீங்க’ என்று கதறும்படியான சமகால திராபைப்படங்களுக்கு நடுவில் ‘த்ரிஷ்யம்’ கொண்டாடப்படவேண்டியது தான்.

நமது புரட்சிகலைஞரின் பாணியை பின்பற்றி நாயகனே கடைசியில் ஒரு நீண்ட வசனத்தில் ‘ஒரு பெரும் சிக்கல் எங்கள் குடும்பத்திற்க்கு வந்தது, அந்த சிக்கல் எங்கள் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக கலைத்துபோடப்பார்த்தது, நாங்கள் கெஞ்சி கதறினோம் போராடினோம் அதற்கிடையில் எதிர்பாராமல் அந்த சிக்கல் என்றென்னைக்குமாய் எங்கள் குடும்பத்தை மீண்டும் தொந்தரவு செய்யாதபடி செய்ய நேர்ந்துவிட்டது, எங்களுக்கு வேறு வழி இல்லை, இனி அந்த சிக்கல் எங்களை நெருங்காது என்ற நிம்மதி இருந்தபோதும், தெரிந்தோ தெரியாமலோ சிலரின் கனவுகளை சிதைத்துவிட்டோம், மன்னித்துவிடுங்கள்’ என்று ‘கதையின் சாரம்சம்சத்தை சொல்லி விமர்சகர்களின் வேலையை சுலபமாக்கிவிடுகிறார். அந்த இடத்தில் படம் முடிந்துவிட்டது தான், இன்னும் சொல்லப்போனால் அதற்க்கு முந்தய சீனிலே கூட படம் முடிந்துவிட்டது தான்.. ஆனால் அதற்க்கு அப்புறமும் ஒரு சீன் வைக்கிறார் பாருங்கள்.. அங்கே தான் சாமான்யன் சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு போகிறார்.. அரங்கமே கைதட்டி ஆர்ப்பரிக்கிறது.. அங்கே நிற்கிறார் இயக்குனர்..  ஜீதுஜோசப் - இனி நமது ‘should not miss list'ல் இவர் கண்டிப்பாக இருப்பார்.

கேரளா லொக்கேஷன் நல்லாஇருந்தது, மோகன்லால் நல்லா நடித்தார், துணை கதாப்பாத்திரங்கள் கூட அருமையான நடிப்பு என்ற விஷயங்களை எல்லாம் இந்த படத்தின் விமர்சனங்களில் சொல்லியிருப்பார்கள், படித்துக்கொள்ளவும்.

படம் முடிந்து வெளிவரும்பொழுது உடன் வந்த நண்பர் ”இதை தமிழில் எடுப்பதாக சொன்னார்களே, அதுவும் சமீபமாக ராடான்’ நிறுவனம் தான் மலையாளத்தை தமிழ் ‘படுத்தி’ வருகிறது.. ஒருவேளை சரத் அல்லது சேரனை வைத்து இந்தப்படம் தமிழில் வந்துவிடுமோ” என்ற சந்தேகத்தை  கேட்டு என் ஒட்டுமொத்த திரையனுபவத்தையும் கெடுத்துவிட்டார் என்பதையும் இங்கே பதிவு செய்துகொள்கிறேன். 

3 comments:

Vasutha said...

Like your different method of reviewing.Will see the movie whenever possible.

யாத்ரீகன் said...

நல்லவேளை நீங்க விமர்சனம்ன்ற பேர்ல கதை சொல்லல.. அம்மணியோட வற்புறுத்தலோடுதான் போனேன், இடையில் பிரச்சனையில் மாட்டியவுடன், கோர்ட், கேசு, law point சொல்லி வாதாடி ஜெயிக்கும் படம் போலவோ, சிந்தாமணி கொல கேசு போலவோ இருக்கும்னு நெனச்சு பார்த்துட்டு இருக்கையில கதை போனை போக்கு அட்டகாசம்..

naanjil said...

நல்லதொரு தரமான விமர்சனம் எழுதியமைக்கு நன்றி. எனது FB-ல் தொடர்பு கொடுத்துள்ளேன்.