Friday, August 11, 2006

என்னைய பார்த்து.....

பட்டுகோட்டை

பப்பி

முதல் ராத்திரி

எது நடந்ததோ

பொண்ணும் பொண்ணும் செக்ஸ்

லூசா நீ

திரிஷா குளியல்


ஒன்னுக்கொன்னு சம்பந்த்தப்பட்டும் படாமயும் இருக்கிற இந்த வார்த்தைகள் என்னன்னு உங்களுக்கு தெரியுதுங்களா?

துண்டு துண்டான வாக்கியங்களை வச்சு எதாவது நவீன இலக்கியம் எதும்எழுத முயற்ச்சி பண்ண ஆரம்பிசுட்டானா ராசா'ன்னு நினைக்கரீங்களா.. அப்படி எல்லாம் இல்லீங்க. ஒரு தடவை எதோ அத மாதிரி எல்லாம் செஞ்சோம், மறுபடியும் அப்படி எல்லாம் எழுதற அளவுக்கு திராணி இல்லீங்க.. ( அடி தாங்க முடியலை, ரவுண்டு கட்டிட்டாங்க மக்கள்)

என்னடா இவன் நல்லாத்தான இருந்தான், திடீர்ன்னு இப்படி விவகாரமா ஆரம்பிக்கரானே, எதாவது போலி மகிமையான்னு பார்க்கரீங்களா? அதெல்லாம் ஒன்னுமில்லைங்க.. மேல சொன்ன வார்த்தைகள 'தேடு சொற்களா' உபயோகப்படுத்தி தேடுனவங்கள, கூகிளாண்டவர் நம்ம பதிவுக்கு கூட்டிட்டு வந்து விட்டிருக்காரு.. பாவம் மக்கள்.. அவுங்களுக்கு என்ன விசனமோ, என்ன அவசரமோ, இப்படி தேடியிருக்காங்க. தேடினவங்க இங்கன வந்து என்னைய என்னவெல்லாம் திட்டுனாங்களோ.. நல்லவேளை நமக்கு கூடப்பொறந்தவங்க யாரும் இல்லை :)

ஆனாலும் கூகிளாண்டவருக்கு ரொம்ப குசும்புங்க.. எதுக்கெல்லாம் நம்மள அடையாளம் காட்டுறாரு பாருங்க.. இந்த கொடுமை எல்லாம் நான் எங்க போயி சொல்றது..
மிஸ்டர் கூகிளாண்டவர், எங்களுக்கும் வெக்கம் வேலாயுதம், சூடு சூலாயுதம், மானம் மாரியாத்தா எல்லாம் இருக்குது, தெரிஞ்சுக்கோங்க..

டெக்னாலஜி என்னதான் வளர்ந்தாலும், நம்ம மக்கள் தேடுற மேட்டர் மட்டும் வளரவும் இல்லை மாறவும் இல்லை..

நான் எதும் சும்மா சொல்றேன்னு நினைக்காதீங்க.. எல்லாம் சைட்டுமீட்டரு உதவியோட தான் சொல்றேன்.. வேணும்னா நீங்களும் சொடுக்கி பாருங்க..
(ராசபார்வை வருதான்னு மட்டும் தான் பாக்கனும்.. வேற எதும் பார்த்தீங்க. அப்புறம், அந்த பாவத்துகெல்லாம் நான் பொறுப்பில்ல ஆமா)

(பொண்ணும் பொண்ணும் செக்ஸ்)

(பப்பி)

(திரிஷா குளியல்)

(முதல் ராத்திரி)

(லூசா நீ)

(பட்டுகோட்டை)

(எது நடந்ததோ)






















Pictures from:
http://www.haloimages.com
http://: www.allposters.com
http://www.philkaplan.com
--
#198

Tuesday, August 8, 2006

என்ன உறவு ?

அன்னைக்கும் எப்பவும் போல டீக்கடை 'போசு' ஜன்னலை தட்டி 'டீ வச்சிருக்கண்ணே'ன்னு கத்திட்டு போற குரல் கேட்டுத்தாங்க முழிச்சுகிட்டேன். பொழப்புக்காக சென்னைபட்டனம் போயி டீ.நகர் மேன்ஷன்ல சகாக்களோட கூட்டா தங்கி, பொட்டி தட்டுற வேலைய வாங்கின நாள்ல இருந்து ஆறு மாசமா போசு குரல் கேட்டுத்தான் கண்ணை தொறக்கிறதுங்கிறது வழக்கமா இருந்துச்சுங்க. முத்துநகர் மாம்பலத்துக்கு வர லேட்டு ஆனாலும் ஆகும், போசு ஜன்னலை தட்டி டீ வச்சுட்டு போற நேரம் மட்டும் லேட்டு ஆகவே ஆகாதுங்க. ராத்திரி எத்தனை சுத்து போனாலும், நீ மட்டும் எப்படிடா காலங்காத்தால சரியா ஆபீஸ் வர்றேன்னு நம்ம சக பொட்டிதட்டியாளர்கள் கேக்கும் போதெல்லாம் எனக்கு போசு தான் ஞாபகத்துக்கு வருவான். சின்ன பையன், ஒரு பதிமூனு பதினாலு வயசிருக்கும்.. 'விருதாச்சலம் பக்கம்ண்ணே, அப்பா, அக்கா, ஒரு சின்னபய, எல்லாம் அங்க தான் இருக்குதுக, அப்பப்போ அப்பா வந்து துட்டு வாங்கிக்கினு போவாரு', எப்பவோ ஒரு சனிக்கிழமை ராத்திரி பதினோரு மணிவாக்குல தலைசுத்தல குறைக்க கட்டஞ்சாயா அடிக்கும் போது, அவன் சொன்னதா லேசா ஒரு ஞாபகம்.

எஸ்.கே'ல பொங்கலும் வடையும் சாப்பிட்டு, நுங்கம்பாக்கத்துல இருக்கிற ஆபீஸுக்கு கிளம்பினேன், அப்ப ஒரு வருஷம் நம்ம தினப்படி பயணமெல்லாம் ரயில்வண்டியில தான். சீசன் டிக்கெட் வச்சுகிட்டு மாம்பலத்துக்கு நுங்கம்பாக்கத்துக்கும் தோணுனப்ப எல்லாம் பயணப்படுவோம். 8.50 லேடீஸ் ஸ்பெஷல் வண்டிக்கு முன்னால 8.43க்கு வர்ற வண்டியிலயே போயிடறது தாங்க நம்ம வழக்கம், அன்னைக்கு எப்படியே 'டைமிங்' மிஸ் ஆகிப்போச்சுங்க, நான் ஸ்டேஷனுக்குள்ளார போகும்போது 8.43 வண்டி மூவ் ஆகிடுச்சு, நானும் ஒரே ஓட்டமா மெளனராகம் க்ளைமாக்ஸ்ல மோகன் ஓடுவாரே அந்த மாதிரி ரெண்டு ரெண்டு படியா தாண்டி ஓடினேன், ஆனாலும் நான் ப்ளாட்பாரத்துக்கு போறதுக்கு முன்னாடி வண்டி ப்ளாட்பாரத்தை தாண்டியிருச்சு, அப்புறம் என்னத்த செய்யிறது 'போகுதே போகுதே'ன்னு கடலோர கவிதைகள் சின்னப்பதாஸ் மாதிரி ஆடு ஒன்ன புடிச்சு கையில வச்சுகிட்டு இளையராஜா, எஸ்.பி.பி உதவியோட சோககீதமா இசைக்க முடியும், அடுத்து வரப்போற லேடீஸ் ஸ்பெஷல்லுக்க்காக காத்திருக்கிற மக்களை எல்லாம் வேடிக்கை பார்த்துகிட்டே ஓரமா நின்னுட்டேன்.

8.50 வண்டி லேடீஸ் ஸ்பெஷல்ங்கிறதால அதுக்கு அப்புறம் 8.57 வண்டி எப்பவும் பயங்கிற கூட்டமா இருக்கும், அதுனால தான் நான் எப்பவும் அதுக்கு முன்னாடி போயிட பார்க்கிறது.. அப்படியே வேடிக்கை பார்த்துகிட்டு நின்னதுல நேரம் ஆனதே தெரியலைங்க லேடீஸ் ஸ்பெஷல் வந்து போயும் இன்னும் சேலை சுடிதார் கூட்டம் இருக்கத்தான் செய்யுது. 8.57 வண்டி வழக்கம் போல, கட்டுக்கு அடங்காம திமிறிகிட்டு இருக்கிற வக்கப்போரு லாரி மாதிரி நிறைஞ்சு வந்துச்சு, எப்படியோ ஒரு காலை.. காலா, ஒரு ரெண்டு விரலை வைக்க கதவுகிட்ட இடம் கிடைச்சுது, கிடைச்ச கேப்புல எங்கயோ மேல இருந்த ஒரு கம்பிய புடிச்சுகிட்டு தொத்திகிட்டேன், இதெல்லாம் சென்னபட்டணத்துல காலை பயணத்துல சகஜம் தானே..வயசுப்பையன் இதுக்கெல்லாம் அசரலாமா. ஒரு கையால மேல இருந்த கம்பிய எப்படியோ புடிச்சாச்சு, உசரமா இருக்கிறது நிறையா நேரம் வசதி தாங்க. இன்னொரு கையில புடிச்சுக்க எதாவது சிக்குமான்னு பார்த்தா, பக்கத்துல தொங்கிறவனோட காட்டன் சர்ட் தான் கிடைக்குது.. ரெண்டு விரலால காலை பாலன்ஸ் பண்ணிக்கிட்டே ஒரு கையால மேல்கம்பிய புடிச்சுகிட்டு காத்தார கோடம்பாக்கம் போயி சேர்ந்தாச்சு. இப்படி விவகாரமா தொங்கிட்டு போறதும் ஒரு த்ரில் தாங்க. கோடம்பாக்கத்துல ஒரு கூட்டம் இறங்குது, அதை விட ரெண்டு மடங்கு கூட்டம் ஏறுது.. ம்ம் எல்லாம் ஒரு ரெண்டுநிமிஷ லேட்டுனால.. மறுபடியும் அதே ரெண்டுவிரல் ஒத்தக்கை தொங்கல். இப்ப முன்னவிட இன்னும் வண்டிய விட்டு வெளிய தள்ளி தொங்கற மாதிரி இருக்குது. கம்பமெல்லாம் கிட்டக்க இருக்கிற மாதிரி இருந்துச்சு.

வழக்கமா கோடம்பாக்கம் தாண்டி ஒரே அழுத்துல அடுத்த ஸ்டாப்புக்கு போற வண்டி அன்னைக்குன்னு கிழட்டு மாட்டை பூட்டுன கட்ட வண்டி கணக்கா ஊறிட்டே போகுதுங்க, மொத்த உடம்பும் கிட்டத்தட்ட வண்டிக்கு வெளிய காத்துல தொங்குது, கால் பக்கம் ஒரு ரெண்டு விரல் தான் சப்போர்ட்டா, எத்தனை நேரம் தான் ஒரு கை தாங்கும்.. அப்படி ஒரு வலி. கைய மாத்தி புடிக்கலாம்னாலும் வழியே இல்லை. சென்னப்பட்டணத்தோட ஏப்ரல் மாச இளங்காலை(!) வெய்யிலோ இல்ல அந்த கூட்டமோ இல்ல படபடன்னு அடிச்சுக்கற மனசோ எது காரணம்னு தெரியலைங்க உள்ளங்கை எல்லாம் வேர்க்க ஆரம்பிச்சிருச்சு. மேல்கம்பியில புடிச்ச கையோட இறுக்கம் அப்படியே மெல்ல குறையுது, கொஞ்சம் எத்தி புடிக்கவும் வழி இல்லை.. இருக்கிறது ஒரே ஒரு புடிதான், இன்னொரு கை காத்துல.. இதுல எப்படி எத்தி கெட்டியா புடிக்கிறது.. அந்த இன்னொரு கையால எதையாவது புடிக்கலாம்னா நான் நின்ன வாக்குல இருந்து திரும்பவும் முடியலை. எப்படியும் இன்னும் ஒரு நிமிசத்துல வேர்வையில நனைஞ்ச கை எப்படியும் புடிய நழுவ விட போகுது.. காலை கொஞ்சம் ஆழமா உள்ள நகர்த்தனும்னாலும் கைப்புடி கொஞ்சம் பலமா இருக்கனும்.. முகமெல்லாம் வேர்த்து தொண்டை எல்லாம் வரண்டு.. பேச்சே வரலை.. கருவேப்பிலை கொத்து மாதிரி வூட்டுக்கு ஒரே புள்ளை, போகாத போகாதேன்னு எங்கய்யன் சொன்னதெல்லாம் ஞாபகம் வருது. விழுந்து செத்துப்போனா போஸ்ட்மார்டம் பண்ணுவாங்களோ? 24 மணி நேரத்துக்கு ரத்தத்துல இருக்கும்னு சொல்லுவாங்களே, நேத்து ராத்திரி பத்து மணிக்குமேல ஆரம்பிச்சது.. இன்னும் 12 மணி நேரம் கூட ஆகலையே, கண்டு புடிச்சிடுவாங்களோ? அய்யனுக்கு தெரிஞ்சா..? உயிர் போகலைன்னாலும் தண்டவாளத்துல விழுந்தா கைகால் போயி.. அடிவயத்துல கலக்கமா இருக்குது, அய்யோ 'எம்பையன் சிறுசுல ஒரு நாள் கூட பாயை நனைச்சதில்ல'ன்னு பெருமையா சொல்லுவீங்களேம்மா.. சாமி கும்பிட்டு பார்ப்பமா, பத்து வருஷமா அந்த பக்கமே போகலை, இப்ப கும்பிட்டா நடக்குமா?..'தன்மான வீரனை வருக வருக என வரவேற்க்கும் தென்னக ரயிலே மஜும்தார் யூனியன்', 'டாக்டர் அய்யா அழைக்கிறார்..!' வரிசையா சுவத்துல எழுதியிருக்கானுக, பார்வை கொஞ்சம் கலங்கலா இருக்குது, அழுகப்போறனோ? கடைசியா எப்ப அழுதேன்? சம்பந்தமில்லாம எது எதுவோ ஞாபகம் வருது. அழுகற மாதிரி இருந்தா அதுக்கு முன்னாடி நம்மளே விழுந்திடனும்.. தடுமாறி பக்கத்துல தொங்கறவனை இழுக்காம, நம்மளே கைய விட்டிரலாமா,.. இன்னும் ரெண்டு மூணு நிமிஷம் தான, தாக்குபுடிக்க முடியுமா.. கை புடியோட இறுக்கம் விலகிட்டே இருக்குது... புடிய விட்டிரலாமா... தொண்டை எல்லாம் அடைக்குது...கால் நழுவற மாதிரி இருக்குது, உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிக்குது. நடுங்கறனா? நானா?.. ' மொத்தம் ஏழு பேரு, ட்ராப்டர், ஸ்க்ரூ ட்ரைவர், ஹோஸ் பைப் எல்லாம் வச்சிருக்கானுக, நம்ம மாப்ள ஒத்த ஆளு, உக்காந்திருக்கிற வாட்டர் டாங்க் திட்டை விட்டு எந்திரிக்கக்கூட இல்ல, அப்படியே கால் மேல கால் போட்டு தம்மா உக்காந்திருக்கான்' ராத்திரி ஜமா சேர்ந்த உற்சாகத்துல நம்ம சகா காலேஜ் கதைய கதைய பேசுனப்ப கிளுகிளுப்பாத்தான் இருந்துச்சு.

இதுக்கு மேல முடியாது கைய விட்ருவோம், ஆனது ஆகட்டும்.. கண்ணை முடிக்கிட்டேன்... சட்டுன்னு யாரோ இடுப்பை அணைச்சு உள்ள இழுக்கறாங்க.. யாருன்னு கூட பார்க்கலை அப்படியே கண்ணை மூடினபடி மேல் கம்பிய புடிச்சிருந்த கைய இறுக்கிட்டேன்.. நுங்கம்பாக்கம் வந்திருச்சு. கூட்டம் அதுவா நம்மள இறக்கி விட்டிருச்சுங்க.. அப்படியே பக்கத்துல இருந்த பெஞ்சுல உக்காந்துட்டேன், அதே பெஞ்சுல உக்காந்திருக்கிற, நான் வழக்கமா பார்க்கவே புடிக்காத, அந்த அழுக்கு பிச்சக்காரனக்கூட கவனிக்கலைங்க. இன்னும் நடுக்கம் போகலை எனக்கு. வண்டி கிளம்பிருச்சு, சட்டுன்னு, யாரு நம்மள புடிச்சது.. தலைய தூக்கி நான் தொங்கிட்டு வந்த கதவு பக்கம் பார்க்கிறேன்.. இன்னும் நிறைய பேரு தொங்கறாங்க..வண்டி வேகம் எடுத்திருச்சு, சட்டுன்னு எந்திருச்சு இலக்கில்லாம தேடுறேன்.. ஒரு நீலக்கலர் முழுக்கை சட்டை போட்ட கை, டாட்டா காமிச்சு, விரல் உயர்த்தி காமிக்குது, பின்னால திரும்பி பார்க்கிறேன், யாரும் இல்லை, எனக்குத்தான் போல இருக்குது.. ச்சே, என்ன ஆளுடா நம்ம, ஒரு தாங்க்யூ கூட சொல்லலை.. எனக்கே வெக்கமா இருந்துச்சுங்க.

ஸ்டேசன் விட்டு வெளிய வந்து ஒரு 'ராஜா'வை பத்த வச்சகிட்டே, கண்ணுல நீர் கோர்த்துகிட்டதையும், உடம்பு நடுங்கினதையும் நினைச்சு சிரிச்சுக்கறவன, மேலயும் கீழயும் வித்தியாசமா பார்த்துகிட்டு ஹிண்டுவ மடிச்சுக்கிட்டே போனாரு ஒருத்தர். நுங்கம்பாக்கத்து ஸ்டேசன்ல காதல் காவியம் எழுதப்போற கிறுக்குபயன்னு நினைச்சிருப்பாரு.. :)

அந்த முகம் தெரியாத, நீலக்கலர் முழுக்கை சட்டைகாரருக்கும் எனக்கும் என்ன உறவு ?? யார் அவரு? இன்னைக்கு வரைக்கும் தெரியலைங்க.. கோயிலுக்கு போற பழக்கம் வேற இல்லை.. இருந்திருந்தா நீலக்கலர் சட்டை'ங்கிற பேருல ஒரு அர்ச்சணையாவது செஞ்சிருக்கலாம் :)

(மக்கள் விருப்பத்துக்கு அடிபணிந்து, 'தேன்கூடு' போட்டிக்கு சேர்த்திருக்கேன்)
--
#197

Monday, August 7, 2006

படக்குறிப்பு

வீணாப்போன ஒரு ஞாயித்துகிழமை சாயங்காலத்தை பத்தின படக்குறிப்பு..


விஷால்
(தாமிரபரணி நல்ல விலைக்கு போயிருக்குன்னு பேசிக்கறாங்க, அதுவும் பூஜை போட்ட அன்னைக்கே, தமிழ்நாடு பூராவும் வித்துபோச்சாம்.. இப்படி இன்னும் ஒரு படம் செஞ்சீங்க.. அப்புறம் அவ்வளவு தான்.. 'ஆதி'யே 'பேதி'யாக்கிடந்தது தெரியும் தான.. 'நான் சாணக்கியன் இல்லடா சத்ரியன்'ன்னு பஞ்ச் டயலாக் எல்லாம் பேச பார்க்கரீங்க.. ம்ம் நடத்துங்க.. வடக்கத்திகாரரா இருந்தாலும், 'நானும் மதுரக்காரண்தாண்டா'ன்னு சவுண்ட் குடுக்கும் போதெல்லாம மண்ணின் மைந்தன் மாதிரித்தான் இருக்கீங்க.. கொஞ்சம் கவனம் சாமி.. )

வடிவேலு
(நல்லாத்தான போயிட்டிருந்ததீங்க.. ஏன் திடீர்ன்னு இப்படி ஆம்பிளை சோடா, பொம்பிளை சோடான்னு, சூப்பர்ஸ்டார் மாதிரி சந்திரமுகி வழியில.... ம்ஹும் ஒன்னுஞ்சரியில்ல, இதுல ஒரு சோலோ குத்தாட்டம் வேற, நல்லதுக்கில்ல கைப்பு.. நல்லதுகில்ல)

மனோஜ்.கே.ஜெயின்
(கம்பீரமான மனோஜை சமீப காலத்துல இந்தளவுக்கு வெட்டியா யாருமே காமிக்கலைங்க. தமிழ் படத்துல கொஞம் துட்டு கூட தர்றாங்கன்னு நம்ம 'மல்லு' ஆளுக இந்த மாதிரி காமெடியெல்லாம் பல்லை கடிச்சுட்டு நடிச்சு குடுக்கறதா கேள்வி..)
'SS ம்யூசிக்' ஷ்ரேயா
(தேவையா அம்மணி உனக்கு, எல்லாம் கலி காலம்.. எவ்வளவு அழகா ஒரு இத்துனூன்டு டவுசரை போட்டுகிட்டு கலக்கிட்டு இருந்தீங்க, இதுல தாவணி எல்லாம் கட்டிகிட்டுடு, கண்ணை எல்லாம் உருட்டி, 'ஏய் இஸ்க்கு,... டேய் மாப்ளை'ன்னு சவுண்ட் எல்லாம் குடுத்து பார்க்கரீங்க, ஆனாலும் ம்ஹும்.. ஒன்னும் ஒர்க் அவுட் ஆகலையே..)

IM. விஜயன்
(கேரளா கால்பந்து விளையாட்டு வீரர், பாவம் ஒழுங்கா புட்பால் விளையாடி நல்ல பேரோட இருந்தவர கூட்டிட்டு வந்து நடிக்க வச்சு சொதப்பியிருக்காங்க)

ரீமாசென்
(உன்னைய போயி குத்தம் சொல்லுவனா தாயி.. உங்க வேலைய நீங்க திறம்பட செஞ்சிருக்கீங்க.. ம்ம்.. நமக்குதான் மனசு கெட்டுபோகுது உன்னைய பார்க்கையில )
டைரக்டர் தருண்கோபி
(சண்டைக்கோழி மாதிரி ஒரு படம்ன்னா ரைட்டு, அதுக்காக அச்சு அசலா அதே மாதிரியா இருக்கனும்.. ம்மஹும் இப்படியும் சொல்ல கூடாதுங்க, அப்புறம் அது சண்டைக்கோழி படத்துக்கு அசிங்கம். முதபடத்துலயே இப்படி சொதப்பிட்டயே தலைவா.. )

ம்யூஜிக் யுவன்சங்கராமில்ல.. வெளிய வரும் போது போஸ்டர்ல பார்த்து தான் தெரிஞ்சுது..
பங்கு அந்த போலீஸ்காரரை எங்கயோ பார்த்த மாதிரி இருக்குதே.. 'அட நம்ம பானுசந்தர்ப்பா'.. மூடுபனி, நீங்கள் கேட்டவை, வீடு இதெல்லாம் நடிச்சாரே அவரு.. என்னாங்கடா இது, அந்தாளுக்கு ஒரு ஓபனிங்க் க்ளோசப் கூடவா வைக்காம விடுறது்.. என்னா படம் எடுத்திருக்கானுக..

அடபோங்கப்பா.. ஞாயித்துகிழமை சாயங்காலம் அப்படியே நாலு பேரு கூடுற எடத்துக்கு ஒரு அழுக்கு ஜீன்ஸை போட்டுகிட்டு போயி நின்னு சாகுபடிக்கு வாய்ப்பு தேடாம நல்ல புள்ளையா இங்கிட்டு வந்தா.. திமிராமுல்ல திமுரு...

--
#196

Friday, August 4, 2006

டவுன்பஸ்

டவுன்பஸ்ன்னு தலைப்பு பார்த்ததும் அஞ்சலிதேவி பஸ் கண்டக்டரா நடிச்ச டவுன்பஸ் படத்தை பத்துன பதிவுன்னு நினைச்சுறாதீங்க, நல்ல படம் தான், அதுவும் அந்த படத்துல கே.வி. மகாதேவன் இசையில


சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா
என்ன விட்டு பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல

தலைய வாரி பூ முடிச்சேன், வாடி வதங்குது
சதா தெருவில் வந்து நின்னு நின்னு காலு வலிக்குது
வழிய வழிய பார்த்து பார்த்து கண்ணு நோகுது
அவர் வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது



ங்கிற பாட்டு நம்ம ஆல் டைம் ஃபேவரிட் லிஸ்ட்ல இருக்கிற பாட்டுங்க. அந்த பாட்டுக்கான ஆர்கெஸ்ட்ராவும் அந்த குரல்ல இருக்கிற குழைவும்.. ம்ம் அருமையான பாட்டுங்க அது, கேட்டதில்லைன்னா ஒரு தடவை கேட்டுப்பாருங்க.

ஆனா நான் சொல்ல வந்தது நிஜத்துல ஊருக்குள்ளார ஓடிட்டு இருக்கிற டவுன்பஸ் பத்திங்க. சென்னப்பட்டனம் மாதிரி பெரிய ஊருல எல்லாம் சிட்டி பஸ்ன்னு சொல்லுவாங்க, இங்க பொள்ளாச்சியில எல்லாம் டவுன் பஸ் தான், மப்ஸல் சர்வீசுன்னா ரூட்பஸ். இந்த டவுன் பஸ்ல பிராயணம் செய்யிறதுங்கிறது ரயில்பயணம் மாதிரியே ரொம்ப சுவாரசியமான விசயம்ங்க, ஆனா ரயில்பயணம் மாதிரி ரொம்ப தூரம் ஆறஅமர போகமாம சட்டுன்னு ஏறி கூட்டத்துல கசங்கிப்போயி சட்டுன்னு எறங்கிபோறதுனால, அதுல இருக்கிற சுவாரசியங்கள பத்தி நிறையாபேரு கவனிக்கறதில்லைன்னு நினைக்கிறனுங்க. இப்ப எதுக்கு அதுபத்தி பேசிட்டு இருக்கேன்னு கேட்டீங்கன்னா.. ரொம்ப நாளாச்சுங்க நம்மூர் டவுன்பஸ்ல எல்லாம் போயி, எங்க போனாலும் நம்ம RXலயே போறது இல்லைன்னா நம்ம 'மேதகு'வாகனம்ன்னு பழகுனதுக்கு அப்புறம், டவுன்பஸ்ல போறதுங்கிறதே மறந்து போச்சுங்க, எங்கயாவது வெளியூர் போனாக்கூட, வண்டிய எடுத்துட்டு போயி பஸ்ஸ்டான்ட் பக்கத்துல தம்பி டூ வீலர் ஸ்டான்ட்ல போட்டுட்டு தான் போறது, ரெண்டு நாள் ஆகும்னாலும் அதே கதை தான், அதுனால வெளியூர்ல இருந்து வந்தா வீட்டுக்கு போக டவுன்பஸ் புடிக்கிறதுங்கிற வழக்கம் கூட மாறிப்போச்சுங்க.



ஒரு காலத்துல பள்ளிக்கூடம் படிக்கும் போதெல்லாம் தினமும் ரெண்டு நேரமும் படியில தொங்கிட்டு போயி, கண்டக்ட்டர் சொல்லி பார்த்து, திட்டி பார்த்து, அப்புறம் இதுகள திருத்தமுடியாதுன்னு விட்டுட்டதெல்லாம் சொல்ல ஆரம்பிச்சா அது மறுபடியும் ஒரு பெரிய வரலாற்று பதிவாயிடும்ங்க. அதுவும் பள்ளிக்கூடத்துல இருந்து படியில தொங்கிட்டு வந்து, நம்ம இறங்கிற இடத்துக்கு ஒரு ஸ்டாப் முன்னால படியில இருந்து ஏறி உள்ளார போயி நின்னுக்கிறது, நம்ம ஆளுக யாராவது பார்த்துட்டாங்கன்னா என்ன செய்யிறதுன்னு ஒரு முன்னெச்சிரிக்கை. நம்ம இறங்கவேண்டிய இடம் வந்த்தும் படியில நிக்கிறவனையெல்லாம் தள்ளிட்டு திக்குமுக்காடி இறங்கிறது, சீக்கிரம் இறங்கி தொலைங்களேன்டா'ன்னு கத்துற கண்டக்டர் கிட்ட, நீங்க தான படியில நிக்காத உள்ளார வான்னு சொன்னீங்க, உள்ளார வந்து நின்னா இறங்க தாமசமாகத்தான் செய்யும்'னு லொல்லு பேசுறது.. ம்ம் நமக்கு அப்பவே அம்புட்டு அறிவு.

இப்ப எதுக்கு இப்படி கொசுவர்த்தி சுருளை பத்த வைக்கிறேன்னு கேட்டீங்கன்னா, ரொம்ப நாள் கழிச்சு திரும்பவும் டவுன் பஸ்ல ஏறினதுல வந்த வினைங்க இது. அதுவும் அதே மாதிரி பள்ளிக்கூடம் போற நேரத்துல, காலங்காத்தால நிரம்பி வழியுற கூட்டத்துல, அதே 14ம் நம்பர் பஸ்ல ஏறினா, அப்புறம் இப்படித்தான் கொசுவர்த்தி சுருள் நம்மள அறியாம பத்திக்குது. அப்பவிட இப்ப கொஞ்சம் கூட்டம் ஜாஸ்த்தி, யூனிபார்ம் போட்ட பசங்க கூட இப்பவெல்லாம் காலேஜ் பசங்க கூட்டமும் சேர்ந்திருக்கு. அப்ப நம்ம போகும்போது அந்த ரூட்ல ஒரு காலேஜும் கிடையாது, இப்ப ரெண்டு காலேஜ் வந்திருச்சுங்க், அதுனால பாவம் பள்ளிக்கூட பசங்க கொஞ்சம் அடக்கி வாசிக்கறாங்க போல.

'இத்துனூன்டு ஈக்குமார் குச்சி மாதிரி இருக்கானுக ஆனா படிய விட்டு மேல வர்றனுகளா பாரு, படிக்கிற பசங்களா இவனுக எல்லாம்'ன்னு புலம்பற பெருசு. 'உள்ளார ஏறி வாங்கடா, இவனுகளுக்கு கவர்மென்ட்ல பாஸை வேற குடுத்திடறாங்க, கூட்டமா ஏறி நம்ம உயிரை வாங்கிறானுக'ன்னு புலம்பற கண்டக்டர், கொஞ்சூன்டு மீசை எட்டி பார்க்கிற கதாநாயகனுக முன்பக்கம் ஏறி ஜன்னலோர மைனாக்க கிட்ட 'இந்த பேக்கை கொஞ்சம் வச்சுக்கோங்க'ன்னு குடுத்துட்டு ஒத்தக்கை ஒத்தகால்ல படியில நின்னுகிட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யிறது.. கொஞ்சம் தள்ளி உக்காந்திருக்கிற/நிக்கிற டீச்சருகள ஒர கண்ணுல பார்த்துகிட்டே, படியில தொங்கிற 'சிங்கங்க'ல கவனிக்கற யூனிபார்ம் போட்ட ரெட்ட ஜடைக, இந்த கூட்டத்தை கொஞ்சம் ஏக்கத்தோட பார்த்துகிட்டு அவங்களுக்குள்ளார சிரிச்சுகிற மில்லுக்கு போற மைனர்க, என்ன இப்பெல்லாம் மில்லுக்கு போற பசங்க எல்லாம் முன்ன மாதிரி லுங்கிவேட்டியும் தூக்குசட்டியுமா போறதில்லைங்க, ஜம்முன்னு சாயம்போன ஜீன்ஸ் போட்டுகிட்டு, தோள்ல தொங்கிற 'ஷோல்டர் பேக்'குமா போறாங்க. (அதுக்குள்ளாரதான் லுங்கியும் அழுக்கு சட்டையும் வச்சிருக்காங்க). திருமண திட்டத்துல மில்லுக்கு போற மைனாக்கூட்டத்தை எல்லாம் வேன் வச்சு கூட்டிட்டு போயிடறாங்களாம், அதுனால பஸ் பூராவும் படிக்கப்போற மைனாக்கூட்டமாத்தான் இருக்கு. ம்ஹும் எதுவும் பெருசா மாறலைங்க, அப்படியே தான் இருக்குது.. 14ம் நம்பர் பஸ் கண்டக்டர் கூட மாறலை, அதே எத்துபல்லு ஆறுமுகண்ணன்.. 'என்ன கண்ணு, பார்த்து ரொம்ப வருஷமாச்சு, நல்லா இருக்கியா?', நான் இடம் சொல்லாமயே சரியா டிக்கட் கிழிச்சு குடுக்கறாரு, தலையெல்லாம் நரைச்சிருச்சு. 'இருக்கிறனுங்க்ண்ணா' சரியான சில்லரைய குடுத்துட்டு மையமா சிரிச்சு வச்சேன்.

நம்ம இறங்கிற இடம் வந்ததும் படியுல நிக்கிற ஈக்குமார்குச்சிகள விலக்கிட்டு தக்கிமுக்கி இறங்கி வூட்ட பார்த்து நடக்கும் போது மனசுகுள்ளார ஒரு கேள்விங்க, 'இத்தனை வருஷமா இதே ரூட்ல ஓடுறாரு, எத்தனை பசங்கள பார்த்திருப்பாரு, அத்தனை பேரையுமா ஞாபகம் வச்சிருப்பாரு ஆறுமுக அண்ணன்...?'


--
#195


(முன்னாடி போட்ட பதிவை ப்ளாகர் சாப்பிட்டுட்டாரு, அதுனால மறுபடியும்.. விடமாட்டமில்ல :) )

Monday, July 31, 2006

நான் ஒரே பிஸி

' நாலு நாள் காய்ச்சல் வந்து படுத்திட்டினா, அப்புறம் தலைய கூட அசைக்க முடியாது'ன்னு உல்லாசம் படத்துல ஒரு வசனம் வரும்ங்க, பாலகுமாரன்னு ஞாபகம். அமிதாப்பச்சன் கார்ப்பரேஷன் தயாரிப்புல ஜெடி-ஜெர்ரி இயக்கத்துல வந்த படம்ங்க.. இந்த ஓ போடுற சமாச்சாரத்தை தமிழகம் முச்சூடுக்கும் கொண்டு போய் சேர்த்த படம். அஜித் விக்ரம்'ன்னு ரெண்டு சூப்பர் பரசனாலிட்டிக, அருமையான பாட்டுக, பாலகுமாரன் வசனம், ரகுவரனோட கலக்கல், அருமையான படப்பிடிப்பு எல்லாம் இருந்தும் வெற்றிகரமா தோத்துபோன படம். சரி.. சரி.. நான் சொல்ல வந்தது படத்தை பத்தியில்லைங்க.. அந்த காய்ச்சல் பத்தி.

முழுசா ஆறு வருஷம் ஆச்சுங்க, டாக்டர் கிட்ட போயி மருந்து மாத்திரைன்னு வாங்கி சாப்பிட்டு. இடையில அப்பப்போ எட்டி பார்க்கிற சின்ன சின்ன ஜலதோஷத்துக்கு எல்லாம் குருமிளகு இல்லாட்டி மண்டைன்னே ஒதுங்கிடறது தாங்க வழக்கம். இடையில அந்த பயணக்குறிப்பு (1, 2) சம்பவத்துக்கு கூட மருந்தெல்லாம் வேண்டாங்கன்னு எங்க டாக்டர் கிட்ட பிடிவாதம் புடிச்சு ஒரே நாள் மருநதோட தப்பிச்சவன்ங்க நான். ஆனா, இப்போ ஆறு நாளா எதோ ஒரு வைரஸ் காய்ச்சலாம் ஒன்னுஞ்சாப்பிட முடியாம, வெறுப்போட ரொட்டியும் பாலும் சாப்பிட்டுட்டு நேரத்துக்கு ரெண்டு மூணு'ன்னு ஆன்ட்டிபயாடிக் எடுத்துகிட்டு, இப்பத்தான் ஒரளவுக்கு தேறி வந்திருக்கனுங்க.

வீட்டுல அய்யன், அமுச்சி, அம்மான்னு எல்லாரும் ஒரு வாரம் முறை வச்சு காய்ச்சல்ல படுத்து எந்திருச்சாச்சுங்க, அவுங்களுக்கெல்லாம் ஸ்பெஷல் சிக்குனியா வைரஸ், நமக்கு சாதாரண வைரஸ்சாம்..

இந்த காய்ச்சல் சமாச்சரம் கூட பரவாயில்லைங்க, ஒரு வழியா சரியாபோச்சு, என்ன இன்னும் ஒரு நாலஞ்சு நாளைக்கு இந்த ஆன்ட்டிபயாட்டிக் எல்லாம் சாப்பிட்ட கிறக்கம் இருக்கும். அது தாண்டுனா சரியாபோகும்னு வச்சுக்கோங்க.. இந்த காய்ச்சல தொடர்ந்தாப்புல இலவச இணைப்பு மாதிரி வர்ற வில்லங்கம் இருக்குது பாருங்க, அது தான் பெரிய இம்சைய குடுக்கும் போல இருக்குதுங்க

குலதெய்வம் கோயல்ல ஒண்ணா போய் பொங்க வைக்கனும், ஆடி முடியறதுகுள்ளார மீன்குளத்தி பகவதியம்மன் கோயிலுக்கு ஒரு வாட்டி போகனும்'ன்னு எங்கம்மா என்னோட அடுத்த மூணு நாலு வாரக்கடைசிக்கான பயண ஏற்ப்பாட்டுல இறங்கிட்டாங்க.

சரி இது எப்பவும் நடக்கிற கதை தான, சரி சரின்னு தலையாட்டிட்டு கடைசி நேரத்துல வழக்கம் போல 'அவனவனுக்கு ஆயிரம் வேலை, இதுல நீங்க வேற'ன்னு சொல்லிட்டு தப்பிச்சுக்கலாம்ன்னு நினைச்சா, வில்லங்கம் வேற பக்கத்துல இருந்து வருதுங்க.

"ம்ம்.. கண்ணு பட்டிருச்சு, அன்னைக்கே சொல்லனும்னு நினைச்சனுங்க, மாப்ள'ய இந்த கருப்பு கலர்ல துணிமணியெல்லாம் போட வேண்டாம்னு சொல்லுங்க, கருப்பு நமக்கு ஆகாத கலருங்க, சும்மாவா சொல்லிவச்சிருக்காங்க பெரியவங்க", "அங்க பக்கத்துல கோயில் எல்லாம் இருக்குதுங்களா, விசாழக்கிழமை விசாழக்கிழமை ஒரு நாலு வாரத்துக்கு போயி விளக்கு வைங்க"ன்னு ஆரம்பிச்சு சும்மா டஜன் கணக்குல நம்ம பழக்க வழக்கத்துக்கு ஆகாத விசயமா கொட்றாங்க... நான் வச்சிருக்கிறதுல பாதி துணிமணி கருப்பு தான், முன்னயாவது வெள்ளிக்கிழமை வெள்ளிகிழமை கோயிலுக்கு போயிட்டிருந்தோம், அதுவும் இப்பெல்லாம் இல்லை, நம்மள போயி வாரவாரம் கோயிலுக்கு போயி விளக்கெல்லாம் வைக்க சொல்றாங்க.. அய்யா சாமிகளா, என்னை விட்ருங்கய்யான்னு கதறனும் போல இருக்குதுங்க, ம்ம்.. இதெல்லாம் எங்க போயி முடியுமோ..

எல்லாத்தையும் நல்ல புள்ளையாட்டம் சரி சரி'ன்னு வழக்கம் போல இந்த காதுல கேட்டு அந்த காதுல விட்டுட்டே இருக்கேன்.

ராத்திரியில நந்தினி பாக்கெட் வாங்கிட்டு வூட்டுக்கு போனா பசங்க ஒரு நமுட்டு சிரிப்பு சிரிக்குறானுக.. நான் என்னமோ புதுசா இப்போ யாரோ சொல்லி இதெல்லாம் செய்யிற மாதிரி, உடம்பு கொஞ்சம் வீக்காயிடுச்சேன்னு தான்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறானுக.. ம்ம்.. உலகம் இப்படித்தான் என்னத்த செய்ய..

அப்புறம், 'கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவிய தூக்கு நடுமனையில வை' ங்கிற கதையா, இந்த வருத்தப்படாத வாலிப சங்கத்துல இருந்து நம்மள ஆகஸ்ட் மாச அட்லாஸ் வாலிபர்ன்னு தட்டி வச்சிட்டாங்க.. இனி அந்த பொறுப்பை வேற தூக்கி சுமக்கனும்.. ம்ம்.. இதுக்கு நடுவால இந்த கிணத்தூர் எம்எலஏ வேற. ஒரெ நச்சு நச்சுன்னு தொந்திரவு பண்ணிகிட்டு, எதோ அவன் வீட்டு கல்யாணமாம், அவனாலயே முடியலைன்னு எங்கிட்ட வந்து சொல்லிட்டு.. டேய் நாராயணா, நான் ஒரே பிஸிடா..

--
#194