Monday, August 23, 2004

நச்சுன்னு ஒரு கேள்வி

அதென்னமோ தெரியலைங்க, நாலு படிச்ச பெரியவங்க மத்தியில, எனக்கு புடிச்ச காமெடி நடிகர் கவுண்டமனி தான்னு சொன்னா, ஒரு இளக்காரமான பார்வை வருது. "சும்மா கால தூக்கி இடுப்புல உதைக்கிறதுக்கு பேரெல்லாம் காமெடியா?? காமெடின்னா கொஞ்சம் ஹெல்த்தியா செய்யனும்" அப்படி இப்படின்னு ஒரு பெரிய லெக்சர் வேற குடுக்கிறாங்க.

ஒத்துகிறேன், கால தூக்கி இடுப்புல உதைக்கிறதுக்கு மட்டும் காமெடியில்லை, ஆனா கவுண்டமனி காமெடி அது மட்டும் தானா? ஒரு வாழைப்பழ சீனுல அவர் உதைக்கிறது மட்டுமா பிராதானம்? வைதேகி காத்திருந்தால் படத்துல செந்தில் பெட்ரமாக்ஸ் லைட்ட உடைச்சதும் ஒரு பார்வை பார்ப்பாரே, அப்போ எதுக்கு சாமி சிரிச்சீங்க?, அரசியல்ல இதெல்லாம் சகஜம்ன்னு சொல்லி ஒரு சமாளிப்பு சமாளிப்பாரே, அது கூட காமெடி இல்லையா?
இப்படி கேள்வி கேக்க ஆரம்பிச்சா, அப்புறம் அதுக்கு ஒரு முடிவே இருக்காது, அவர் நடிச்ச எல்லாப்படத்தையும் பத்தி பேசனும். எனக்கு என்னமோ அவர் காமெடி புடிச்சிருக்கு. அப்ப்டி இல்லாம சும்மாவா 20 வருஷம் ஒரு ஹீரோக்கு சமமா நிக்க முடியும். அதுவும் நன்னை பத்தி விளம்பரமா ஒரு பேட்டியும் குடுக்காம, ஒரு விழாவுலையும் கலந்துக்காம, மக்களுக்கு புடிச்ச மாதிரி இருக்கிரதுன்னா அது சாதரண விஷயாமா?


நான் சொல்ல வந்தது கவுண்டமனி காமெடிய பத்தியில்லை, (அப்புறம் ஏண்டா கண்டதையும்பேசர..?) சரி.. சரி விஷயத்துக்கு வர்றேன். இங்க எங்க ஊரு பக்கம் அடிக்கடி சினிமா ஷூட்டிங் நடக்கும், எங்க ஆளுகளும் ஏதோ காணாததை கண்டவங்க மாதிரி வேலை வெட்டிய விட்டுபுட்டு சுத்தி குமுஞ்சுகிட்டு வேடிகை பார்ப்பாங்க. என் பங்காளி ஒருத்தன் தொந்திரவு தாங்காம நானும் ஒரு நாள் வேடிக்கை பாக்குற கூட்டத்துக்கு கூட போனேன். அங்க போன நம்ம கவுண்டமனி நடிச்சுட்டு இருக்காரு, எதாவது வடநாட்டு பொண்ணு தொப்புளையும், ***\, காட்டிட்டு வயல்ல இறங்கி ஆடுவா, நேருல பார்க்கலாம்ம்னு வந்த நம்ம பசங்க வெறுப்பாகி திரும்பிட்டாங்க. நான் நம்ம ஆளு இருக்காரே கொஞ்ச நேரம் வேடிக்க பாக்கல்லாம்னு அங்கயே நின்னுட்டன். நமக்கு தெரிஞ்சவங்க தோட்டதுல தான் ஷூட்டிங் நடந்துதா, அந்த தோட்டதுக்காரர், அவரோட செல்வாக்க காட்டனும்னு, என்னை கூட்டீட்டு போய் கவுண்டமனி கிட்ட அறிமுகப்படுத்திவச்சாரு, நானும் கொஞ்ச நேரம், சும்மா, எனக்கு உங்க படமெல்லாம் ரொம்ப புடிக்கும் அது இதுன்னு திருவாத்தான் மாதிரி பேசிட்டு இருந்தேன் (மாதிரி என்ன, மாதிரி நிஜம்மாவே அப்படித்தான்). அவரும் மரியாதையா, என்ன செய்யரீங்க அப்படி இப்படின்னு விசாரிச்சுட்டு, ஒரு கேள்வி கேட்டாரு பாருங்க, அதுதான் நான் சொல்ல வந்த சமாச்சாரம். அதை சொல்றதுக்கு பதிலா தேவையில்லாம, காமெடி, ஷூட்டிங்க்ன்னு கண்டதையும் பேசிட்டன். அப்படி என்ன கேட்டாருங்கரீங்களா?. "நாங்க பாட்டுக்கு எங்க வேலையா பார்த்துட்டு இருக்கோம், நீங்க ஏன்ப்பா இப்படி உங்க வேலைய விட்டுபுட்டு எங்கள வேடிக்கை பார்த்துட்டு நிக்கரீங்க, நீங்க வேலை செய்யும் போது யாராவது இப்படி வந்து வேடிக்கை பார்ப்பாங்களா?"ன்னு கேட்டாரு. ஒரு கேள்வின்னாலும் நச்சுன்னு நடு மண்டையில கடப்பறைய போட்ட மாதிரி கேட்டாரு பாருங்க, அதுக்கப்புறம் இன்னைக்கு வரைக்கும் நான் ஷூட்டிங் நடக்குற பக்கம் தலை வச்சு படுக்கறது கூட இல்லைங்க (அன்பேசிவம் படத்துக்காக கமல்ஹாசன் வந்தப்பவும் சரி, வின்னர் படத்துகாக அருவியில கிரண் இழுத்து போத்திட்டு (!) பாட்டு சீன் எடுக்கறாங்க மாப்பிள்ளைன்னு பசங்க என்னை உசுப்பேத்துனப்ப கூட, ம்ஹூம் சத்தியமா நான் அந்த பக்கம் போகலை)

3 comments:

Unknown said...

சமீபத்தில் குமுதம் அரசு கேள்வி பதிலில் அரசு கவுண்டரை பற்றி சொன்னதை படிச்சிங்களா?

கவுண்டர் நியாயமான கேள்வி தான் கேட்டிருக்கார். நல்லவேளை நீங்க கிரணை பார்க்க போகலை. இல்லைன்னா இந்தப் பதிவெல்லாம் பாண்டிமடம்/ஏர்வாடில இருந்துல்ல ராசா எழுத வேண்டி வந்திருக்கும் ;-).

Gyanadevan said...

எனக்கும் கவுண்டமணியோட நகைச்சுவை பிடிக்கும். அதுவும் அவர் தன்னோட குரல்லே கொண்டு வர்ற ஏற்றம் இறக்கம், முகத்துல காட்டுற சோகம், கோபம்... அற்புதமா இருக்கும். அவரை சினிமால பார்க்க முடியாம ரொம்ப மிஸ் பண்றேன்.

மதன்ராஜ் மெய்ஞானம் said...

Goundamanikku nigar avarethaan... Enakku ithellam saatharanam... :-)