Friday, August 4, 2006

டவுன்பஸ்

டவுன்பஸ்ன்னு தலைப்பு பார்த்ததும் அஞ்சலிதேவி பஸ் கண்டக்டரா நடிச்ச டவுன்பஸ் படத்தை பத்துன பதிவுன்னு நினைச்சுறாதீங்க, நல்ல படம் தான், அதுவும் அந்த படத்துல கே.வி. மகாதேவன் இசையில


சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா
என்ன விட்டு பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல

தலைய வாரி பூ முடிச்சேன், வாடி வதங்குது
சதா தெருவில் வந்து நின்னு நின்னு காலு வலிக்குது
வழிய வழிய பார்த்து பார்த்து கண்ணு நோகுது
அவர் வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது



ங்கிற பாட்டு நம்ம ஆல் டைம் ஃபேவரிட் லிஸ்ட்ல இருக்கிற பாட்டுங்க. அந்த பாட்டுக்கான ஆர்கெஸ்ட்ராவும் அந்த குரல்ல இருக்கிற குழைவும்.. ம்ம் அருமையான பாட்டுங்க அது, கேட்டதில்லைன்னா ஒரு தடவை கேட்டுப்பாருங்க.

ஆனா நான் சொல்ல வந்தது நிஜத்துல ஊருக்குள்ளார ஓடிட்டு இருக்கிற டவுன்பஸ் பத்திங்க. சென்னப்பட்டனம் மாதிரி பெரிய ஊருல எல்லாம் சிட்டி பஸ்ன்னு சொல்லுவாங்க, இங்க பொள்ளாச்சியில எல்லாம் டவுன் பஸ் தான், மப்ஸல் சர்வீசுன்னா ரூட்பஸ். இந்த டவுன் பஸ்ல பிராயணம் செய்யிறதுங்கிறது ரயில்பயணம் மாதிரியே ரொம்ப சுவாரசியமான விசயம்ங்க, ஆனா ரயில்பயணம் மாதிரி ரொம்ப தூரம் ஆறஅமர போகமாம சட்டுன்னு ஏறி கூட்டத்துல கசங்கிப்போயி சட்டுன்னு எறங்கிபோறதுனால, அதுல இருக்கிற சுவாரசியங்கள பத்தி நிறையாபேரு கவனிக்கறதில்லைன்னு நினைக்கிறனுங்க. இப்ப எதுக்கு அதுபத்தி பேசிட்டு இருக்கேன்னு கேட்டீங்கன்னா.. ரொம்ப நாளாச்சுங்க நம்மூர் டவுன்பஸ்ல எல்லாம் போயி, எங்க போனாலும் நம்ம RXலயே போறது இல்லைன்னா நம்ம 'மேதகு'வாகனம்ன்னு பழகுனதுக்கு அப்புறம், டவுன்பஸ்ல போறதுங்கிறதே மறந்து போச்சுங்க, எங்கயாவது வெளியூர் போனாக்கூட, வண்டிய எடுத்துட்டு போயி பஸ்ஸ்டான்ட் பக்கத்துல தம்பி டூ வீலர் ஸ்டான்ட்ல போட்டுட்டு தான் போறது, ரெண்டு நாள் ஆகும்னாலும் அதே கதை தான், அதுனால வெளியூர்ல இருந்து வந்தா வீட்டுக்கு போக டவுன்பஸ் புடிக்கிறதுங்கிற வழக்கம் கூட மாறிப்போச்சுங்க.



ஒரு காலத்துல பள்ளிக்கூடம் படிக்கும் போதெல்லாம் தினமும் ரெண்டு நேரமும் படியில தொங்கிட்டு போயி, கண்டக்ட்டர் சொல்லி பார்த்து, திட்டி பார்த்து, அப்புறம் இதுகள திருத்தமுடியாதுன்னு விட்டுட்டதெல்லாம் சொல்ல ஆரம்பிச்சா அது மறுபடியும் ஒரு பெரிய வரலாற்று பதிவாயிடும்ங்க. அதுவும் பள்ளிக்கூடத்துல இருந்து படியில தொங்கிட்டு வந்து, நம்ம இறங்கிற இடத்துக்கு ஒரு ஸ்டாப் முன்னால படியில இருந்து ஏறி உள்ளார போயி நின்னுக்கிறது, நம்ம ஆளுக யாராவது பார்த்துட்டாங்கன்னா என்ன செய்யிறதுன்னு ஒரு முன்னெச்சிரிக்கை. நம்ம இறங்கவேண்டிய இடம் வந்த்தும் படியில நிக்கிறவனையெல்லாம் தள்ளிட்டு திக்குமுக்காடி இறங்கிறது, சீக்கிரம் இறங்கி தொலைங்களேன்டா'ன்னு கத்துற கண்டக்டர் கிட்ட, நீங்க தான படியில நிக்காத உள்ளார வான்னு சொன்னீங்க, உள்ளார வந்து நின்னா இறங்க தாமசமாகத்தான் செய்யும்'னு லொல்லு பேசுறது.. ம்ம் நமக்கு அப்பவே அம்புட்டு அறிவு.

இப்ப எதுக்கு இப்படி கொசுவர்த்தி சுருளை பத்த வைக்கிறேன்னு கேட்டீங்கன்னா, ரொம்ப நாள் கழிச்சு திரும்பவும் டவுன் பஸ்ல ஏறினதுல வந்த வினைங்க இது. அதுவும் அதே மாதிரி பள்ளிக்கூடம் போற நேரத்துல, காலங்காத்தால நிரம்பி வழியுற கூட்டத்துல, அதே 14ம் நம்பர் பஸ்ல ஏறினா, அப்புறம் இப்படித்தான் கொசுவர்த்தி சுருள் நம்மள அறியாம பத்திக்குது. அப்பவிட இப்ப கொஞ்சம் கூட்டம் ஜாஸ்த்தி, யூனிபார்ம் போட்ட பசங்க கூட இப்பவெல்லாம் காலேஜ் பசங்க கூட்டமும் சேர்ந்திருக்கு. அப்ப நம்ம போகும்போது அந்த ரூட்ல ஒரு காலேஜும் கிடையாது, இப்ப ரெண்டு காலேஜ் வந்திருச்சுங்க், அதுனால பாவம் பள்ளிக்கூட பசங்க கொஞ்சம் அடக்கி வாசிக்கறாங்க போல.

'இத்துனூன்டு ஈக்குமார் குச்சி மாதிரி இருக்கானுக ஆனா படிய விட்டு மேல வர்றனுகளா பாரு, படிக்கிற பசங்களா இவனுக எல்லாம்'ன்னு புலம்பற பெருசு. 'உள்ளார ஏறி வாங்கடா, இவனுகளுக்கு கவர்மென்ட்ல பாஸை வேற குடுத்திடறாங்க, கூட்டமா ஏறி நம்ம உயிரை வாங்கிறானுக'ன்னு புலம்பற கண்டக்டர், கொஞ்சூன்டு மீசை எட்டி பார்க்கிற கதாநாயகனுக முன்பக்கம் ஏறி ஜன்னலோர மைனாக்க கிட்ட 'இந்த பேக்கை கொஞ்சம் வச்சுக்கோங்க'ன்னு குடுத்துட்டு ஒத்தக்கை ஒத்தகால்ல படியில நின்னுகிட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யிறது.. கொஞ்சம் தள்ளி உக்காந்திருக்கிற/நிக்கிற டீச்சருகள ஒர கண்ணுல பார்த்துகிட்டே, படியில தொங்கிற 'சிங்கங்க'ல கவனிக்கற யூனிபார்ம் போட்ட ரெட்ட ஜடைக, இந்த கூட்டத்தை கொஞ்சம் ஏக்கத்தோட பார்த்துகிட்டு அவங்களுக்குள்ளார சிரிச்சுகிற மில்லுக்கு போற மைனர்க, என்ன இப்பெல்லாம் மில்லுக்கு போற பசங்க எல்லாம் முன்ன மாதிரி லுங்கிவேட்டியும் தூக்குசட்டியுமா போறதில்லைங்க, ஜம்முன்னு சாயம்போன ஜீன்ஸ் போட்டுகிட்டு, தோள்ல தொங்கிற 'ஷோல்டர் பேக்'குமா போறாங்க. (அதுக்குள்ளாரதான் லுங்கியும் அழுக்கு சட்டையும் வச்சிருக்காங்க). திருமண திட்டத்துல மில்லுக்கு போற மைனாக்கூட்டத்தை எல்லாம் வேன் வச்சு கூட்டிட்டு போயிடறாங்களாம், அதுனால பஸ் பூராவும் படிக்கப்போற மைனாக்கூட்டமாத்தான் இருக்கு. ம்ஹும் எதுவும் பெருசா மாறலைங்க, அப்படியே தான் இருக்குது.. 14ம் நம்பர் பஸ் கண்டக்டர் கூட மாறலை, அதே எத்துபல்லு ஆறுமுகண்ணன்.. 'என்ன கண்ணு, பார்த்து ரொம்ப வருஷமாச்சு, நல்லா இருக்கியா?', நான் இடம் சொல்லாமயே சரியா டிக்கட் கிழிச்சு குடுக்கறாரு, தலையெல்லாம் நரைச்சிருச்சு. 'இருக்கிறனுங்க்ண்ணா' சரியான சில்லரைய குடுத்துட்டு மையமா சிரிச்சு வச்சேன்.

நம்ம இறங்கிற இடம் வந்ததும் படியுல நிக்கிற ஈக்குமார்குச்சிகள விலக்கிட்டு தக்கிமுக்கி இறங்கி வூட்ட பார்த்து நடக்கும் போது மனசுகுள்ளார ஒரு கேள்விங்க, 'இத்தனை வருஷமா இதே ரூட்ல ஓடுறாரு, எத்தனை பசங்கள பார்த்திருப்பாரு, அத்தனை பேரையுமா ஞாபகம் வச்சிருப்பாரு ஆறுமுக அண்ணன்...?'


--
#195


(முன்னாடி போட்ட பதிவை ப்ளாகர் சாப்பிட்டுட்டாரு, அதுனால மறுபடியும்.. விடமாட்டமில்ல :) )

8 comments:

Pavals said...

ஹலோ ஹலோ.. டெஸ்டிங்.. ஒன், டூ, த்ரீ... த்ரீ, டூ. ஒன்..

ஒகே.. :)

Pavals said...

துளசிகோபால் :
//அவர் வந்தால் போதும் என்ற சேதி நெஞ்சில் இருக்குது'//

'அவர் வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது'
----------------------

நாகைசிவா :
//எத்தனை பசங்கள பார்த்திருப்பாரு, அத்தனை பேரையுமா ஞாபகம் வச்சிருப்பாரு ஆறுமுக அண்ணன்...?'//
எத்தன பேர பாத்தாலும் நம்ம ராசா போல வருமா
:)))

---------------------

ILA (a) இளா said...

நம்ம ஊர்க்காரங்களுக்கு மட்டும்:
எத்தனை ஃபிகரை பார்த்து மறந்துட்டாலும் இவுங்ளமாதிரி அண்ணாக்கள் தான் இப்போ பேருந்துல போகும்போது ஞாபகத்துக்கு வராங்க. வீட்டு விஷேசத்துக்கு எல்லாம் கூப்பிடுற அளவுக்கு நெருக்கமா இருந்தாலும் நாம வாழ்க்கை பயணத்துல மறந்துதான் போயிடறோம்.

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

14-ஆம் நம்பர் பஸ்ஸா? இந்த, கஞ்சம்பட்டி வழியா ராவணாபுரம் போகுமே, அதுவா?
நீங்க எத்தனாவது ஸ்டாப்னு சொல்லுங்க, நான் எந்த ஊர்னு சொல்றேன்!
ஆறுமுகண்ணன்? யாரு, கேவிகே-ல வருவாரே அவரா?
:))

இராம்/Raam said...

பழய ஞாபகத்தியல்லாம் கலைச்சி விட்டுடியப்பா ராசா... எனக்கும் இப்பா கொசுவர்த்தி சுருள் சுத்திக்கிட்டு இருக்கு.....

Sud Gopal said...

19C,7,ரெண்டாம் நம்பர்.பழனி-கனியூர் போற எட்டு-ஏ.

அது சரி அங்கிள்பயாடிக் எஃபக்ட் எல்லாம் முட்ஞ்சு போச்சா???

Udhayakumar said...

ராசா. எங்க ஊரு டவுன் பஸ்லையும் இதே கதைதான். சுத்தி முத்திப் பார்த்தா வடக்கு ஊட்டு ஆயாவோட நங்கையா பேத்தியை குடுத்துருக்காங்கள்ளோ அவங்க பங்காளிதான் கண்டக்டர் சாமிநாதன்னு எப்படியாவது உறவு கண்டு பிடிச்சிருவாங்க. அதனால நாங்கெல்லாம் கமுக்கமா போயிட்டு கமுக்கமா வந்திருவோம்...

ILA (a) இளா said...

டவுன் பஸ்'னா நமக்கு ஞாபகம் வரது என்னமோ சிட்டுக்குருவி படத்துல வர "என் கண்மணி இளமாங்கனி" பாட்டுதான். ரொம்ப நாள் கழிச்சு அந்த பாட்டை இன்னைக்கு கேட்டேன். அந்த ஞாபகமா ஒரு பின்னூட்டம்.