Saturday, July 2, 2005

வேம்பநாடு ஏரி

போன பதிவுல நான் விடுமுறையை கழிக்க விரும்பும் இடங்கள் வரிசையில சொன்ன வேம்பநாடு ஏரியிலிருந்து ஒரு படம்.


ஆஃப் சீசன்'ல எடுத்த படம் இது.
ஒரு அமுக்கு அமுக்கி பெரிசா பார்த்துக்கோங்க.

Friday, July 1, 2005

அந்த மூன்று விஷயங்கள்.



இபோ பதிவுகள்ல ஒரு personal tag' (தமிழ்ல என்னங்க சொல்றது?)ன்னு ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க. நம்மளயும் இளமுருகு அந்த ஆட்டத்துல புடிச்சு விட்டிருக்காரு, அதுனால நம்ம பங்குக்கு நம்மளும் எழுதியாச்சு..

உங்கள் உருவத்தில் உங்களுக்கு பிடித்த மூன்று: (THREE PHYSICAL THINGS YOU LIKE ABOUT YOURSELF)
இடது கை சுண்டுவிரல் முனையில் இருக்கிற மச்சம்
செல்ஃப் ஷேவ் பண்ணினதும் நான் ரசிக்கிர என் கிருதா
கால்கட்டை விரலை விட நீளம் ஜாஸ்த்திய இருக்கிற அடுத்த கால்விரல்


நீங்கள பயப்படும் விஷயங்கள் மூன்று: (THREE THINGS THAT SCARE YOU)
அறிவுரைகள் :-(
டிஸ்க்கோத்தே
மைனர் செயின்

தினசரி வாழ்க்கையில் உங்களுக்கு மிக முக்கியமான மூன்று: (THREE OF YOUR EVERYDAY ESSENTIALS)
என்னுடைய பெட்-பேங்க் டெபிட் கார்ட்
என் கண்ணாடி
poggo சேனல்

இப்பொழுது அணிந்துகொண்டிருக்கும் மூன்று: (THREE THINGS YOU ARE WEARING RIGHT NOW)
கை வைக்காத oxen பனியன்
கத்திரிப்பூகலர் கட்டம் போட்ட லுங்கி
வெள்ளை ஈரலதுண்டு

உடனடியாக உங்களுக்கு தேவைப்படும் மூன்று: (THREE THINGS YOU WANT TO DO REALLY BADLY RIGHT NOW)
வெளிய நல்ல மழை சூடா மிளகாய் பஜ்ஜி கிடைச்சா பரவாயில்லை
கூடவே ஒரு ரெண்டு சுத்து கையெழுத்து'ம் கிடைச்சா.. ஆஹா..
ஒரு அகலப்பாட்டை இணைப்பு :-(

இறப்பதற்க்கு முன் நீங்கள் செய்ய நினைக்கும் மூன்று: (FEW THINGS I WANT TO DO BEFORE I DIE)
த்ரிஷா கூட ஒரு சீன்ல நடிக்கனும் (குளிக்கிற சீன்ல இல்லீங்க..)
எங்கய்யன் ஆசைப்படுற மாதிரி பொறுப்பான பையனா மாறனும்.
இவன் எப்ப சாவான்னு நாலு பேரு நினைக்க வைக்கனும்

உங்கள் விடுமுறையை நீங்கள் கழிக்க விரும்பும் இடங்கள் மூன்று: (THREE PLACES YOU WANT TO GO ON VACATION)
வேம்பநாடு ஏரி (பேட்டரி வசதி இல்லாத படகுவீட்டில்)
கபினிஆற்றங்கரை நடைபயணம்
அப்புறம்.. முடிஞ்சா.. இந்தியஜனாதிபதி மாளிகை ;-)

உங்களுக்கு பிடித்த குழந்தைகள் பெயர் மூன்று: (THREE KIDS NAMES YOU LIKE)
பப்பிகுட்டி
ஜுஜிம்மா
ராசா

LAST BOOK I READ NUMBER OF BOOKS I OWN
இதெல்லாம் ஏற்க்கனவே பழைய பதிவுல சொன்ன சமாச்சாரம் தான, அதுனால நோ..ர்ரிப்பீட்ட்டேய்!!
3 PEOPLE I WISH TO TAG
அதென்ன மூனு பேரு.. தமிழ்பதிவுகள்ல இந் த தொடர் சமாச்சாரம் இன்னும் ஆரம்பிக்கலையில்ல, அதுனால இதை படிக்கிற அளுக யாருக்கு இது புடிக்குதோ அவுங்க ஆளுக்கொரு நூல்புடிச்சு தொடர்ந்துக்கோங்க..

--
#100
..
அட நூறு பதிவாயுடுச்சா??.. ச்சே யாராவது விழா எடுக்கிற ஆசை இருந்தா சொல்லுங்கப்பு (பொற்க்கிழி, பணமுடிப்பு எதுவா இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்)

Friday, June 24, 2005

அரசியல்வாதி


அரசியல்வாதியும் அவர் மகனும்
நான் பார்க்கிற பெண்ணை தான் நீ கட்டிக்கனும்..
அதெல்லாம் முடியாது. நான் தான் என் சம்சாரம் யாருங்கிறத முடிவு செய்வேன்..
டேய், நான் பார்த்திருக்கிற பொண்ணு, நம்ம நாட்டுலயே பெரிய கோடீசுவரர் 'ரவி' பொண்ணுடா..
அப்படின்னா.. சரி.. நான் பொண்ண பார்த்துட்டு சொல்றேன்..

அரசியல்வாதியும் கோடீசுவரர் 'ரவி'யும்
சார், உங்க பொண்ண என் பையனுக்கே குடுக்கனும்..
இல்லீங்க.. நான் இப்போதைக்கு பொண்ணுக்கு கல்யாணம் பண்ற ஐடியா இல்லை..
என் பையன், வேர்ல்ட் பேங்க் பிரதிநிதியா இருக்கான்..
அப்போ, நான் வீட்டுல கலந்துட்டு ஒரு நல்ல முடிவா சொல்றேன்..

அரசியல்வாதியும் வேர்ல்ட் பேங்க் ஆபீசரும்
என் பையனுக்கு அந்த உலக வங்கி பிரதிநிதி வேலைய குடுப்பீங்களா மாட்டீங்களா..
சார், அதுக்கு ஏற்க்கனவே நிறையா பெரிய இன்டஸ்ட்ரியலிஸ்ட் கிட்ட இருந்தெல்லாம் சிபாரிசு வந்திருக்கு சார்..
என் பையன், நம்ம நாட்டோட பெரிய கோடீசுவரர் 'ரவி'யோட மருகமன் ஆகப்போறான்..
அப்படியா.. அப்ப நான் இத பத்தி மத்த மெம்பர்ஸ மீட் பண்ணிட்டு, கன்பஃர்ம் பண்னிடறேன்..

--
எனக்கு வந்த மடலோட தமிழாக்கம்.. அந்த மடல்ல இந்த அரசியல்வாதி பேரு 'லாலு', எனகேன்னவோ அப்படி ஒருத்தர மட்டும் சொல்ல தோணலை.. அதுனால பொதுவா 'அரசியல்வாதி'

--
#99

Thursday, June 23, 2005

கல்யாணம் - சம்சாரம் - வேலை - சம்பளம்

பிரம்மச்சாரிகளை விட கல்யாணமான, அதுவும் சம்சாரத்தை வேலைக்கு அனுப்பாம வீட்டுலயே வச்சுக்கிற ஆளுக அதிகமா சம்பாரிப்பாங்களாம்..
பொதுவா கல்யாணம் ஆனவங்க அதிகம் சம்பாரிக்கறாங்க, அதுலயும் வீட்டுக்காரம்மா வேலைக்கு எங்கயும் போகாம, வீட்டு வேலைகள பார்த்துகிட்டா, அவுங்க இன்னும் அதிகம் சம்பாரிக்கறாங்கன்னு ஒரு ஆராய்ச்சியில சொல்லியிருக்காங்க..

அனுபவம் உள்ள ஆளுக இதை பத்தி என்னப்பா நினைக்கரீங்க??
சொன்னீங்கன்னா நமக்கும் பிற்காலத்துல உபயோகம் ஆகும்.. :-)

--
#98

Tuesday, June 21, 2005

வருஷமாகிபோச்சுங்க..!





'வணக்கமுங்க..!!! - அப்படின்னு ஆரம்பிச்சு, என்ன எழுதறதுன்னு தெரியாம, அதையே புலம்பல்'ன்னு தலைப்பு போட்டு புலம்பி, அதுக்கப்புறம் தமிழ்பதிவுகள் பக்கத்துல நம்ம பேரு வந்ததுக்காக சிவப்பு விளக்கு எரியுது'ன்னு சந்தோஷப்பட்டு, அதுக்கப்புறம் பைக்ல இருது கீழ விழுந்து கைய உடைச்சுகிட்டத ஒரு (சோகமான) பயணக்குறிப்பு..!!'ன்னு எழுதி, அதை படிச்சு நல்லா தமாசா எழுதறீங்க ராசா, வலைப்பூ பக்கம் வாங்கன்னு மதி கூப்பிட்டு, அங்க நம்மள கடவுள் என்னும் முதலாளி கொடுத்த தொழிலாளி 'ன்னு அறிமுகப்படுத்தி, வலைப்பூவ நம்ம எழுத்தால ஒரு வாரம் சீரழிச்சுட்டு வந்து, சும்மா வெட்டியா எழுதறமேன்னு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு ஒரு கவிதை எழுதினேன்!!ன்னு தலைப்பு போட்டு நான் எழுதின கவிதைய போட்டு, சந்தோஷப்பட்டு, அப்புறம் நமக்கு வலைப்பூவில அறிமுகமான சத்யராஜ்குமார் ஊருக்கு வந்தப்போ என்ன கூப்பிட்டு பேசினத ஒரு சினிமா, ஒரு சந்திப்பு!ன்னு எழுதி, அப்படியே ஜாலியா இருந்தப்போ, இந்த காஞ்சி பிரச்சனை வந்து, நான் சும்மா இருக்கமாட்டாம அந்த ஒரு கேள்வின்னு ஒரு பதிவு போட்டு, அதுக்கு பின்னூட்டம் மட்டுமில்லை, மொத்தம் 6 தனிமடல் வந்துச்சு, நல்லா அழகான தமிழ் வார்த்தையில திட்டி, அப்புறம் அந்த பதிவை பத்தி மரத்தடியில விமர்சனம் ஆரம்பிச்சு, அப்புறம் அதுக்காக நான் ஒரு பதில் பதிவு போட்டு விளக்கி, கொஞ்சம் கடுப்பாகி, அந்த சமாச்சாரத்தையெல்லாம் விட்டுபுட்டு கொஞ்சம் கலகலப்பா, கவர்ச்சியா எதாவது போடுவோம்னு, ஒரு மும்பாய்ல வளர்ந்துட்டு இருக்கிற , ஒரு கோயமுத்தூர் தமிழ் பொண்னு, அவளோட வார கடைசியல என்னவெல்லாம் செஞ்சான்னு அவ பதிவுல போட்டிருந்தத நான் மும்பாய் டயரி'ன்னு இங்க போட, ரெண்டே நாள்ல எனக்கு மறுபடி ஒரு மடல், இங்க்லீஸ்ல இருக்கிற எல்லா கெட்ட வார்த்தையும் போட்டு, தமிழ் பொண்ணாச்சே, யாரோ அவளோட உறவுக்காரங்க, என்மூலமா அவளோட பதிவை பார்த்துட்டு, அவளை கண்டிக்க, எனக்கு மெயில்ல வந்தது சனி, (இப்போ அந்த பதிவையே காணோம்.. பாவம் :-( ), அப்புறம் தமிழ்மணம் வந்து, அப்புறம் கொஞ்ச நாள்ல நம்ம இலக்கிய ஆசை கொஞ்சம் ரொம்பவே நம்மள நோண்டிவிட சரி சிறுகதை எதாவது எழுதுவோம்னு வென்னிலா கேக் எழுதி, அதுவேற நல்லாயிருக்குன்னு நாலு பேரு சொல்லி, இப்பொ அடுத்தது எழுதலாமான்னு ஒரு யோசனை இருக்கு, நடுவால கொஞ்சம் வேலை ஜாஸ்த்தியானதுல, சும்மா அதையும் இதையும் எழுதி பதிவ ஓட்டிட்டு, கடைசியா நிஜமா..??ன்னு 17ம் தேதி எழுதிட்டு போனது, இன்னைக்கு வந்து பார்த்தா.. அப்பு 19ம் தேதியோட நான் வலைப்பதிவு ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆயிருக்கு..

நான் முன்னமே வலைப்பூவில சொன்ன மாதிரி உருப்படியா எதும் எழுதனும்னு ஆசைபட்டு வரலைங்க, சும்மா பதிவுகள் படிக்க வந்த ஆளு தான் நான், சரி, பள்ளிக்கூடத்தோட தமிழ் எழுதறதுக்கு ஜூட் விட்டுடமே, சும்மா ஒரு பதிவுன்னு வச்சு எதாசது எழுதுவோம்னு விளையாட்ட ஆரம்பிச்சது.. இன்னைக்கு ஒரு வருஷம் ஆகிபோச்சு, இன்னமும் ஆரம்பிச்சப்போ என்ன எழுதறதுன்னு ஒரு குழப்பம் இருந்துச்சு பாருங்க, அந்த குழப்பம் அப்படியே இருக்குதுங்க.

இவனெல்லாம் பதிவு வச்சுகிட்டு, நம்மள தொல்லை பண்றானே, இதுல ஒரு வருஷம் ஆச்சுன்னு சந்தோஷம் வேற படுறானேன்னு, உங்களுக்கு என் மேல எதும் கோவம் வந்தாக்க.. நான் தமிழ்பதிவுகள் தொடர்ந்து படிக்க ஆரம்பிக்க காரணமான ஐகாரஸ்பிரகாஷ், காசி , கே.வி.ராஜா, பி.கே.எஸ் என் பதிவுல முதல் முதலா பின்னூட்டம் குடுத்த மதி, 'மழை'ஷ்ரேயா, இன்னும் யாருனே தெரியாத ஆதித்யா, இவுங்களயெல்லாம் திட்டிக்கோங்க.






--
#97